இந்தியாவில் வெள்ளி விலை சில்லறை விற்பனையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு கிராம் 425 ரூபாய் என்ற அளவையும் ஒரு கிலோ 4.25 லட்சம் ரூபாய் என்ற அளவையும் தொட்டது. சரசரவென குறுகிய காலத்திலேயே வெள்ளி விலை இவ்வளவு உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கம் தான் வாங்க முடியாது என்றால் இனி வெள்ளி வாங்குவதும் கனவு தான் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் அதன் பின்னர் வெள்ளி விலை சட்டென குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய்க்குள் ஏறுவதும் இறங்குவதுமாக நீடிக்கிறது. அதாவது மார்ச் மாதம் முதலே வெள்ளி விலையில் பெரிய ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை.

வெள்ளி விலை ஒரே வரம்புக்குள் ஏறி இறங்கும் சூழலில் இனி வெள்ளி விலை ஏறுமா அல்லது இதே விலையில் தான் நீடிக்குமா இல்லை இன்னமும் குறையுமா என மக்களும் முதலீட்டாளர்களும் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளியின் விலை போக்கு குறித்து மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கமாடிட்டி ரிசர்ச் தலைவர் நவ்நீத் தமானி பிஸ்னஸ் டுடேவுக்கு விரிவான பேட்டியை அளித்துள்ளார்.
வெள்ளி விலையானது தற்போதைய நிலையிலிருந்து மேலும் உயர்ந்து, உள்நாட்டுச் சந்தையில் தோராயமாக ஒரு கிலோ வெள்ளி விலை 3.25 லட்சம் ரூபாய் வரை உயரக்கூடும் என நவ்நீத் தமானி கணித்துள்ளார். சர்வதேச அளவில் இது அவுன்ஸ் ஒன்றுக்கு 90 முதல் 95 டாலர்கள் என்ற இலக்கை தொடுவதை குறிக்கிறது. அதிகபட்சமாக விலை 3.50 லட்சம் ரூபாய் வரை நீள வாய்ப்புள்ளது என்றும், இதனால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளி விலை கிலோ ஒன்றுக்கு 4.25 லட்சம் ரூபாய் வரை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. ஆனால், முதலீட்டாளர்கள் மீண்டும் அந்த பழைய உச்சத்தை உடனடியாக எதிர்பார்க்க வேண்டாம் என தமானி கூறியுள்ளார். அது ஒரு சாதனை விலை உயர்வு அது எத்தனை எளிதாக நிகழந்துவிடாது என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் விலை கடுமையாக உயர்ந்ததற்கு அதிகப்படியான ஊக வணிகமே காரணம் என்கிறார். ETF முதலீடுகள் இந்த விலை உயர்வில் மிகப்பெரிய பங்கு வகித்தன என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விலை உயர்வு ஆரோக்கியமான சந்தை வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது அல்ல என்பதால், அந்த உச்சத்தை மீண்டும் அடைய நீண்ட காலம் ஆகலாம் என கூறியுள்ளார். வெள்ளியின் விலை தற்போதுள்ள விலையை விட நிச்சயம் உயரும் என கூறும் அவர் வரலாற்று உச்சபட்ச விலையை எட்டவில்லை என்றாலும் ஒரு கணிசமான லாபம் தரும் என்கிறார்.
வெள்ளிக்கு தொழில்துறை ரீதியான டிமாண்ட் இருக்கிறது. மின்சார வாகன உபகரணங்கள் தொடங்கி விண்வெளி, ஸ்மார்ட் கருவிகளில் உள்ள பாகங்களில் எல்லாம் ஒரு உபகரணமாக வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. எனவே தொழில்துறை டிமாண்ட் அதிகமாகும் போது வெள்ளியின் விலை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டுகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


