இந்திய மக்களுக்கு சேமிப்பு , முதலீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தங்கம் தான். ஆனால் தங்கம் முதலீடா அல்லது வெறும் பொருளா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதற்கு எடில்வீஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Edelweiss Mutual Fund) நிறுவனத்தின் தலைவரான ராதிகா குப்தா தெளிவான விளக்கம் தந்துள்ளார்.
ராதிகா குப்தா நிதி சந்தையில் பல ஆண்டுகளாக செயல்படும் ஒரு நபர். தனித்துவமான முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமில்லாமல் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள முதலீட்டு நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது உடமை சார்ந்த முதலீடுகள் (Physical Investments) மற்றும் நிதி சார்ந்த முதலீடுகள் (Financial Investments) இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தங்கம் வாங்குவதையும், முதலீட்டுக்காக தங்கம் வாங்குவதையும் பெண்கள் தனித்தனியாக பார்க்க வேண்டும் என்கிறார். பெரும்பாலான மக்கள் தாங்கள் வாங்கும் நகைகளை எளிதில் விற்க விரும்புவதில்லை. மேலும், Physical வடிவில் தங்கத்தை வாங்கும் போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி மற்றும் அதனை பாதுகாப்பாக வைப்பதற்கான சேமிப்பு செலவுகள் அதிகம் என்கிறார்.
இதுவே உங்கள் போர்ட்ஃபோலியோவிற்காக அதாவது ,முதலீடு தான் நோக்கம் என்றால் தயவுசெய்து ஃபைனான்சியல் கோல்டு அதாவது Gold Funds அல்லது ETF வாங்குங்கள் என பரிந்துரை செய்கிறார். இதில் நகைகளை வீட்டில் பத்திரப்படுத்த வேண்டிய கவலை இல்லாமல் தங்கத்தின் விலை உயரும் போதெல்லாம் அதன் பலனை பெறலாம். மேலும் நாம் கொடுக்கும் பணத்தில் பெரும்பகுதி முதலீடு செய்யப்படும் இதுவே நகையில் கணிசமான பணம் செய்கூலி, சேதாரம் என்ற பெயரில் சென்றுவிடும் என கூறுகிறார்.
மேலும் ஒட்டுமொத்த முதலீட்டையும் தங்கத்திலேயே முடக்காமல், ஈக்விட்டி சந்தையிலும் முதலீடு செய்ய கூறுகிறார். தங்கம் என்பது ஒரு பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றார். அடுத்ததாக இந்தியாவில் சொந்த வீடு வாங்குவது என்பது வெறும் கணக்கு பார்த்தோ அல்லது ஸ்பிரெட்ஷீட் போட்டோ செய்யக்கூடிய விஷயம் அல்ல, அது ஆழமான உணர்வுபூர்வமான விஷயம் என்கிறார். எனவே சொந்த வீடு வாங்குவதை முதலீடாக பார்க்க கூடாது என கூறுகிறார்.
நாம் வாழும் சொந்த வீட்டை எப்போதுமே ஒரு முதலீட்டு சொத்தாக கணக்கிட கூடாது. வீடு என்பது நமக்கு பாதுகாப்பையும் நிம்மதியையும் தருமே தவிர, அவசரமாக பணம் தேவைப்படும்போது அதை உடனடியாக விற்க முடியாது. ஓய்வூதிய காலத்தில் பலரிடம் பல வீடுகள் இருக்கலாம், ஆனால் கையில் ரொக்க பணம் இல்லயெனில் அவதிப்படுவார்கள் என தெரிவிக்கிறார்.
நாம் வசிக்கும் வீட்டை தாண்டி, முதலீட்டுக்காக வாங்கப்படும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் தான் உண்மையான சொத்து என்கிறார். தங்கம், ஆடம்பர பொருட்கள், வீடுகள் மதிப்புமிக்கவைதான். ஆனால், மதிப்பு என்பதும் அதன் நிதி பயன்பாடு என்பதும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள அறிவுரை வழங்குகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

