இந்தியர்களுக்கு தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு பாதுகாப்பான முதலீடு. இதனால் தான் நம் பெற்றோர் எப்போதுமே கையில் காசு சேர்ந்துவிட்டால் அதற்கு தங்கம் வாங்கிவிட வேண்டும் அல்லது சிறு சிறுக சேமித்து தங்கம் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
தங்கம் எப்போதுமே மோசம் போகாத ஒரு முதலீடு. தங்கத்தின் விலை உயர்வே அதற்கு சாட்சி. தங்கத்தை நகையாக வாங்கலாமா, ஈடிஎஃப்பில் முதலீடு செய்யலாமா, தங்கம் சிறந்த முதலீடு ஆனால் எந்த வயதில் இருந்து முதலீடு செய்யலாம்? எப்படி முதலீடு செய்யலாம்? என பல சந்தேகம் மக்களுக்கு உள்ளது. எனவே தங்க முதலீட்டை தொடங்குவதற்கான முக்கியமான 5 விஷயங்களை பார்க்கலாம்.

தெளிவான நிதி இலக்கு: தங்கத்தில் செய்யும் முதலீடு எதற்கானது? அவசர கால நிதிக்காகவா அல்லது நீண்ட கால சேமிப்பிற்காகவா? என முடிவு செய்யுங்கள். உங்கள் இலக்கை பொறுத்தே நீங்கள் எந்த வகையான தங்கத்தில் (டிஜிட்டல் தங்கம், கோல்ட் இடிஎஃப், அல்லது தங்கப் பத்திரங்கள், நகை) முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். முதலீடு தான் நோக்கம் என்றால் ஈடிஎஃப், பத்திரங்கள் சிறந்தது. நகை தான் வேண்டும் என்றால் கண்ணை மூடி கொண்டு நகை சீட்டு போடலாம்.
உங்கள் நிதி நிலை என்ன: எடுத்த உடனேயே பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. உங்கள் வருமானத்திற்கு ஏற்ப, தினசரி செலவுகளை பாதிக்காத வகையில் சிறிய தொகையை முதலீடு செய்ய தொடங்குங்கள். குறிப்பாக, புதிய முதலீட்டாளர்கள் கோல்ட் இடிஎஃப் போன்ற முறைகளை தேர்வு செய்யலாம். இதில் மிக குறைந்த தொகையிலிருந்து முதலீட்டை தொடங்க முடியும். நகை வாங்க வேண்டும் என்பவர்கள் தங்க நகைச்சீட்டு போடலாம். வருமானம் உயரும் போது முதலீட்டையும் உயர்த்தி கொள்ளுங்கள்.
நம்பகமான தளம்: டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யும்போது, அந்த தளம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதை உறுதிப்படுத்துவது மிக முக்கியம். பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான பரிவர்த்தனைகளை வழங்கும், SEBI போன்ற அமைப்புகளால் கண்காணிக்கப்படும் தளங்களை மட்டுமே தேர்ந்தெடுங்கள். ஏனெனில் இதில் தான் உங்க முதலீட்டுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்கும். எனவே ஈடிஎஃப் இதில் சிறந்ததாக உள்ளது. நகை சீட்டு என்றால் நம்பகமான கடையாக இருக்க வேண்டும்.
சந்தை நிலவரம்: தங்கத்தின் விலை சர்வதேச காரணிகளால் அடிக்கடி மாறக்கூடியது. எனவே, அவ்வப்போது தங்கத்தின் விலை நிலவரங்களை கண்காணிப்பது அவசியம். இது சரியான நேரத்தில் முதலீடு செய்யவும், லாபத்தை பெறவும் உதவும். விலை குறையும் போது அதிகமாக வாங்குவது விலை உயரும் போது ஆவரேஜ் செய்வது என முடிவெடுக்கலாம். இருப்பினும், குறுகிய கால மாற்றங்களை கண்டு பயப்படாமல், நீண்ட கால நோக்கில் முதலீட்டை தொடர்வதே சிறந்த லாபம் தரும்.
தொடர்ச்சியான முதலீடு : முதலீட்டில் வெற்றி பெற மிக முக்கியமானது ஒழுக்கம். குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்காமல், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இது நீண்ட காலத்தில் பெரிய செல்வத்தை உருவாக்க உதவும்.
விலைவாசி உயர்விலிருந்து பணத்தின் மதிப்பை பாதுகாக்க தங்கம் ஒரு சிறந்த கருவி. எனவே முடிந்த வரை இளம் வயதிலேயே தொடங்குங்கள், அப்போது தான் குறைந்த பணத்தில் நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். தங்க நகை, கோல்டு ஈடிஎஃப் என எதுவாக இருந்தாலும் மொத்த பணத்தையும் அதில் போடாமல் உங்கள் போர்ட்போலியோவில் 20 முத 25% வரை தங்கத்திற்கு இடம் தருவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications

