இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில், வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளன. இதனால் இதற்கு ஈடான வேறு ஏதேனும் முதலீட்டினை பற்றி சொல்லுங்கள் என குட் ரிட்டர்ன்ஸ் ரீடர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.
வங்கி வைப்பு நிதியில் வட்டி குறைவாக உள்ள இந்த நேரத்தில், இதனை தாண்டி இதே அளவு பாதுகாப்பான திட்டம் எனில், அது அஞ்சலக திட்டங்கள் தான்.
ஏனெனில் இன்று வங்கிகளை விட அஞ்சலகத்தில் வட்டி விகிதம் அதிகம். அணுகும் முறையும் எளிது. இந்தியா முழுவதும் சேவையை பெற்றுக் கொள்ள முடியும். இன்றைய காலக்கட்டத்தில் வங்கி சேவையினை போலவே அஞ்சலகமும் அனைத்து சேவைகளையும் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சல் துறையின் தொடர்வைப்புக் கணக்கு திட்டம் பற்றித் தான்.
அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி
இது ஒரு பாதுகாப்பான, சிறுசேமிப்பு திட்டம் எனலாம். ஏனெனில் இது அஞ்சலக துறையானது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அரசு அமைப்பாகும். இன்றைய காலகட்டத்தில் முன்னணி வங்கிகள் கூட வட்டி விகிதத்தினை குறைவாகத் தான் வழங்கி வருகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது தொடர் வைப்பு நிதி திட்டத்தில் வட்டி விகிதம் என்பது சற்று அதிகம் தான்.
எவ்வளவு முதலீடு?
இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். இங்கு அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும் எனில், இந்த திட்டத்தில் அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி கணக்கினை தொடங்க வேண்டும். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்கள் உள்ளன. எனினும் இதனை நீட்டித்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்
இங்கு நீங்கள் 100 ரூபாயைக் கூட சேமிக்க முடியும். எல்லாவற்றிற்கும் சந்தை அபாயம் என்பது இல்லை. வட்டி விகிதம் வங்கிகளை விட அதிகம். தற்போதைய நிலையில் 5.8% வரை உள்ளது. தற்போது வட்டி விகிதம் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ள நிலையிலும் கூட, அஞ்சலத்தில் வட்டி விகிதம் அதிகம்.
யார் தொடங்கலாம்
அஞ்சலகத்தின் இந்த தொடர்வைப்பு நிதி கணக்கினை பெரியவர்கள் தனியாக தொடங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லையெனில் ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். இதே 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த கணக்கினை பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். இது குழந்தைகளுக்கும் சேமிப்பும் பழக்கத்தினை உருவாக்கும்.
எவ்வளவு கிடைக்கும்?
நீங்கள் மாதம் 10,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். வட்டி விகிதம் 5.8% என வைத்துக் கொண்டால், உங்களது முதிர்வு தொகை 10 வருடங்களுக்கு பிறகு, சுமார் 16 லட்சம் ரூபாய் கிடைக்கும். எனினும் இந்த தொகை முழுமையாக கிடைக்க வேண்டுமெனில், தொடர்ச்சியாக இடையில் நிறுத்தாமல் முதலீடு செய்ய வேண்டும்.
சலுகைகள் உண்டு
இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன் கூட்டியே செலுத்தினால் தள்ளுபடி சலுகையினை பெறலாம். குறிப்பாக 6 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரையிலான தவணைகளை முன் கூட்டியே செலுத்தினால் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
எவ்வளவு தள்ளுபடி?
12 மாதங்களுக்கான தொகையினை முன் கூட்டியே செலுத்தினால், ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். 12 டொபாசிட்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். எனினும் இப்படி முன் கூட்டியே செலுத்தப்படும் தொகையானது குறிப்பிட்ட காலங்களில் செலுத்த முடியும்.
இடையில் பணம் எடுக்கலாமா?
தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு நிலுவையில் 50% இடையில் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகும் தொடர விரும்பினால் விண்ணப்பத்தினை கொடுத்து தொடரலாம். இவ்வாறு நீட்டிக்கப்படும் கணக்கினை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். எனினும் இதன் முதிர்வு காலம் 5 வருடங்களாகும்.
கடனும் பெறலாம்
12 தவணை தொகை செலுத்திய பிறகு அதற்கு எதிராக, நீங்கள் இந்த தொடர் வைப்பு கணக்கின் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம். இது உங்களது நிலுவையில் 50% பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை ஒரே தவணையாகவும் அல்லது மாத தவணையாகவும் கூட செலுத்திக் கொள்ளலாம்.
கடன் பிடித்தம்
இந்த கடனுக்கு வட்டி விகிதமாக 2% + RD வட்டி விகிதமும் சேரும். ஒரு வேளை இந்த கடனை உங்களது திட்டம் முதிர்வு அடையும் வரை செலுத்தவில்லை எனில், உங்களது கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த கடனை நீங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சல் அலுவகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.