தமிழ்நாடு சட்டசபையில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் (Budget) 2026-27 தான் தற்சமயம் மாநிலம் முழுவதும் பேசும் பொருளாக உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மாநில பட்ஜெட்டில் பொதுப் போக்குவரத்து மற்றும் எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicles) மேம்பாட்டிற்காக, முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு மாநில போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களை வலுப்படுத்தும் நோக்கில், 12,000 புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. மேலும், ரூ.6,121 கோடி மதிப்பில் 12,087 பேருந்துகள் வாங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் விடியல் இலவசப் பேருந்து பயணத் திட்டத்திற்காக ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பேருந்து இயக்கச் செலவுகளைச் சமாளிக்க ரூ.1,857 கோடி டீசல் மானியமும் வழங்கப்படுகிறது. அத்துடன், சுமார் 1,885 கி.மீ தொலைவிற்கான சாலைகள் ரூ.8,313 கோடி செலவில் நான்கு வழிச் சாலைகளாக விரிவுபடுத்தப்படுகின்றன.
தமிழ்நாடு, நாட்டின் 'எதிர்கால போக்குவரத்து' மையமாகத் தன்னை நிலைநிறுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. பேட்டரியில் இயங்கும் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் 100% சாலை வரி விலக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது டிசம்பர் 31, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பசுமைப் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க 1,125 எலெக்ட்ரிக் பேருந்துகள் (Electric Buses) பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மின்னணு (Electronics) உற்பத்தித் துறையை மேம்படுத்த அரிய வகை கனிமப் பொருட்களை பெறுவதற்கான வழித்தடத்தை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்திக்கு மிக முக்கிய மூலதனமாக இருக்கும் அரிய வகை கனிம பொருட்களுக்கு உலகம் முழுவதிலும் பெரும் தேவை உள்ள நிலையில், இந்திய அரசு உள்நாட்டிலேயே அவற்றை பெறுவதற்கான திட்டங்களை நாடாளுமன்றத்தில் சமீபத்திய பொது பட்ஜெட்டில் அறிவித்து இருந்தது.
அதில், குறிப்பாக தென்னிந்தியாவில் தான் இந்த வகை தனிமங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில அரசும் அதுகுறித்த திட்டங்களை தனது 2026-27 பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மறுப்பக்கம், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் வின்ஃபாஸ்ட் (VinFast) போன்ற உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்தி வருகின்றன.
குறிப்பாக, இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் சமீபத்தில்தான் ராணிப்பேட்டையில் புதிய ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார் தொழிற்சாலையை திறந்தது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (M.K Stalin) நேரில் கலந்துக் கொண்டார். இந்த ஆலையின் ஒரு பகுதி மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலைக்காக மொத்தம் சுமார் ரூ.9,000 கோடியை டாடா மோட்டார்ஸ் முதலீடு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அதன் மார்க்கெட்டை விரிவுப்படுத்தவும், இந்தியாவில் குறைந்த செலவில் உருவாக்கும் வாகனங்களை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று தனது உலகளாவிய வணிகத்தை விரிவுப்படுத்தவும் தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை செய்யவுள்ளது. ஏனெனில், இந்த வியட்நாம் ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தான் தொழிற்சாலை உள்ளது.
தமிழ்நாடு அரசின் 2026-27 பட்ஜெட்டில் சென்னையில் பன்முகப் போக்குவரத்து முனையங்களுக்காக கிண்டி மற்றும் வண்ணாரப்பேட்டைக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் - கிளம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூவிருந்தவல்லி - சுங்குவார்சத்திரம் ஆகிய மூன்று மெட்ரோ ரயில் (Metro Rail) நீட்டிப்புத் திட்டங்களுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. சென்னையில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்திற்காக குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து முனையம் விரைவில் செயல்படத் தொடங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விரைவில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், 2026-27 பட்ஜெட்டில் ஏகப்பட்ட சிறப்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்து தொடர்பான அறிவிப்புகள் மட்டுமே ஆகும். தேர்தல் நடைபெறவுள்ளதால் இதில் எத்தனை அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரும் என்பதையும், மாற்று கட்சி ஆட்சிக்கு வந்தால் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Credit: Drivespark


Click it and Unblock the Notifications