2025இல் விலை ஏறி ஆச்சர்யப்படுத்திய தங்கம், இந்த ஆண்டு விலை குறைந்து ஆச்சர்யப்படுத்துகிறது. இந்த விலை குறைவு நீடிக்க வேண்டும் என்பது தான் கோடிக்கணக்கான இந்திய மக்களின் எதிர்பார்ப்பு. இந்த சூழலில் பிரபல பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை இன்னும் குறையும் இப்போது கண்ணை மூடி கொண்டு தங்கம் வாங்கலாம் என கூறியுள்ளார்.
தங்கம் விலை கடந்த ஜனவரி 29ஆம் தேதி தன்னுடைய வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியது. அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1.33 லட்சம் ரூபாய் என்ற அளவை தொட்டது. இதனை அடுத்து படிப்படியாக விலை குறைந்து இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1,08,000 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. அதாவது தங்கம் விலை சவரனுக்கு 25,000 ரூபாய் வரை சரிந்துள்ளது.

சர்வதேச சந்தையில், கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கம் 5,500 அமெரிக்க டாலராக உச்சபட்ச விலையை தொட்டது. அதன் பின்னர் தங்கம் விலை கிட்டத்தட்ட 25% வரை சரிந்து, 4,200 டாலருக்கும் கீழ் வந்துள்ளது. இந்தியச் சந்தையிலும் MCX தங்கம், விலை சரிவைக் கண்டுள்ளது.
ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலை குறைந்துள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், இந்த ஆண்டில் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்று சிக்னல் கொடுத்துள்ளது. வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, வட்டி தராத தங்கத்தின் மீது முதலீடு செய்யும் ஆர்வம் குறையும். இதுவும் தங்கம் விலை குறைய காரணம்.
வட்டி விகிதம் குறையாமல் அதே அளவில் நீடிப்பதால் அமெரிக்க அரசு பத்திரங்களின் லாப விகிதம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் சந்தையில் கடன் வாங்கி முதலீடு செய்திருந்தவர்கள் தங்களின் முதலீடுகளை விற்பனை செய்து லாபம் பார்த்துவிட்டனர். இந்த சூழலில் அர்த்தா பாரத் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிபுணர் சச்சின் சவ்ரிக்கர் இந்த சரிவு என்பது ஒரு தற்காலிகமான சுழற்சி (Cyclical pressure) தானே தவிர, தங்கத்தின் நிரந்தர வீழ்ச்சி அல்ல என தெரிவிக்கிறார்.
உலக அளவில் நாடுகளின் கடன் சுமை அதிகரிப்பது, மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குவது போன்ற காரணங்களால் நீண்ட கால அடிப்படையில் தங்கத்திற்கான மதிப்பு அப்படியே தான் இருக்கும் என்கிறார்.தற்போது விலை இன்னும் குறையுமா அல்லது இதுதான் மிகக்குறைந்த விலையா என்று யாராலும் துல்லியமாக சொல்ல முடியாது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு நீண்ட கால முதலீடு செய்ய நினைப்பவர்கள, இந்த விலை சரிவை தங்கம் வாங்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் கூறுகிறார்.
பிரபல பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசனும் இப்போது கண்ணை மூடி கொண்டு தங்கம் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளார். தன்னுடைய யூடியுப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க மத்திய வங்கி இப்போதைக்கு வட்டி விகிதங்களை உயர்த்தவில்லை, ஆனால் இனி வரும் நாட்களில் நிச்சயம் உயர்த்தும் என்கிறார். அதாவது உலக சந்தையில் நவம்பருக்கு பின் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும், அவ்வாறு உயர்த்தினால் தங்கம் விலை சரியும் என்கிறார்.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை தற்போது 4,300 டாலர்களை வரை விற்கப்படும் நிலையில் நவம்பருக்கு பின் 3,700 டாலர்கள் வரை குறையும் என்கிறார். இது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்கிறார். எனவே கண்ணை மூடி கொண்டு தங்கத்தில் குறிப்பாக gold bees வாங்கி போட்டால் பின்னாளில் பெரிய லாபம் நிச்சயம் என்கிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


