தங்கம் சமீப நாட்களாக விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. செப்டம்பர் மாதம் தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் விலை குறைந்திருக்கிறது, 2 நாட்கள் விலை கூடியுள்ளது, 1 நாள் விலை மாறவில்லை. இந்நிலையில் பிரபல பன்னாட்டு முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ், தங்கம் விலை குறித்த தனது புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதாவது ஒரு டிசம்பருக்குள் உலக சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,900 டாலரை எட்டும் என கணித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட 4,600 டாலர்கள் என்ற கணிப்பை விட இது அதிகமாகும். அதாவது தங்கம் விலை இனி ஏறுமுகமாக இருக்கும் என தெரிவிக்கிறது. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நிதி சார்ந்த ஆபத்துகளை எதிர்கொள்ள உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் அந்நிய செலாவணி கையிருப்பை குறைத்து அதிக தங்கத்தை வாங்கி வைக்க தொடங்கியுள்ளன என்பதால் தங்கத்தின் டிமாண்ட் அதிகமாகும் என தெரிவித்துள்ளது.

தற்போது 4,400 டாலருக்கு தங்கம் வர்த்தகமாகிறது. இந்த கணிப்பின் படி டிசம்பருக்குள் தங்கம் விலை 11.36% விலை உயரும். இதனை ஒரு சவரன் ஆபரண தங்கம் விலைக்கு கணக்கீடு செய்தால் இன்னும் 3 மாதங்களில் அதாவது டிசம்பருக்குள் தங்கம் விலை ஒரு சவரன் இன்றைய விலையை விட சுமார் 13,000 ரூபாய் உயரும். அந்த வகையில் டிசம்பரில் ஒரு சவரன் ஆபரணதங்கம் விலை 1,26,000 ரூபாயை கடந்திருக்கும் என கணிக்கலாம்.
கோல்ட்மேன் சாக்ஸ் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டில் மத்திய வங்கிகள் மாதத்திற்கு சராசரியாக 50 டன்கள் தங்கத்தை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2022-க்கு முன்பு மாதத்திற்கு 17 டன்களாக மட்டுமே இருந்தது. உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்கா , ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தது. இதில் இருந்து ரஷ்யா தனது பொருளாதாரத்தை காக்க தங்கத்தையே பயன்படுத்தியது. எனவே உலக நாடுகளும் எதிர்கால பாதுகாப்புக்காக அதிக தங்கம் வாங்குகின்றன.
முன்னதாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற முந்தைய அச்சம் தற்போது தணிந்துள்ளது. இது தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பொதுவாக வட்டி விகிதங்கள் குறைந்தால் பத்திரங்கள் போன்ற வட்டி தரும் சொத்துகளின் மீது நாட்டம் குறைந்து தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் நகர்வார்கள்.
கோல்ட்மேன் சாக்ஸ் தங்கம் விலை உயர்வுக்கு மற்றொரு காரணத்தை கூறுகிறது. உலகளாவிய தங்க சுரங்கங்களின் ஆண்டு உற்பத்தி தோராயமாக 3,500 டன்கள். இதில் பெரும்பாலான பகுதியை மத்திய வங்கிகளே மொத்தமாக வாங்கி செல்வதால், நகை வியாபாரிகள், ஈடிஎஃப், மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் தங்கத்தின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் சந்தையில் அதிக முதலீட்டு பணம் இல்லாமலேயே விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது என தெரிவிக்கிறது.
கோல்ட்மேன் சாக்ஸின் உலகளாவிய தலைவர் டோனி கிம், தங்கத்தின் தற்போதைய விலை திருத்தம் தற்காலிகம் என்கிறார். அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் அமெரிக்கப் பத்திரங்களின் ஈவுத்தொகை சற்று உயர்ந்திருப்பதாலும், வேலைவாய்ப்பு தரவுகள் வலுவாக இருப்பதாலும் தங்கம் விலையில் தற்காலிக தொய்வு ஏற்பட்டுள்ளது என்கிறார். இருப்பினும், தங்கத்தின் விலை ஏற்றம் (Bull Run) இன்னும் முடிவுக்கு வரவில்லை என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதாரத் தரவுகள் மற்றும் வங்கிகளின் கொள்கை மாற்றங்களால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். எனவே, ஒரே நேரத்தில் மொத்தமாக தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்த்து, சந்தை இறங்கும் போது அல்லது விலை சரிவை சந்திக்கும் போது படிப்படியாக முதலீடுகளை செய்வது தான் தங்க முதலீட்டில் லாபம், காண சிறந்த உத்தி என கோல்டு மேன் சாக்ஸ் கூறுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


