இந்தியப் பெண்களின் முதலீட்டுப் பழக்கம், மாற்றங்கள் குறித்துச் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது, இந்த ஆய்வில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பல முக்கியமான விஷயங்கள் தெரிய வந்துள்ளது.
இந்திய வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத வகையில் தற்போது பெண்களின் நிதியியல் சுதந்திரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்றால் மிகையில்லை. இந்தச் சூழ்நிலையில் எதிர்கால வளர்ச்சி, முதலீடு பழக்கத்தில் மிகப்பெரிய அளவிலான மாற்றம் நம்ம ஊர் பெண்கள் மத்தியில் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
கிரிப்டோ முதலீடு
கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான பையூகாயின் நிறுவனம் செய்துள்ள ஆய்வில் கடந்த வருடத்தை விடவும் இந்தத் தளத்தில் பெண் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 1,040 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தளத்தின் மொத்த முதலீட்டாளர்களில் சுமார் 14.66 சதவீதம் பேர் பெண்கள் என்றும், இதில் 35.73 சதவீதம் பேர் 25 முதல் 34 வயதுடைய பெண்கள் என்றும் தெரிவித்துள்ளது.
பங்குசந்தை முதலீடு
ஆன்லைன் முதலீட்டு தளமான Groww செய்த ஆய்வில் 18 முதல் 25 வயதுடைய பெண்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் fixed deposit-ஐ விடவும் பங்குச்சந்தையில் அதிகமானோர் முதலீடு செய்து வருகின்றனர் எனக் கூறுகிறது. குறிப்பாக இந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் மத்தியில் பிக்ஸட் டெபாசிட் செய்தவர்களை விடவும் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாகும்.
தங்கம்
இதேபோல் இந்த ஆய்வுகளில் பங்குபெற்ற அனைத்து பெண்களும் தங்கத்தை முக்கிய முதலீட்டுத் தளமாகக் கருதுகின்றனர். குறிப்பாக 10 லட்சத்திற்கும் அதிக வருடாந்திர வருமானம் கொண்ட பெண்கள் தங்கத்தில் ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
ரியல் எஸ்டேட்
வருடம் 30 லட்சத்திற்கும் அதிக வருமானம் கொண்ட பெண்களுக்கு ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவிலான தொகையை முதலீடு செய்யத் தயாராக உள்ளனர்.
குடும்பச் செலவுகள்
இந்த ஆய்வில் பங்குபெற்ற சுமார் 28,000 பெண்களில் 43 சதவீதம் பேர் குடும்பத்திற்கும், குடும்பத் தேவைகளுக்காகவும், குடும்ப வளர்ச்சிக்காகவும் தங்களது வருமானத்தில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்வதாகத் தெரிய வந்துள்ளது.
பயணம் மற்றும் கல்வி
18 முதல் 25 வயதுடைய பெண்கள் மத்தியில் சுமார் 28 சதவீதம் பேர் பயணங்கள் செய்யச் செலவு செய்கின்றனர். இதேபோல் 28 சதவீத பெண்கள் உயர் கல்விக்காகச் செலவு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி
இதேபோல் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் கொண்ட பெண்கள் வருமான வரியைச் சேமிக்க முதலீடு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 18 சதவீத பெண்கள் இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் 13 சதவீத பெண்கள் சந்தை முதலீட்டு மூலம் பணத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிதியியல் சுதந்திரம்
பெண்களுக்கு நிதியியல் சுதந்திரம் கிடைப்பது மூலம் தான் மட்டும் உயராமல் ஒரு சமூகத்தையே அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் திறன் உள்ளது. பெண்களுக்கான வாய்ப்புகள் இன்னும் சந்தையில் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் வேகமாக முன்னேற்றம் அடையும்.


Click it and Unblock the Notifications