நம்மில் பலருக்கு சில உணவுகளை சாப்பிடும் போதோ அல்லது சமைக்கும்போதோ சிறுவயது ஞாபகம் வந்துவிடும். அதுவும் சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கியிருந்தால் இது போன்ற நினைவுகள் அவ்வப்போது வந்து போகும். அதிலும் குறிப்பாக பள்ளிக்கு சென்ற நாட்கள், கல்லூரிக்குச் சென்ற நாட்களை எல்லாம் மறக்கவே முடியாது. காலையில் அம்மா சுடும் இட்லி, தோசை இப்படி சாப்பாட்டுக்காகவே தட்டோடு காத்திருக்கும் நாட்களை நினைக்கும் போதே புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒரு வித ஏக்கம் பிறந்து விடுகிறது.
அப்படித்தான் தாங்கள் சிறு வயதில் சாப்பிட்ட பெங்களூர் பேமஸ் பென்னே தோசை தாங்கள் குடிபெயர்ந்த மும்பையில் கிடைக்கவில்லையே என்று கவலையிலிருந்து தம்பதியினர் அதையே ஒரு பிசினஸ் ஆக மாற்றி கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர்.

அகில் ஐயர் மற்றும் ஸ்ரியா நாராயண் ஆகிய தம்பதியினருக்கு திருமணம் முடிந்து தங்கள் சொந்த ஊரான பெங்களூரை விட்டு மும்பைக்கு குடிப்பெயர்ந்தனர். பெங்களூரில் பென்னே தோசை என்று சொல்லப்படுகிற வெண்ணெய் நிறைந்த தோசை மிகவும் பிரபலம். அதே தோசையின் சுவையை மும்பையிலும் தேடியுள்ளனர். ஆனால் அப்படி ஒரு தோசை அங்கு கிடைக்கவில்லை.
மும்பை முழுவதும் தேடிப் பார்த்தும் ஒரு கடையில் கூட பென்னே தோசை கிடைக்கவில்லை. இதனால் தாங்களே ஒரு தோசை கடை வைக்க முடிவு செய்தனர். ஆனால் இந்த தம்பதியினருக்கோ உணவு துறையில் எந்த அனுபவமும் கிடையாது. இருந்தாலும் ஒரு உத்வேகத்தில் தங்களுடைய வேலையை விட்டுவிட்டு தோசை கடை தொடங்கினர்.
ஆரம்பத்தில் 12 பேர் மட்டும் அமரக்கூடிய ஒரு சிறிய கஃபே ஒன்றை மும்பையின் பாந்த்ரா பகுதியில் திறந்தனர். பின்னர் அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட அதே தோசையின் டேஸ்டை கொண்டு வர சிரமப்பட்டனர். தோசை மாவை சரியாக தயார் செய்ய பலமுறை முயற்சி செய்து பார்த்தனர். ஆரம்பத்தில் சட்னி கூட அவர்களுக்கு சரியாக வரவில்லை. பாரம்பரிய சுவையில் தோசையை விற்பனை செய்ய வேண்டும் என்று எண்ணிய தம்பதியினர் கர்நாடகாவில் இருந்து தோசை தவாக்களை ஆர்டர் செய்து வரவழைத்தனர்.
தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலும் அப்போது அவர்களிடம் அதிக முதலீடு இல்லை.எனவே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தனர். ஆனால் என்ன நடந்தாலும் தோசையின் பாரம்பரிய சுவை மட்டும் மாறவே கூடாது என்பதில் குறிக்கோளாய் இருந்தனர்.
இப்படி பல சிக்கல்களைச் சந்தித்தாலும்.. அவர்களுடைய விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது. வெகு விரைவில் அவர்கள் மும்பையில் தொடங்கிய கஃபே பிரபலம் அடைந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக வெண்ணெய் தோசை சாப்பிட வரத் தொடங்கினர். ஆரம்பத்தில் குறைந்த வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டிருந்த கஃபே நாளடைவில் பிரபலமடையத் தொடங்கியது.
தற்போது இந்த சிறிய கஃபேவில் நாளொன்றுக்கு 800-க்கும் மேற்பட்ட வெண்ணெய் தோசைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு மாதமும் ரூ.1 கோடிக்கும் மேல் வருமானமும் பார்த்து வருகின்றனர். பிரபல கிரிக்கெட் வீரரான விராத் கோலி மற்றும் அவருடைய மனைவியை அனுஷ்கா சர்மா ஆகியோரும் ஒரு முறை இந்த கஃபேவுக்கு வந்து அவர்களை பாராட்டியுள்ளனர்.
சிறியதாக தொடங்கப்பட்ட பிசினஸ் இன்று கோடிகளில் வருமானம் தருகிறது. பெரும்பாலான தொழில்முனைவோர்கள் இந்த தொழிலை செய்யலாமா? அந்த தொழிலை செய்யலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கையில்.. எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தன்னம்பிக்கையில் உயர்ந்திருக்கும் இந்த தம்பதியினர் உண்மையிலேயே இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாய் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
