இந்தியர்கள் மனதில் உள்ள முதலீடுகளில் முக்கிய பங்கு வகிப்பது தங்கமும், வங்கி பிக்ஸட் டெபாசிட்டும் தான். ஆனால் இதில் எது சிறந்தது? நடப்பு ஆண்டில் இதில் எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
எது லாபகரமானதாக இருக்கும்? ஏன்? என்ன காரணம்? வட்டி விகிதம் என்ன? மற்ற விவரங்கள் என்ன வருங்கள் பார்க்கலாம்.
முதலீடு என்றாலே நம்மில் பலருக்கும் நியாபகம் வருவது? லாபகரமானதாக இருக்க வேண்டும். பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டிற்கு எந்த பங்கமும் இருக்க கூடாது. இப்படி அடுக்கடுக்கான எதிர்பார்ப்புகள் இருக்கும்.
தங்கம் ஒரு சிறந்த முதலீடு
அப்படி நினைக்கையில் பெரும்பாலான மக்கள் தங்கள் முதலீடுகளில் தங்கம் சிறந்தது என நினைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களது முதலீடுகளில் தங்கத்தின் பங்கு கொஞ்சமாவது இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். சொல்லப்போனால் தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள் கூட, மாத மாதம் தங்களது முதலீட்டினை தங்கத்திற்காக செய்கின்றனர். அதிலும் இந்த நடவடிக்கை கிராமப்புறங்களில் மிக அதிகம்.
ஆபரண தங்கத்தில் முதலீடு
அவர்களில் பெரும்பாலானோர் தங்கத்தினை வெறும் ஆபரணங்களாகவே வாங்க நினைக்கின்றனர். ஆனால் தங்கத்தினை வெறும் நகையாக வாங்குவதில் பெரிதாக எந்த பயனும் இல்லை. மாறாக அவற்றை ஆபரணமாக மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஆக இது ஒரு சரியான முதலீடு இல்லை எனலாம். இன்றைய காலகட்டத்தில் தங்கம் சார்ந்த பல முதலீடுகள் வந்துள்ளன.
பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்யலாம்
குறிப்பாக பேப்பர் தங்கம் எனப்படும் தங்க ஃபண்டுகள், தங்க பத்திரம், தங்க இடிஎஃப், தங்கம் சார்ந்த பங்குகள், கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் என வாய்ப்புகள் உள்ளன. ஆக அவற்றை திட்டமிட்டு சரியான முறையில் செயல்படுத்தினாலே போதும். நல்ல லாபம் பார்க்கலாம். கடந்த ஆண்டில் தங்கம் சுமார் 28% வருவாயினை கொடுத்துள்ளது.
லாபம் அதிகம்
அதிலும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் நல்ல லாபம் கொடுத்த ஒரு முதலீடாக இருந்தது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் கூட 16% வருமானத்தினையும். இதே வங்கி வைப்பு நிதிகள் 6% வருமானத்தினையும் கொடுத்துள்ளன. ஆக தங்கம் எப்போது பாதுகாப்பு புகலிடமாகத் தான் உள்ளது. சிறந்த முதலீடாகத் தான் உள்ளது. ஆனால் செய்யும் முதலீடு என்பது இங்கு வேறுபடுகிறது. ஏனெனில் நீங்கள் தங்க பத்திரமாகவோ, ஃபண்டுகளாகவே அல்லது கமாடிட்டி சந்தையிலோ வாங்கியிருந்தால் அந்த லாபத்தினை பெற்றிருக்க முடியும்.
பாதுகாப்பு புகலிடத்தில் ஆர்வம்
வெறும் ஆபரணமாக வாங்கி வைத்திருந்தால், செய்கூலி, சேதாரம் என தான் கொடுத்திருப்போம். ஆக இந்த கொரோனா காலத்தில் சர்வதேச பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்தித்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடத்தினை நோக்கி நகர்ந்தனர். இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்தது.
மெதுவான வேகத்தில் வளர்ச்சி
தற்போது நாம் 2021ல் உள்ளோம். இந்த ஆண்டில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்யலாமா? என்பது தான் கேள்வியே. சர்வதேச அளவில் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது என கூறி வருகின்றன. எனினும் அவை மிக குறைவான வேகத்திலேயே உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க பொருளாதாரம் மெதுவாக வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவதாக கூறப்படுகிறது.
தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்
இதனால் அமெரிக்கா தொடர்ந்து வட்டி விகிதத்தினை குறைவாக வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வட்டி விகிதமானது 0-க்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விகிதமானது குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு மாறமல் இருக்கும் என்று மத்திய வங்கி உறுதியளித்துள்ளது. அமெரிக்க அரசு 900 பில்லியன் டாலர் தூண்டுதல் தொகுப்பிற்கு அங்கீகரித்துள்ளது. இது சந்தையில் அதிகப்படியான பணப்புழக்கத்திற்கு வழிவகுக்கும். இது தங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேவை அதிகரிக்கும்
இந்தியாவினை எடுத்துக் கொண்டால் மிகபெரிய இறக்குமதியாளர். இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அரசு கடந்த பட்ஜெட் 2021ல் இறக்குமதி வரியையும் குறைத்துள்ளது. இது இறக்குமதிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனாவின் காரணமாக பல நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இதனால் நடப்பு ஆண்டில் திருமனம் உள்ளிட்ட நிகழ்வுகள் அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சாதகமான விஷயங்கள்
அதோடு தற்போது கொரோனாவே இருந்தாலும், தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்துள்ளது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகளவில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்தியாவில் கொரோனாவின் காரணமாக டிஜிட்டல் பேமென்ட் வளர்ச்சிகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பேடிஎம், போன்பே, கூகுள் பே உள்ளிட்ட ஆப்கள், தங்கத்தினை மிக குறைந்த அளவில் கூட வாங்க அனுமதிக்கின்றன. இது இன்னும் பலரை தங்கத்தில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது.
தங்க பத்திர திட்டம்
இதே தங்க பத்திர திட்டம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி கண்டு கொண்டே தான் உள்ளது. இதனை நீண்டகால முதலீட்டாளர்களும் தங்களது போர்ட்போலியோவில் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தினை வங்கி வைப்பு நிதியுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். இப்படி ஒப்பிடும்போது தங்கமே சிறந்தது என தங்கத்தின் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
லாப விகிதம்
கடந்த 10 ஆண்டுகள் தங்கம் கிட்டதட்ட 100 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 15%, கடந்த மூன்று ஆண்டுகளில் 20%மும், 2020ல் மட்டும் 28% லாபம் கொடுத்துள்ளது. இதே இந்தியாவின் முன்னணி வங்கிகளின் வட்டி விகிதத்தினை பார்க்கும்போது, வங்கி வைப்பு நிதியில் 5 - 6%மும், இதே ஸ்மால் வங்கிகளில் 7%மும் வருமானம் கிடைத்துள்ளது.
எப்பவும் பாதுகாப்பு புகலிடம் தான்
இது பணவீக்கத்திற்கு சற்று மேலாக உள்ளது. இது கடந்த 2020ல் 4.95% ஆகவும் இருந்தது. 2021ல் 3.75% ஆகவும் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் வருவாயை விட குறைவாகும். 2021ல் நாங்கள் அதிக பணவீக்கத்தினை எதிர்பார்க்கிறோம். இதனால் நீண்டகால நோக்கில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருக்கும். இதுவே பாதுகாப்பு புகலிடமாக இருக்கும்.
தங்க பத்திர சலுகை
இதனால் அரசின் தங்க பத்திரம் முதலீடு என்பது சரியானதொரு முதலீட்டு ஆப்சனாக இருக்கும். ஏனெனில் இந்த தங்கத்திற்கு வருடத்திற்கு 2.5% வட்டி உண்டு. இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். எனினும் இந்த வட்டி வருவாய்க்கு டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை. அதோடு இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
எது சிறந்த முதலீடு?
இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன. அதோடு கடந்த சில ஆண்டுகளாக கிடைக்கும் வருமானத்துடன் ஒப்பிடும்போது, வங்கி வைப்பு நிதியை விட, தங்கம் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது.