கடந்த ஆண்டு முழுவதும் விலை உயர்ந்து தினமும் தலைப்பு செய்தியாக இருந்த தங்கம் விலை இந்த ஆண்டு விலை குறைந்து தலைப்பு செய்தியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தங்கம், வெள்ளி விலைகள் கணிசமாக உயர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வரலாற்று உச்சபட்ச விலையை தொட்டன. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1.33 லட்சமாகவும் ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்தையும் கடந்தது.
ஈரான் போருக்கு பின்னர் தங்கம், வெள்ளி விலைகள் சரிந்தன. இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.7 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக போர், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் (Inflation) போன்ற காரணிகளால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டிருக்க வேண்டும். ஆனால், ஈரானில் போரால் அதற்கு நேர்மாறாக தங்கம் விலை சரிவையே சந்தித்துள்ளது.

உலக சந்தையில் தங்கம் தற்போது அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 அமெரிக்க டாலருக்கும் கீழேயே வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவிலும் ஆபரண தங்கம் விலை 1.10 லட்சம் முதல் 1.20 லட்சத்திற்குள்ளாகவே தேங்கிவிட்டது. இந்நிலையில் புகழ்பெற்ற காமர்ஸ்பேங்க் (Commerzbank) வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கையும் தங்கத்தின் விலை உயர்வு ரத்து செய்யப்படவில்லை, அது தற்காலிகமாக தள்ளிபோயுள்ளது என கூறுகிறது.
தங்கம் விலை தான் உயரவே இல்லையே இதில் முதலீடு செய்வது வீண் என முதலீட்டாளர்கள் எண்ணிவிட கூடாது ஏனெனில் தடைகளை எல்லாம் கடந்து இந்த ஆண்டு இறுதியில் தங்கம் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல லாபத்தை வழங்கும் என்று காமர்ஸ்பேங்க் கணித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்கான தங்கத்தின் விலை இலக்கை 5,000 டாலரிலிருந்து 4,800 டாலராக சற்றே குறைத்துள்ளது. இருந்தாலும் இது தற்போதைய விலையிலிருந்து சுமார் 8 சதவீத உயர்வைக் குறிக்கிறது.
அடுத்த இரண்டு மாதங்களில் ஈரான் போ பதற்றங்கள் தணிந்து, ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படும் என்றும் இதனால் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை குறைந்து இதனால் பணவீக்க அழுத்தம் குறைந்து, வட்டி விகித உயர்வுக்கான தேவையும் இல்லாமல் போகும் என்கிறது. எனவே தங்கம் விலை உயர தொடங்கும் என்கிறது. அதாவது 2 மாதங்களுக்கு பின் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பும் என கூறுகிறது.
தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கான அடிப்படை காரணிகள் இன்னமும் மிகவும் வலுவாகவே உள்ளது என்கிறது. எனவே, 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 5,200 டாலரை எட்டும் என்ற தங்களுடைய நீண்ட கால கணிப்பில் காமர்ஸ்பேங்க் உறுதியாக உள்ளது. அதாவது 20% விலை உயர்வு இருக்கும் என அடித்து கூறுகிறது. அப்படி பார்த்தால் ஒரு சவரன் தங்கம் இன்று 1.13 லட்சத்திற்கு விற்கப்படுகிறது என்றால் அதன் விலை 1.40 லட்சமாக உயரும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அமெரிக்காவின் தேசியக் கடன், உலகளவில் அமெரிக்க டாலர் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிப்பது, நடுத்தர மற்றும் பெரும் நிறுவன முதலீட்டாளர்கள் தங்களின் சொத்து மதிப்பைத் தக்கவைக்க தங்கம் போன்ற உறுதியான சொத்துக்களையே அதிகம் விரும்புவது ஆகியவை தங்கம் விலையை உயர்த்துமாம்.
தங்கத்தின் பெரும் விலை உயர்வு சற்றே தள்ளிப்போயுள்ளது என கூறும் இந்த அறிக்கை நீண்ட காலப் பார்வையில் தங்கத்தின் மதிப்பு உயர்வது உறுதி. எனவே, இப்போது ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவதற்கான ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும் என கூறுகிறது.
எனவே தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் மேலும் விலை குறையும் என காத்திருக்காமல் தற்போது முதலீடு செய்தால் இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டிலேயே நல்ல லாபத்தை அறுவடை செய்ய முடியும் என கூறுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


