அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கான அடுத்த கட்ட அறிவிப்பினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், நம் உணர்வுகளில் கலந்துள்ள, பலருக்கும் பிடித்தமான விலையுயர்ந்த உலோகம். அதோடு நம்பிக்கை, பாரம்பரியம், அன்பு, காதல், இப்படி பலவற்றிற்கு ஏற்ற ஒரு சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம் உணர்வுகளில் கலந்துள்ள தங்கம் அந்தஸ்தின் அடையாள சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.
அதிலும் இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தினால், மக்கள் தங்களது முதலீடுகளையும் தங்கத்தில் செய்து வருகின்றனர். அது பிசிகல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி சேதாரம் என்ற செலவினங்கள் உள்ள நிலையில், அது வெறுமனே தங்கமாக அல்லாமல், பேப்பர் தங்களாக வாங்கி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அரசின் பாதுகாப்பான திட்டம்
தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே பல நிபுணர்களும் கூறி வரும் நிலையில், பேப்பர் தங்கங்கள் ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாக பார்க்கின்றனர். அதுவும் அது அரசின் திட்டம் என்றால் வேண்டாம் என்று கூற முடியுமா? நிச்சயம் இல்லை. சரி வாருங்கள் எப்போது முதல் கொண்டு முதலீடு செய்யலாம். மற்ற விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
கவர்ச்சிகரமான முதலீடு
ஆரம்பத்தில் இந்த தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, அரசு அறிவித்த ஒரு பாதுகாப்பான திட்டமாக இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போது சிறந்த, ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது.
நல்ல லாபம் கிடைக்கலாம்
ஆக பேப்பர் தங்கத்தின் மீது ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களுக்கு, இது சரியான திட்டம் என்றே கூறலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்னும் விலை அதிகரிக்ககூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த நேரத்தில் அரசின் இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு நல்ல ஆப்சன் தான். இது நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கிடைக்க வழிவகுக்கும்.
சிறந்த முதலீடு
சர்வதேச சந்தையானாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகமானாலும் தங்கம் விலையானது அவ்வப்போது குறைந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது விலை ஏற்றத்தில் தான் உள்ளது. அதோடு நிபுணர்களும் நிச்சயம் ஏற்றம் காணும் என்றே கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஆர்பிஐ தங்க பத்திர விற்பனையானது நாளை (ஜனவரி 11) அன்று தொடங்கவுள்ளது. இந்த முதலீட்டு திட்டமானது தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு, ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகவே பார்க்கப்படுகிறது.
கடைசி தேதி என்ன?
பத்தாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரத்தினை வாங்க கடைசி தேதி ஜனவரி 15, 2021 ஆகும். அதன் பிறகு ஜனவரி 19, 2021 இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வளவு விலை நிர்ணயம்
இந்த தங்க பத்திர விற்பனையில் கிராமுக்கு 5,104 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும்
பெற்று 5,054 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
பிணையமாக வைத்து கடன் பெறலாம்
இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன. மக்கள் நம்பிக்கையின் சின்னமாகவும் உள்ளது.
எவ்வளவு வட்டி?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
கேபிட்டல் டேக்ஸ்
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் இருக்காது. ஒரு வேளை உங்களால் எட்டு வருடம் வரை நீடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த சீரிஸ் எப்போது?
சீரிஸ் 10
சந்தா தேதி ஜனவரி 11 - ஜனவரி 15, 2021, பத்திரம் வழங்கும் தேதி ஜனவரி 19, 2021
சீரிஸ் 11
சந்தா தேதி பிப்ரவரி 1 - 5, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி பிப்ரவரி 9, 2021
சீரிஸ் 12
சந்தா தேதி மார்ச் 1 - 5, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி மார்ச் 9, 2021
தங்க ஆபரணமாக வாங்கி, அதற்கு செய்கூலி, சேதாரம் என செலுத்துவதை விட, இது போன்று அரசின் தங்க பத்திரங்கள் வாங்கி நல்ல லாபத்தினையும், வட்டியுடன் பெறலாம். இது உண்மையில் நல்ல வாய்ப்பு தான்.