இந்தியாவில் தங்கம் என்றாலே அது ஒரு கவர்ச்சிகரமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. பேப்பர் தங்கத்தின் மீதான ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் ஆர்பிஐ வெளியீடு செய்யும் ஒரு முதலீட்டு அம்சம் என்பதால், ஒரு பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நல்ல லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் முதலீடு என்றால், அதில் தங்கம் முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது.
அதோடு செய்கூலி, சேதாரம் இல்லாத பாதுகாப்பான சற்று குறைந்த விலையில் உள்ள தங்க முதலீடு பற்றித் தான் பார்க்க போகிறோம்.
தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு
சமீப காலமாக தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், நிபுணர்கள் இன்னும் விலை அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர். ஆக நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதன் காரணமாக ஆர்பிஐ-யின் தங்க பத்திர திட்டம் நல்ல முதலீட்டு அம்சமாக பார்க்கப்படுகிறது.
பிசிகல் தங்கம் வேண்டாம்
முந்தைய காலத்தில் எல்லாம், நம்மவர்கள் தங்கத்தினை நகையாகத் தான் அதிகம் வாங்கி வைப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறிக் கொண்டுள்ளது. செய்கூலி, சேதாரத்திற்கு செலவிடுவதை குறைப்பதற்காக, பேப்பர் தங்கத்தினை நாட தொடங்கியுள்ளனர். ஆக தங்கம் சார்ந்த் ஃபண்டுகள், தங்கம் பத்திரம் என அனைத்திலும் நாளுக்கு நாள் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. இதனால் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுக்கும் முதலீடுகளாகவும் உள்ளனர்.
என்று ஆரம்பம்?
நடப்பு ஆண்டின் ஆறாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திர விற்பனையானது, ஆகஸ்ட் 30 அன்று தொடங்கவுள்ளது. செப்டம்பர் 03, 2021 கடைசி நாளாகும்.
இந்த தங்க பத்திரங்களை ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற முடியும். அரசும் இதனை ஊக்குவிக்கிறது
விலை நிர்ணயம் எவ்வளவு?
நாளை தொடங்கவுள்ள இந்த தங்க பத்திரத்தின் விலையானது கிராமுக்கு 4,732 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக இந்த பத்திர கொள்முதலுக்கு பணம் செலுத்திக் கொள்பவர்களுக்கு 50 ரூபாய் தள்ளுபடியுடன் 4,682 ரூபாயுக்கும் கிடைக்கும். இதே இதற்கு முந்தைய ஐந்தாவது தங்க பத்திர விற்பனையின் போது விலையானது 5,334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எங்கு வாங்கலாம்?
அரசின் இந்த தங்க பத்திரத்தினை இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். இதே வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். டிஜிட்டல் வங்கி மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு முதலீடு?
பொதுவாக ஒரு நிதியாண்டில் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை இந்த இறையாண்மை பத்திரங்களில் முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்களை இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்து கொள்ளலாம்.
முதிர்வு காலம்
இந்த தங்க பத்திரங்களுக்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன.
இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் சாதாரண தங்கத்தினைப் போலவே, நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் மிக நம்பிக்கையான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம்?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
மூலதன ஆதாய வரி உண்டு
தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி இல்லை.
ஒரு வேளை உங்களால் எட்டு வருடம் வரை நீடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.
ஆன்லைனில் எப்படி வாங்குவது?
உங்களது எஸ்பிஐ நெட் பேங்கிங் கணக்கினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் eServices என்ற ஆப்சனில் Sovereign Gold Bond என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு டெர்ம் அன்ட் கண்டிஷன்ஸ் என்பதனை கிளிக் செய்து proceed கொடுக்கவும்.
அதன் பிறகு registration form-னையும் பூர்த்தி செய்து சப்மிட் கொடுக்கவும்.
அதோடு உங்களது நாமினி விவரங்கள், எவ்வளவு வாங்க போகிறீர்கள் என்பதையும் தெளிவாக வாங்கும் படிவத்தில் கொடுக்கவும்.
இதன் பிறகு சப்மிட் என்பதை கிளிக் செய்யவும். இதனை கொடுக்கும் முன்பு, நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
உண்மையில் பிசிகல் தங்கத்தினை அதிக செலவு செய்வதை விட, இந்த பேப்பர் தங்கம் என்பது நல்ல லாபகரமானதாகும். வட்டி விகிதத்துடன், செய்கூலி சேதாரமும் மிச்சம்.