இரண்டாம் கட்ட கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பல இடங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில் வங்கிகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டது. அதோடு வங்கிகளும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வங்கிகளுக்கு வருமாறு கூறுகின்றது. அதிலும் முடிந்த மட்டில் மக்கள் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துமாறும், முடியாதபட்சத்தில் வங்கிகளை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளன.
இப்படியொரு நிலையில் தான் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கேஓய்சி விவரங்களை அப்டேட் செய்ய, வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது.
மெயில் அனுப்பலாம்
மேலும் தேவையான ஆவணங்களையும் நீங்கள் வங்கிக்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் இதற்கான ஆவணங்களை இமெயில் அல்லது கொரியர்களில் அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதற்காக தங்களின் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடியை பயன்படுத்தி அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் அப்டேட் செய்யலாம்
இவ்வாறு மெயில் மூலமாக ஸ்கேன் செய்து அனுப்பப்படும் கே.ஓய்.சி ஆவணங்கள், வங்கி கிளைகளின் இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கேஓய்சி விவரங்களை ஆன்லைனிலும் அப்டேட் செய்து கொள்ளலாம்.
என்னென்ன ஆவணங்கள்?
ஆன்லைனில் அப்டேட் செய்வதற்காக நீங்கள் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு, NREGA Card, பான் கார்டு, என்ஆர்ஐ-க்கள் பாஸ்போர்ட்டுகளை கொடுத்தும் அப்டேட் செய்து கொள்ளலாம். இதே 10 வயதுக்கு கீழாக உள்ள குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், அந்த கணக்கினை யார் கையாளுகிறார்களோ? அவர்களது ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
எந்த நடவடிக்கையும் கூடாது?
சமீபத்தில் ரிசர்வ் வங்கி வங்கிகளில் கேஓய்சி ஆவணங்களை புதுபிக்க தவறியவர்களுக்கு, வங்கிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க கூடாது என கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, வங்கிக் கணக்கின் செயல்பாட்டில் எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது என்றும் கூறியது.
எந்த மாற்றமும் இல்லை
ஏற்கனவே இது குறித்த அறிக்கையில், வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கு சென்றும் கே.ஓய்.சி புதுபித்தலுக்கு சம்பந்தமான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். எதுவும் மாற்றம் இல்லாவிட்டால் வங்கி போர்டலில் புதுபிப்பு கே.ஓய்.சி பிரிவில், எனது கே.ஓய்.சி பிரிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். மாற்றம் இருப்பின் தங்களது கே.ஓய்.சி விவரங்களை பூர்த்தி செய்து அப்டேட் செய்யலாம்.
பாதுகாப்பு காரணம்
கே.ஒய்.சி ஆவணங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்க முடியும். இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி பின்பற்றப்படுகிறது. வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்ற முறை மற்றும் இதர தன்மைகளின் அடிப்படையில், இந்த கே.ஒய்.சி புதுப்பிப்பதற்கான கால அளவு மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2 ஆண்டுகள் மற்றும் எட்டு ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எனவும் இந்த கே.ஒய்.சியானது புதுப்பிக்கப்பட வேண்டும்.
யார் யார் எப்போது?
இதில் அதிக ஆபத்து உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது கே.ஒய்.சியை இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும், இதே நடுத்தர வர்க்கத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது கே.ஓய்.சி படிவத்தை 8 வருடங்களுக்கு ஒரு முறையும், இதே குறைந்த ஆபத்துக்களை உடைய வாடிக்கையாளர்கள் 10 வருடத்திற்கு ஒரு முறையும் இந்த கே.ஒய்.சியை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டது நினைவுகூறத்தக்கது.