இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பெரும்பாலும் இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் அதிகம் இருக்கும். என் பொண்ணுக்கு திருமணம் செய்யும்போது என்ன செய்ய போகிறேன். இப்படியே தங்கம் விலை ஏறிட்டே போகுதே?
ஆக நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாமா? அதனை எப்படி வாங்குவது? தங்க காயினை வாங்கி வைக்கலாமா? என்பது தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பொதுவாக தங்கம் என்பது நீண்டகால நோக்கில் லாபகரமான ஒன்றாக இருந்தாலும், எப்போது எதனை எடுப்பது என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கும். உதாரணத்திற்கு தங்க நகையாக வாங்கலாமா? காயினாக வாங்கலாமா? தங்க பத்திரமாக வாங்கலாமா? அல்லது தங்க ஃபண்டுகளாக வாங்கலாமா? என்று பல கேள்விகள் எழுகின்றன.
தங்க பத்திரம்
பொதுவாக தங்கம் முதலீடு என்பது உங்களின் தேவையின் அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்யலாம். குறிப்பாக நீண்டகால அடிப்படையில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் தங்க பத்திரத்தினை வாங்கி வைக்கலாம். இதன் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்பதால் விலை அதிகரிக்க அதிகரிக்க நல்ல லாபமும் கிடைக்கும். வட்டியும் கிடைக்கும். இன்னும் பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு உங்கள் பெண் குழந்தைக்கு 10 வயது என வைத்துக் கொள்வோம். அவரின் திருமணத்திற்காக தங்கம் வாங்க நினைக்கிறீர்கள் என்பது நல்ல விஷயம் தான்.
எது பயனளிக்கும்
ஆனால் நகையாக வாங்கி வைத்தால், அது உங்கள் பெண்ணின் திருமணத்தின் போதும் கூட அப்படியே தான் இருக்கும். ஆனால் பத்திரமாக வாங்கி வைக்கும்போது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உங்களது முதலீட்டின் மதிப்பும் அதிகரிக்கும். இதனால் உங்கள் பெண் குழந்தையின் திருமணத்திற்கு இது பயனளிக்கும்.
தங்க காயினாக வாங்கி வைக்கலாம்
இல்லை 3 - 5 ஆண்டுகள் தான் முதலீட்டு காலம் எனும்போது அதனை காயினாக வாங்கி வைக்கலாம். இதே ஓரிரு ஆண்டுகள் எனும்போது விலை எப்போதெல்லாம் பெரியளவில் குறைகிறதோ? அப்போதெல்லாம் சிறுக சிறுக வாங்கி வைக்கலாம். எனினும் பிசிகல் தங்கமாக வாங்கி வைப்பதை விட, இன்றைய காலகட்டத்தில் பல ஆப்ஷன்கள் வந்து விட்டன. குறிப்பாக நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க, தங்க பத்திரம் போன்றவற்றை வாங்கலாம்.
நகையாக வேண்டாம்?
இல்லை ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பவர்கள் இன்னும் பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என பல திட்டங்கள் நடப்பில் உள்ளன. இதே ஆபரணமாக வாங்கும்போது அது செய்கூலி சேதாரம், வரிகள், அதனை விற்கும்போது வரி, பாதுகாப்பு என பல பிரச்சனைகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் உடைகளுக்கு ஏற்ற நகைகளை அணியவே விரும்புகின்றனர். ஆக முடிந்தளவு நகையாக வாங்குவதை விட மாற்று வழியில் சேமிப்பு அல்லது முதலீடு செய்வது நல்லது. அதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும். எதிர்கால தேவையையும் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளலாம்.