பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தங்கத்திற்கு தனி மவுசு உண்டு. இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மட்டுமின்றி ஆபத்து காலத்தில் பயன்படுத்தப்படும் உற்ற தோழனாகவும் தங்கம் கருதப்படுகிறது. அப்படி இருக்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு எட்டாத கனியாக தங்கம் மாறக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வருமானத்தைத் தாண்டிய விலையேற்றம்: பைன்ட்ரீ மேக்ரோ என்ற நிறுவனத்தின் நிறுவனரான ரித்தேஷ் ஜெயின் தங்க விலை ஏற்றம் குறித்து கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை, இந்திய மக்கள் பெரும் வருமானத்தை விட பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறதே தவிர மக்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு இல்லை. உலக அளவில் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது.
தங்கத்தின் விலைக்கும் ஒவ்வொரு இந்திய குடும்பமும் பெரும் வருமானத்திற்கும் இடையிலேயே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் படிப்படியாக தூய தங்கத்தை கொண்ட 24 கேரட் தங்கத்திலிருந்து 22 கேரட் தங்கத்தை வாங்க தொடங்கினர். தற்போது 22 கேரட்டை விடுத்து 16 மற்றும் 12 கேரட் தங்கத்திற்கு மாறுவது குறித்து யோசித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் MCX சந்தையில் 10 கிராம் தங்கம் ரூ. 2,02,984 என்ற பெரும் உச்சத்தை தொட்டது. அதிலிருந்து தற்போது 26 சதவீதம் வரை சரிந்திருக்கிறது. அதாவது தற்போது சுமார் ரூ.53,000 வரையில் குறைந்து வர்த்தகமாகிறது.
இந்நிலையில் தற்போது முதலீட்டாளர்கள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்-வின் அறிவிப்பு எப்போது வரும் என்று காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். அந்த அறிவிப்புக்கு பின்னரே அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் உயருமா? அல்லது குறையுமா என்பது தெரியவரும்.
என்ன நடந்தாலும் தங்க விலையில் கணிசமான மாற்றம் ஏற்படலாம். அதேபோல ஈரான் போர் பதற்றம் காரணமாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதால் பாதுகாப்பு கருதி மீண்டும் மக்கள் தங்கத்தை வாங்க தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
கோல்ட் டிமாண்ட்: பொதுவாக டிமாண்ட் அதிகரிக்கும் போதும் தங்கம் விலை அதிகரிக்கும் அதாவது திருமண சீசன்கள் மற்றும் பண்டிகை காலங்களில் நகை கடைகளில் கூட்டம் அனல் பறக்கும். இது போன்ற சமயங்களில் தங்கம் விலை ஏறக் கூடும். ஆனால் இனிவரும் காலங்களில் மத்திய வங்கிகளும் பிற அரசு நிறுவனங்களும் தான் தங்கத்தை அதிகம் வாங்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏனெனில் உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் பாதுகாப்பு நலன் கருதி தங்களுடைய கஜானாவை தங்கத்தைக் கொண்டு நிரப்பி வருகின்றன. இப்படி விலை ஏறிக் கொண்டே போனால் தங்கத்தை வாங்குபவர்கள் மத்திய வங்கிகளாகத்தான் இருக்க முடியும். சாமானிய மக்களுக்கு அது எட்டாக் கனியாக இருக்கும் என்றும் ரித்தேஷ் ஜெயின் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் சர்வதேச வர்த்தகத்திற்கும் தங்கம் பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதுவரையில் உலக நாடுகள் தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள அமெரிக்க டாலர் அல்லது பிற நாடுகளின் நாணயங்களை வைத்து வர்த்தகம் செய்தது.
ஆனால் இப்போது அதிலும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இது குறித்து ரித்தேஷ் கூறுகையில் சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கோல்ட் வால்ட்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக் காட்டினார். அதாவது இனி நேரடியாக தங்கத்தின் மூலமாகவே வர்த்தக பரிமாற்றம் நிகழலாம் என்பதை இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
தங்கத்தின் எதிர்காலம்?: வரும் ஆண்டுகளில் தங்கம் விலை கண்டிப்பாக உயரும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8000 டாலர் முதல் 9000 டாலர் வரை உயர வாய்ப்பிருப்பதாகவும் ரித்தேஷ் கூறியுள்ளார். இதை இந்திய மதிப்பிற்கு கணக்கிட்டுப் பார்த்தால் தற்போதைய விலையை விட பல மடங்கு விலை உயர்வாக இருக்கும்.
இனிவரும் காலங்களில் தங்கம் அனைவரிடமும் இருக்கும் பொருளாக இருக்கப் போகிறதா? அல்லது முறையாக திட்டமிட்டு விலை குறைவைப் பயன்படுத்துவோரிடம் இருக்கும் அரிய பொக்கிஷமாக மாறப்போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications