அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கான அடுத்த கட்ட அறிவிப்பினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் கட்ட வெளியீடானது ஜூலை 12ம் தேதி அன்று தொடங்கவுள்ளது.
தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், இந்திய மக்கள் அனைவருக்கும் பிடித்தமான ஆபரணம் மற்றும் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக விளங்குகிறது. இதனால் முதலீடுகளிலும் தங்கத்தில் ஒரு கணிசமான தொகையை செய்கின்றனர்.
அதோடு தங்கம் பாதுகாப்பு புகலிடமாகவும், பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பு புகலிடத்தினை வாங்க தங்கம் பத்திரம் ஒரு நல்ல அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பான திட்டம்
அதிலும் இன்றைய காலகட்டத்தில் பிசிகல் தங்கத்தின் மீதான செலவுகளுக்கு மத்தியில், தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தினால், பேப்பர் தங்கங்களில் முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இப்படி பற்பல சாதகமான விஷயங்களுக்கும் மத்தியில் தங்கத்தில், அதுவும் அரசின் ஒரு திட்டத்தில் முதலீடு என்றால் வேண்டாம் என்று கூற முடியுமா என்ன? அதிலும் விலையேற்றத்திற்கு தகுந்தவாறு லாபம், வட்டி விகிதம் என, வரிச் சலுகைகளுடன் லாபம் கிடைக்கிறது என்றால் வேண்டாம் என்று கூற முடியுமா? அப்படி ஒரு திட்டத்தினை பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.
கவர்ச்சிகரமான முதலீடு
SGB எனப்படும் தங்கப் பத்திர திட்டமானது, அரசு ஆரம்பத்தில், பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, ஒரு பாதுகாப்பான திட்டமாக இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது. மற்ற தங்க முதலீடுகளுக்கு மத்தியில் சிறந்த, ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
நல்ல லாபம் கிடைக்கலாம்
உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பொருளாதாரம் என்னவாகுமோ என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த நேரத்தில் அரசின் இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு நல்ல ஆப்சன் தான். இது நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கிடைக்க சிறந்த வழியாகவும் இருக்கும்.
எப்போது தொடக்கம்
ஆர்பிஐ தங்க பத்திர விற்பனையானது ஜூலை 12, 2021 அன்று தொடங்கவுள்ளது. இந்த முதலீட்டு திட்டமானது தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு, ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகவே பார்க்கப்படுகிறது. இந்த தங்க பத்திரத்தினை வாங்க கடைசி தேதி ஜூலை 16, 2021 ஆகும். ஜூலை 20, 2021 இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு சலுகை
இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினை பெற்றுக் கொள்ளலாம்.
விலை நிர்ணயம்
இந்த தங்க பத்திர விற்பனையில் கிராமுக்கு 4,807 ரூபாயாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்று 4,757 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
எவ்வளவு முதலீடு?
பொதுவாக ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
பிணையமாக கடன் பெறலாமா?
இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன.
எவ்வளவு வட்டி?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
கேபிட்டல் டேக்ஸ்
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் இருக்காது. ஒரு வேளை உங்களால் எட்டு வருடம் வரை நீடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.