2025ஆம் ஆண்டில் வெள்ளி விலை வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. வெள்ளி தான் 2025இன் சூப்பர் ஸ்டார் என சொல்லும் அளவுக்கு 100%க்கும் மேல் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை திக்கு முக்காட வைத்தது.
தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் மக்கள் கருத தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக முதலீட்டாளர்கள் தங்கத்துக்கு நிகரான வெள்ளியிலும் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ஏனெனில் வெள்ளிக்கான தேவை இனி வரும் காலங்களில் இன்னும் அதிகரித்து அதன் விலை உயரும் என்ற கணிப்பே இதற்கு காரணம்.

2025ஐ விட 2026ஆம் ஆண்டில் வெள்ளி விலை இன்னும் பல மடங்கு உயரலாம் என கணிக்கப்படுகிறது. இந்த மாதம் தொடங்கி இன்னும் 15 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலை 19.92 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 256 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் இன்று 307 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த 14 நாட்களில் சென்னையில் வெள்ளி விலை 19.92 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ஜனவரி 1ஆம் தேதி அன்று 1 லட்சம் ரூபாய்க்கு வெள்ளி வாங்கி இருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 1.20 லட்சம் ரூபாயாக இருந்திருக்கும். 14 நாட்களில் 20% லாபம் கிடைத்திருக்கும்.
உலக சந்தையிலும் வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை தொட்டுவிட்டது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 90 டாலரை கடந்துவிட்டது. ஜனவரி 1ஆம் தேதி 72.63 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 14 நாட்களில் 23% வரை விலை உயர்வு கண்டுள்ளது. உலக சந்தையில் வெள்ளியின் சந்தை மூலதன மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி ஜனவரி 1ஆம் தேதி 2, 35,930 ரூபாய்க்கு வர்த்தகமானது, அதுவே இன்று 2,87,552 ரூபாய் என உயர்ந்துள்ளது. வெள்ளி விலை உயர போகிறது என்பதே எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளிக்கான காண்டிராக்ட் விலை தொடர்ந்து உயர காரணம்.
வெள்ளியை பொறுத்தவரை தொழில் துறை ரீதியாக அதன் பயன்பாடு அதிகம். சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் என வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களிலுமே வெள்ளி முக்கியமான ஒரு பாகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் தொழில் ரீதியாக வெள்ளிக்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது.
வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரிக்கும் அதே வேளையில் சப்ளை உயரவில்லை. தொடர்ந்து நான்காவது ஆண்டாக வெள்ளி பற்றாக்குறை நிலவுகிறது என்கிறது சில்வர் இன்ஸ்டிட்யூட். இது ஒரு புறம் என்றால் உலக நாடுகள் தங்கத்துக்கு நிகரான மதிப்பை வெள்ளிக்கும் கொடுக்க தொடங்கிவிட்டன. சீனா வெள்ளி ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது தவிர தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் கிடைக்கும் பணத்திற்கு வேகமாக வளரும் வெள்ளியை வாங்கி போடலாம் என முதலீட்டாளர்கள் வெள்ளிக்கான ஒதுக்கீட்டை அதிகரித்துவருகின்றனர்.
வெள்ளி விலை இத்தனை வேகமாக உயர்கிறது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தருகிறது என்றாலும் இதில் முதலீடு செய்யும் கவனம் தேவை என்பதே நிபுணர்களின் கருத்து. ஏனெனில் ஏறிய வேகத்தில் இறங்கும் தன்மை கொண்டதாகவும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டதாகவும் வெள்ளி சந்தை இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்துகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications