rakesh jhunjhunwala வைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், உலக பணக்காரர்களில் 160 பில்லியன் டாலர் உடன் முதல் இடத்தில் இருப்பவர் யார் எனச் சொல்லுங்கள்...? பில்கேட்ஸ் தான் நமக்கு முதலில் வாயில் வரும், ஆனால் சரியான விடை அமேஸான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸ். அவர் கையில் இப்போது 160 பில்லியன் டாலர் இருக்கிறதா..? என்றால் இல்லை. பின் எப்படி என்றால் எல்லாம் பங்குகள் தான். பங்குகளின் விலை ஏறும், இறங்கும் அல்லவா. அந்த பங்கு விலை ஏற்றத்தில் தான் இவ்வளவு வளர்ச்சி.
ஜெஃப் பிசாஸ்
மார்ச் 2014-ல் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...? வெறும் 32.4 பில்லியன் டாலர். மார்ச் 2015-ல் 34.8 பில்லியன் டாலர், மார்ச் 2016-ல் 45.2 பில்லியன் டாலர், மார்ச் 2017-ல் 72.8 பில்லியன் டாலர், மார்ச் 2018-ல் 112 பில்லியன் டாலர், கடைசியாக அக்டோபர் 2018-ல் 160 பில்லியன் டாலர். சமீபத்தில் தான் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி டாலர்) டாலர் ஆனது கவனிக்கத்தக்கது. இப்போது புரிந்திருக்கும் பங்குச் சந்தை விலை ஏற்றத்தின் வலிமை.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ஜெஃப் பிசாஸுக்கு பங்கு விலைகளில் லாபம் பார்க்க விருப்பமில்லை. ஆனால் பங்குச் சந்தையின் பிதாமகன் வாரன் பஃபெட் பார்த்தார். அதே போல இந்திய பங்குச் சந்தையின் பிதாமகர் ஜுன்ஜுன்வாலாவும் பங்கு விலை ஏற்றத்தை வைத்தே பணக்காரர் ஆனார். இன்று அவருடைய சொத்து மதிப்பு மார்ச் 2018 நிலவரப்படி 3 பில்லியன் அமெரிக்க டாலர் என ஃபோர்ப்ஸ் இதழ் சொல்கிறது. சுமார் 21,000 கோடி ரூபாய். எல்லாம் பங்குச் சந்தையினால் தான்.
தொட்டதெல்லாம் தங்கம்
1985-ல் வெறும் 1000 ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியவர் இன்று 21000 கோடி ரூபாய்க்கு பங்குச் சந்தைகள் மூலம் சொத்து சேர்த்திருக்கிறார். இவர் பங்குச் சந்தைக்கு வந்த போது சென்செக்ஸ் 150 புள்ளிகளில் வர்த்தகமானது. இப்போது 36,000 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த ஏற்றத்துக்கு இவரும் ஒரு காரணம் என அனைத்து அனலிஸ்டுகள் கற்பூரம் அணைப்பார்கள்.
பெரிய சொத்து
டைட்டன் நிறுவன பங்குகளில் மட்டும் இவருக்கு சுமார் 700 மில்லியன் டாலருக்கு பங்குகள் வைத்திருக்கிறார். டைட்டன் இன்று 930 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது என்றால் எல்லாம் இவரால் தான். இந்த மனிதர் அந்த பங்கில் முதலீடு செய்யத் தொடங்கியதில் இருந்து கண்ணா பின்னா ஏற்றம் தான்.
பேட்டிகள் பேச்சுகள்
இவரும் வாரன் பஃபெட் மாதிரி கொஞ்சம் பழைமைவாதி தான். வாரன் பஃபெட் எப்படி டெக்னாலஜி நிறுவனங்களை நம்பவில்லையோ அதே போல் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஜுன்ஜுன்வாலாவும் நம்பவில்லை. இன்று வரை அதன் செயல்பாடுகள் லாபமற்றது என்பது இவர் கருத்து. இவர் டிவியில் ஒரு பங்கைப் பற்றி பாசிடிவ்வாக பேசினால் விலை ஏற்றத்தில் பத்தி எரியும். நெகட்டிவ் என்றால் பாதாளத்துக்குக் கூடப் போகும். அப்படி ஒரு வாய் ராசி.
கிங் மேக்கர்
இதனாலே இவர் இந்திய பங்குச் சந்தைகளின் கிங் மேக்கராகத் தான் மற்ற முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், ஃபண்டு மேனேஜர்கள், சிறு குறு வர்த்தகர்கள், எம்பிஏ பட்டதாரிகள் எல்லாம் பார்க்கிறார்கள். இவர் ரேர் (RaRe) எண்டர்பிரைசஸ் என ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். Ra என்பது இவர் பெயரின் முதல் இரண்டு எழுத்து. RE என்பது இவர் மனைவி ரேகா பெயரின் முதல் இரண்டு எழுத்து. மனைவி மீது அவ்வளவு லவ் போல. சரி கதைக்கு வருவோம். இப்படிப் பட்ட, இந்திய பங்குச் சந்தையின் முகமாக பார்க்கப்படும் ஒருவர் மீது தான் செபி தில்லாக ஒரு குற்றம் சுமத்தி விசாரிக்கத் தொடங்கியது.
பிரச்னை
இந்தியாவின் பங்குச் சந்தையை கண்காணித்து நெறிமுறைப் படுத்தும் வேலை செபி அமைப்புடையது. இந்தியாவின் மிகப் பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மீது கடந்த மார்ச் 2017-ல் இருந்து ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியது. அந்த குற்றச் சாட்டை ஒப்புக் கொள்ளும் விதத்தில் 2.48 லட்சம் ரூபாய் அபராதத் தொகையாக செபி அமைப்புக்கு செலுத்தி விட்டு அமைதியாக இருக்கிறார் ஜுன்ஜுன்வாலா.
என்ன வழக்கு
ஜியோமெட்ரிக் லிமிடெட் என்கிற நிறுவனத்தை சிவ நாடாரின் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் வாங்கியது. அந்த வியாபாரத்தில் ஜுன்ஜுன்வாலா இன்சைடர் டிரேடிங் என்கிற முறையில் ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவனத்தில் நிறைய பங்குகளை வாங்கி குவித்து லாபம் பார்த்துவிட்டார் என்பது தான் வழக்கு. புரியவில்லையா..?
இன்சைடர் டிரேடிங்
ஒருவர் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். அவர் நிறுவனத்தின் பங்கு விலையை நிர்ணயிக்கக் கூடிய அல்லது பாதிக்கக் கூடிய சில விஷயங்கள், அவருடைய பதவிக்காகவும், அலுவலக வேலை தொடர்பாகவும் அவருக்கு கிடைக்கிறது. இந்த விவரங்களை வைத்து அவர் முன் கூட்டியே பங்குகளை வாங்கி லாபம் பார்ப்பது, அல்லது பங்குகளை விற்று நஷ்டம் தவிர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப் படிக் குற்றம்.
எடுத்துக் காட்டு
ஜனவரி 2018-ல் ராம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர். 02 ஜனவரி 2018-ல் இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளின் விலை 1000 ரூபாய். இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் விப்ரோ நிறுவனத்தை வாங்க திட்டமிடுகிறது. விப்ரோவும் சம்மதித்துவிட்டது. இந்த விஷயம் இன்ஃபோசிஸ் நிறுவன தலைவரான ராமுக்கு தெரிய வருகிறது. பேச்சு வார்த்தைகள் எல்லாம் முடிந்து இரு தரப்பும் ஒப்புதல் வழங்கிய நாள் 01 அக்டோபர் 2018. 01 அக்டோபர் 2018-ல் இன்ஃபோசிஸ் பங்கு விலை 1600 ரூபாய். விப்ரோ பங்கு விலை 850 ரூபாய்.
விளைவுகள்
இந்த செய்தி வெளிப்படையாக பொது மக்களுக்கும், பங்கு வர்த்தகர்களுக்கும் வெளியானால் என்ன ஆகும்.
1. இரண்டு பெரிய டெக்னாலஜி நிறுவனம் கை கோர்க்க இருக்கிறது என்பதால் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ இரு நிறுவனத்தின் பங்கு விலைகளும் அதிகரிக்கும்.
2. டிசிஎஸ் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் நம்பர் 1 டெக்னாலஜி நிறுவனமாக உருவாகும்.
எனவே எப்படிப் பார்த்தாலும் பங்குகளின் விலை அதிகரிக்கும்.
இது தான் இன்சைடர் டிரேடிங்
இப்போது இந்த அறிவிப்பை 15 அக்டோபர் 2018-ல் வெளியிடலாம் என இரு தரப்பும் முடிவு செய்கிறது. இப்போது ராமுக்கு கிடைத்த தகவல்கள் படி அவர் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவன பங்குகளில் எந்த பங்கையாவது 15 அக்டோபர் 2018-க்கு முன் வாங்கினால் அது இன்சைடர் டிரேடிங்.
ஏன் தவறு
அதே எடுத்துக் காட்டை வைத்துக் கொள்வோம். 01 அக்டோபர் 2018-ல் இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு விலை 1600 ரூபாய். விப்ரோ நிறுவன பங்கு விலை 850 ரூபாய். இன்னும் அறிவிப்பு வெளியாக 14 நாட்கள் இருக்கிறது. ஆக அக்டோபர் 01, 2018-லேயே ஒரு 50,000 இன்ஃபோசிஸ் பங்குகளையும், ஒரு 1,00,000 விப்ரோ பங்குகளையும் ராம் வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அறிவிப்பு வெளியாகி இரண்டு பங்குகளின் விலையும் அதிகரிக்கிறது. 31 அக்டோபர் 2018-ல் இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு விலை 2,600 ரூபாய். விப்ரோ நிறுவன பங்கு விலை 1,800 ரூபாய் என ராம் 01 அக்டோபர் 2018-ல் வாங்கிய 1,50,000 பங்குகளையும் விற்று விடுகிறார் .
திருட்டு லாபம்
இன்ஃபோசிஸ் லாபம் (விற்ற விலை 2,600 - வாங்கிய விலை 1,600) 1,000 ரூபாய், விப்ரோ லாபம் (விற்ற விலை 650 - வாங்கிய விலை 1,600) 950 ரூபாய். ஆக மொத்தம் இன்ஃபோசிஸ் மூலம் 50,000 * 1000 = 5,00,00,000 (5 கோடி ரூபாய்). விப்ரோ மூலம் 1,00,000 * 950 = 9,50,00,000 (9.5 கோடி ரூபாய்) என 14.5 கோடி ரூபாய் கிடைக்கும்.
இது ஏன் திருட்டு
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் மட்டும் 10 மீட்டர் முன்னால் இருந்து ஓடத் தொடங்கினால் யார் ஜெயிப்பார்கள். அது போலத் தான் பங்குச் சந்தையிலும். தகவல்கள் எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். அதன் பின் தான் பங்குகளை வாங்குவது, விற்பது போன்றவைகளில் ஈடுபட வேண்டும் என்பது விதி. தற்போது இந்தியப் பங்குச் சந்தையின் பிதாமகன் ஜுன்ஜுன்வாலா இந்த ரக பிரச்னையில் தான் மாட்டி இருக்கிறார்.
அதிகரித்த பங்குகள்
கடந்த ஏப்ரல் 2016-ல் ஜியோமெட்ரிக் என்கிற நிறுவனத்தை ஹெச்சிஎல் நிறுவனம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாவதற்கு முன்பே ஜுன்ஜுன்வாலாக்கு தனிப்பட்ட முறையில் தெரிய வந்துவிட்டதாம். தன்னுடைய பங்கை ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவனத்தின் 19 சதவிகிதமாக அதிகரித்துக் கொண்டார் என செய்திகள் கசிந்தது.
ஜுன்ஜுன்வாலாக்கு லாபம்
43 ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவன பங்குகளுக்கு 10 ஹெச்சிஎல் நிறுவன பங்குகள் வழங்கினார்கள். ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவன பங்கை வாங்கிக் குவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜியோமெட்ரிக் நிறுவனத்தில் 19% வரை பங்குகளை வாங்கிப் போட்டாராம். இதனால் ஜுன்ஜுன்வாலாக்கு பெரிய லாபம் சட்ட விரோதமாக கிடைத்திருப்பதாக விசாரிக்க ஆரம்பித்தது செபி அமைப்பு. அந்த விசாரணைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தான் ஜுன்ஜுன்வாலா செட்டில் மெண்டுக்கு போய் இருக்கிறார்.
சட்டப்படி குற்றவாளி அல்ல
குற்றங்களை ஏற்றுக் கொண்டவர்களோ அல்லது குற்றத்தை மறுப்பவர்களோ யாராக இருந்தாலும் செபி அமைப்பு சொல்லும் அபராதத்தை கட்டிவிட்டால் வழக்குகளில் இருந்து வெளியேறிவிடலாமாம். அப்படித் தான் நம் இந்தியப் பங்குச் சந்தையின் பிதாமகனும் வெளியேறி இருக்கிறார்.
வழக்கம் போல ஏழைகளுக்கு பொருந்தும் சட்டம், பணக்காரர்களுக்கு பொருந்தாது என்பதை தெளிவாகச் சொல்லி இருக்கிறது செபி. அதை ஒரு 2000 ரூபாய் கட்டைத் தூக்கி எரிந்து நிரூபித்து இருக்கிறார் இந்திய பங்குச் சந்தை பிதாமகர் ராகேஷ் ஜுன்ஜூன்வாலா.