நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொருளாதாரம் சரிந்து வருகிறது. மக்கள் பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இன்னும் பலர் சம்பள குறைப்பு என பல பிரச்சனைகளால் தவித்து வருகின்றனர்.
ஏன் பலர் தங்களது அத்தியாவசிய தேவைக்கே கூட கஷ்டப்படும் நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில் மக்களின் கையில் நீடித்த லாக்டவுன் காரணமாக பணப்புழக்கமும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் தாங்கள் வங்கிகளுக்கு செலுத்தும் கடன்களையும் கட்ட முடியாமல் தவித்த நிலையில் தான், ரிசர்வ் வங்கி 6 மாதம் இஎம்ஐக்கு அவகாசம் வழங்க வங்கிகளுக்கு அனுமதி கொடுத்தது. அதே ரெபோ விகிதத்தினையும் குறைத்தது.
கடன் விகிதம் குறைப்பு
இதன் பலனை வெளிப்படுத்தும் விதமாக இந்தியாவின் தனியார் துறையில் உள்ள முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி அதன் சில்லறை பிரைம் கடன் விகிதத்தினை 20 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.இது ஜூன் 12 முதல் அமலுக்கு வரும் என்றும் ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் பயன்
இந்த வட்டி குறைப்பானது தற்போதுள்ள அனைத்து ஹெச்டிஎஃப்சி சில்லறை வீட்டுக்கடன் மற்றும் வீட்டுக் கடன் அல்லாத கடன் வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் என்றும் ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.
வட்டி விகிதம் எவ்வளவு?
இந்த பிரதம கடன் விகிதம் என்பது வணிக வங்கிகள் தங்களது மிகவும் நம்பகமான மற்றும் கடன் பெறக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கும் வட்டி வீதமாகும். ஆக இந்த வட்டி குறைப்பினை தொடர்ந்து வட்டி விகிதம் 7.5 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்பிஐ என்ன சொல்கிறது?
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது அனைத்து கடன்களுக்குமான எம்சிஎல்ஆர் விகிதத்தினை குறைத்த நிலையில், தற்போது தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது.
ரெபோ விகிதம் குறைப்பு
கடந்த மாதம் மத்திய வங்கி ரெபோ விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் குறைத்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது பணப்புழக்கம் அதிகரிக்கும் பொருட்டு மத்திய வங்கியானது இந்த அதிரடி குறைப்பினை செய்தது. இதனை அமல்படுத்தும் விதமாக ஹெச்டிஎஃப்சி வங்கி, தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு சற்று பலன் அளிக்கும் விதமாக வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது.