கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையைச் சேர்ந்த ஒருவர் மூன்றரை கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்க முயன்றபோது அவரது பாலிசி தொகையை ஹெச்டிஎப்சி நிறுவனம் குறைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனி அதிக தொகை உள்ள பாலிசி எடுக்கும்போது சில நிபந்தனைகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எனவே முன்பு போல இனி அதிக தொகைக்கு மிக எளிதில் பாலிசியை எடுக்க முடியாது என்ற தகவல் பாலிசி எடுப்பவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிசி வகைகள்
இந்தியாவில் பல்வேறு வகையான பாலிசிகள் உள்ளன என்பதும் குறிப்பாக மருத்துவ காப்பீடு பாலிசி, எதிர்கால கல்வி காப்பீடு பாலிசி, ஆயுள் காப்பீடு என்று பல விதத்தில் உள்ளன. ஒரு நல்ல பாலிசி எடுத்து கொண்டால் பாலிசி எடுத்தவரின் குடும்பத்திற்கும் மிகப்பெரிய பயன்களை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் காப்பீடு பாலிசி
குறிப்பாக ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்தவர்கள் எதிர்பாராத விதத்தில் மரணமடைந்துவிட்டால் அவர்களது குடும்பத்திற்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்பதும், அந்த தொகை மரணம் அடைந்தவர் குடும்பத்தின் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிபந்தனைகள்
இந்த நிலையில் ஆயுள் காப்பீடு பாலிசி வழங்குவது மிகவும் எளிதாக கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த நிலையில் தற்போது அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்புபோல் இணையத்திலோ அல்லது மொபைல் செயலிகள் மூலமோ எளிதாக அதிக தொகைக்கான பாலிசிகளை பெற்றுவிட முடியாது என்ற தகவல் புதிதாக பாலிசி எடுப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னர் வரை எவ்வளவு பெரிய தொகைக்கும் ஒருவர் பாலிசி எடுக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கானோர் இறந்து போனதால் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டன. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் உடல் நலத்தை கண்காணிக்க அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.
ஒரு கோடி ரூபாய் பாலிசி
முன்னர் ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கும் மேல் காப்பீடு எடுப்பவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகள், விதிமுறைகள், மருத்துவ சோதனை ஆகியவை இல்லாமல் இருந்தது. ஒரு கோடி ரூபாய்க்கான பிரீமியம் தொகையை மட்டும் செலுத்தினால் எளிதாக காப்பீடு எடுக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது.
நிபந்தனைகள்
தற்போது ஒரு கோடி மற்றும் அதற்கு அதிகமாக காப்பீடு செய்ய விரும்புவர்கள் உடனடியாக காப்பீடு செய்ய முடியாது என்றும் சில பரிசோதனைகளை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரூ.3.50 கோடி பாலிசி
சமீபத்தில் மும்பையில் ஹெச்டிஎஃப்சி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.3.50 கோடிக்கு ஒரு நபர் பாலிசி எடுக்க முயற்சி செய்தபோது அந்த நபர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர் என்பதை தெரிந்துகொண்ட ஹெச்டிஎஃப்சி அவருக்கு ஒரு கோடி மட்டுமே பாலிசி வழங்க முடியும் என அறிவித்துள்ளது. பாலிசியை காப்பீடு எடுப்பவர்களை உடல்நலம், பணி, அவரது வருமானம் ஆகியவை கணக்கிடப்பட்டு தான் இனி அதிக தொகைக்கு பாலிசி வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விளக்கம்
இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி லைப் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ விபா பதல்கார் அவர்கள் கூறுகையில், 'நாங்கள் காப்பீடு வழியாக பாதுகாப்பு வழங்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தாலும் அதிக ரிஸ்க் இருக்கும் நபர்களுக்கு அவர்கள் கேட்கும் தொகைக்கு பாலிசி கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம். காப்பீட்டு நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின் படி தான் அந்த நபருக்கு ரூ.3.50 கோடிக்கு பாலிசி மறுக்கப்பட்டது, கொரோனா பாதிப்பால் குறைக்கப்படவில்லை' என்று கூறினார்.
விண்ணப்பதாரரின் குற்றச்சாட்டு
ஆனால் ரூ.3.50 கோடிக்கு விண்ணப்பித்தவர் இதுகுறித்து கூறுகையில், என்னுடைய பணி, வசிக்கும் இடம், வருமானம் ஆகியவை மட்டுமின்றி கொரோனா தொற்று எனக்கு பாதிக்கப்பட்டதும், அதற்கான சிகிச்சை பெற்ற விவரங்களும் என்னுடைய பாலிசி பரிசீலனையின்போது கணக்கில் கொள்ளப்பட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெரிய தொகை பாலிசி
இதுகுறித்து பாலிசிபஜார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சஜ்ஜா பிரவீன் சௌத்ரி அவர்கள் கூறியபோது, 'காப்பீடு பெற விரும்பும் நபரின் உடல்நலம், பாலிசி எடுப்பதற்கு முன் அவர் பெற்ற சிகிச்சைகள் ஆகியவை கண்டிப்பாக இன்சூரன்ஸ் விதிகளின்படி ஆய்வு செய்யப்படும் என்றும், பெரிய தொகைக்கு ஒருவர் காப்பீடு பெற விரும்பினால் எந்த விவரங்களும் பெற்றுக் கொள்ளாமல் அவருக்கு காப்பீடு வழங்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.