தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக பெருமளவில் உயராமல் ஒரு வரம்பிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தங்கம் விலை வேகமாக உயர்ந்தது. டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டது. கடந்த ஜனவரியில் 1.33 லட்சம் என வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியது.
பிப்ரவரி மாதம் முதல் தங்கம் விலை படிப்படியாக சரிந்தது. ஈரான் போரும் தங்கம் விலை குறைய முக்கிய காரணமாக இருந்தது. இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1.05 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் தங்கம் விலை இனி உயருமா அல்லது மந்தமாகவே இருக்குமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் நீடிக்கிறது. இதற்கு யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் ஒரு அறிக்கை மூலம் பதில் தந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித்தந்த தங்கம் இனி வரும் காலங்களில் மந்தமடையக்கூடும் என யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முன்பு நிலவிய Savings Glut என்ற பொருளாதார சூழல் மாறி, தற்போது உலகம் Capital Formation என்ற புதிய சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளது, இந்த மாற்றமே தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
பணத்தை வங்கியில் வைத்திருப்பதாலோ அல்லது அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதாலோ கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்ததால் தான் தங்கத்தை நோக்கி அனைவரும் வந்தார்கள், ஆனால் தற்போது அரசு பத்திரங்கள் மற்றும் இதர முதலீடுகளில் கிடைக்கும் வருமானம் அதிகரித்து வருவது, தங்கத்தில் இருந்து முதலீட்டாளர்களை விலக வைத்துள்ளது என்கிறது.
ஏஐ, மின்மயமாக்கல் , பாதுகாப்பு உற்பத்தி மற்றும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக உலக நாடுகள் மூலதனத்தை அதிகமாக செலவழிக்க தொடங்கியுள்ளன. இதனால், தாமிரம் , அலுமினியம், யுரேனியம் மற்றும் மின்சாரம் தொடர்பான உலோகங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த முதலீடுகள் பொருளாதாரத்தை வளர்க்கும் அதேவேளையில், வட்டி விகிதங்களை உயர்த்தும், இது மறைமுகமாக தங்கத்தின் விலையை குறைக்கும் என கூறுகிறது.
தங்கம் ஒரேடியாக வீழ்ச்சியடையும் என கூறவில்லை. அதற்கு பதிலாக, விலை பெரிய அளவில் உயர முடியாமல் நீண்ட காலத்திற்கு ஒரே நிலையில் இருக்கக்கூடும் என தெரிவிக்கிறது. அதாவது அடுத்த 3-5 ஆண்டுகளில் தங்கம் விலையில் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க வேண்டாம் என்கிறது. போர் அல்லது பெரும் புவிசார் அரசியல் நெருக்கடி ஏற்படும்போது தங்கம் குறுகிய காலத்திற்கு விலை உயர வாய்ப்புள்ளது. ஆனால், அந்த விலை உயர்வு நிலையானதாக இருக்காது என சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு, வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்துவது சிறந்தது என இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது. இனிவரும் ஆண்டுகளில் தொழில்துறை உலோகங்களே சந்தையில் முன்னிலை வகிக்கும் என யெஸ் செக்யூரிட்டீஸ் குறிப்பிடுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

