கடந்த 2 வாரமாக உலக சந்தையிலும், உள்ளூர் சந்தையிலும் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. இதனால் இனி தங்கம் விலை என்ன ஆகும்? விலை குறையுமா? தங்கம் வாங்காமல் விலை குறையட்டும் என காத்திருக்கலாமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
Emkay Wealth Management நிறுவனம் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பதற்கான கணிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, தங்கம் விலை திருத்தம் மற்றும் குறுகிய கால ஏற்ற இறக்கம் இருந்தாலும், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் நீண்ட கால அடிப்படையில் விலை உயர தான் போகின்றன என கூறியுள்ளது.

மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தேவை மற்றும் உலகளாவிய வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்புகள் தங்கம், வெள்ளிக்கான வலுவான ஆதரவை வழங்குவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகளாவிய சந்தையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது டிசம்பரில் தங்கம் விலை மேலும் 12 சதவீதம் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
அப்படி பார்த்தால் சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 12 சதவீதம் உயரும் என்றால் ஒரு கிராம் 16,083 ரூபாயாக உயரும். அப்படி பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 1.29 லட்சத்தை எட்ட உள்ளது என கணிக்கிறது. மத்திய வங்கிகள் நீண்ட காலத்திற்கு வட்டி விகிதங்களை குறைக்கும் நிலைக்கு மாறினால், தங்கம் வாங்குவதற்கான ஆர்வம் மேலும் அதிகரிக்கும். அதாவது தங்கத்தில் முதலீடு அதிகரித்து விலையும் கூடும் என தெரிவிக்கிறது.
தங்கம் விலை உயர்வு என்பது தற்காலிக நிகழ்வுகளால் உருவாவது அல்ல, மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது, தங்களது கையிருப்பை பல்வகைப்படுத்துவது போன்ற வலுவான அடிப்படை காரணிகளாலேயே இந்த உயர்வு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய விலை ஏற்ற சுழற்சியில் ஒரு பகுதி மட்டுமே முடிந்துள்ளதால், நீண்ட காலத்திற்கு இதன் வளர்ச்சி தொடரும் என இந்நிறுவன மேலாளர் விவேக் சோக்சி கூறியுள்ளார்.
வெள்ளியை பொறுத்தவரை உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்க்கு 68 மற்றும் 74 டாலர் என்ற அளவுகளுக்குள் பயணிக்க வாய்ப்புள்ளது. தங்கம் போல இல்லாமல், வெள்ளி தொழில்துறை தேவைகள் மற்றும் சந்தை சென்டிமென்ட்களுடன் அதிகத் தொடர்பு கொண்டது. இதனால் வெள்ளியின் விலையில் குறுகிய காலத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும் என்பதால் முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்பட அறிவுறுத்துகிறது.
தங்கம், வெள்ளியில் சமீபத்தில் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் வழக்கமான சுழற்சி நகர்வுகளின் ஒரு பகுதி என்ற கோணத்திலேயே முதலீட்டாளர்கள் பார்க்க வேண்டும். அதாவது விலை இறங்கிவிட்டால் ஒரே அடியாக இறங்கும் என்றோ விலை ஏறிவிட்டால் ஒரே அடியாக ஏறும் என்றோ பார்க்காமல் நீண்ட கால அடிப்படையில் விலை ஏறும் என்ற மனநிலைக்கு வர அறிவுரை வழங்குகிறது. இதற்கு இந்தியாவின் கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் கடந்த ஓராண்டிலேயே 40% லாபம் தந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
முதலீட்டாளர்களின் ரிஸ்க் எடுக்கும் அளவு, முதலீட்டு காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப, தங்கத்திலும் வெள்ளியிலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான முதலீட்டை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது போர்ட்ஃபோலியோவை பாதுகாக்கும் என எம்கே வெல்த் அறிக்கை தெரிவிக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


