தங்கம் , வெள்ளி எப்போதுமே முதலீட்டாளர்களை மோசம் போக செய்யாத உலோகங்கள். குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் தங்கம். வெள்ளி ஆகிய இரண்டு உலோகமும் பல மடங்கு விலை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு 100 மடங்குக்கும் அதிகமான லாபத்தை ஈட்டி தந்து திக்கு முக்காட வைத்தன. தங்கத்திலும் வெள்ளியிலும் ஆயிரங்களில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் லட்சாதிபதிகளாகவும், லட்சங்களில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகவும் மாறிய அதிசயத்தை நாம் கண்டோம்.
பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கியது. இதற்கு முதல் காரணம். அமெரிக்காவின் வர்த்தக மோதகள், பொருளாதார தடைகள் ஆகிய செயல்களால் பல்வேறு நாடுகளும் தங்கள் கைவசம் இருக்கக்கூடிய அமெரிக்க டாலரின் இருப்பை குறைத்து விட்டு அதிகமாக தங்கத்தை வாங்கி வைக்க தொடங்கின. சீனா தொடங்கி வைத்த இந்த ட்ரெண்ட்டை பல்வேறு நாடுகளும் பின்பற்றியதால் தங்கச் சந்தையில் டிமாண்ட் அதிகரித்தது தங்கத்திற்கான விலை அதிகரித்தது.

வெள்ளியை பொருத்தவரை தொழில்துறை ரீதியாக அதன் தேவை அதிகரித்ததால் அதன் விலையும் உயர்ந்தது. கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று இந்தியாவில் தங்கமும் வெள்ளி அதன் வரலாற்று உச்சபட்ச விலையை தொட்டன. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1, 34,000 ரூபாய் என்ற விலையை தொட்டது வெள்ளி ஒரு கிராம் 400 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. ஆனால் அதன் பிறகு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே பெரிய அளவில் விலை உயரவில்லை.
தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,04,000 ரூபாயிலிருந்து 1, 20,000 ரூபாய்க்கு உள்ளாகவும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 260 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்குள்ளும் ஏறுவதும் இறங்குவதுமாக தான் இருக்கிறது. இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை இப்படி கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்குமா அல்லது கடந்த ஆண்டை போலவே பல மடங்கு உயருமா என்பதுதான் பலருக்கும் இருக்கக்கூடிய கேள்வி. ஆனால் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே எப்போதுமே விலை கூட கூடிய பொருட்கள்தான் என்கிறது ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை.
கடந்த 2000 ஆவது நிதியாண்டில் இருந்து 2026-ம் நிதியாண்டு வரையிலான இந்த 26 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தங்கம் மற்றும் பங்குச்சந்தை தந்த லாபத்தை ஒப்பீடு செய்து ஹெச்டிஎஃப்சி ஒரு விரிவான அறிக்கையை தந்திருக்கிறது. அதில் பெரும்பாலான ஆண்டுகளில் தங்கம் சிறந்த லாபம் தந்திருக்கிறது. குறிப்பாக பங்குச்சந்தை சரிவிலிருந்து ஆண்டுகளில் எல்லாம் தங்கம் சிறந்த முறையில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை ஈட்டி தந்திருக்கிறது.

2000 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலான இந்த காலகட்டத்தில் பங்குச்சந்தைகளின் செயல்பாடு -4% ஆக இருக்கும் வேளையில் தங்கத்தின் செயல்பாடு +63.3% ஆக உள்ளது. CAGR முறையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் தங்கம் தந்த வளர்ச்சியை பார்த்தால் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 15 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை என்பது வளர்ச்சி கண்டிருக்கிறது.
தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் விலையும் முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் ஈட்டி தந்து இருக்கிறது. வெள்ளி தொழில் துறை ரீதியாக சோலார் பேனல் தொடங்கி மின்சார வாகனங்கள் மற்றும் 5ஜி உள்கட்டமைப்புகள் என தற்போது அதிக டிமாண்ட் இருக்கக்கூடிய பொருட்களில் எல்லாம் வெள்ளி முக்கியமான ஒரு உலோகமாக பயன்படுத்தப்படுவதால் சமீப ஆண்டுகளில் அதன் தேவை அதிகரித்து அதன் விலையும் உயர்ந்திருக்கிறது.
அப்படி பார்க்கும்போது கடந்த 20 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளியின் விலை 13.6 சதவீதம் என்ற சிஏஜிஆர் விகிதத்தில் வளர்ச்சியை தந்திருக்கிறது. ஈரான் போர் முடிந்தவுடன் மீண்டும் தங்கம், வெள்ளியின் விலைகள் உயரத்தொடங்கும் என முதலீட்டு நிபுணர்கள் கணித்து வரக்கூடிய நிலையில் ஹெச்டிஎப்சி வரும் காலங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சோலார் மின் உற்பத்தி, மின்சார வாகனம் , ஏஐ சிப்கள் உள்ளிட்டவற்றுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் அவற்றில் பயன்படுத்தப்படக் கூடிய வெள்ளிக்கான தேவையும் விலையும் அதிகரிக்கும்.
எனவே நீண்ட கால அடிப்படையில் கண்டிப்பாக வெள்ளியில் முதலீடு செய்யலாம் என கூறுகிறது ஹெச்டிஎஃப்சி அறிக்கை. அதேபோல பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கள் கைவசம் இருக்கக்கூடிய அமெரிக்க டாலரை குறைத்து விட்டு அதற்கு மாற்றாக தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன என்பதால் தங்கத்தில் செய்யும் முதலீடும் பெருகும் என்கிறது. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே நீண்ட கால அடிப்படையில் சிறந்த லாபத்தை தரும் எனக் கூறுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


