தங்க நகைகள் இந்திய குடும்பங்களில் மிக முக்கியமான சொத்து. பழைய தங்க நகைகளை விற்று, அந்த பணத்தில் புதிய நகைகளை வாங்குவது பெரும்பாலான இந்தியர்களின் வழக்கம். அவ்வாறு பழைய நகைகளை விற்றுவிட்டு, அந்த பணத்தை பயன்படுத்தி புதிய தங்க நகைகளை வாங்கினால், அதிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டுமா, ஒரு வேளை தவறவிட்டால் நோட்டீஸ் வருமா என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தது 1.30 லட்சம் ரூபாயாவது நாம் கொடுக்க வேண்டும். இத்தகைய சூழலில் மக்கள் பழைய தங்கத்தை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய நகைகள் வாங்குவதை டிரெண்டாக்கியுள்ளனர். இப்படி பழைய நகை விற்பனை செய்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

வருமான வரித் துறையின் விதிகளின்படி, தங்கம் ஒரு மூலதன சொத்து (Capital Asset) என்று வகைப்படுத்தப்படுகிறது. எனவே, தங்க நகைகளை விற்பனை செய்வதன் மூலம் உங்களுக்கு லாபம் கிடைத்தால், அந்த லாபத்திற்கு நீங்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். அதாவது விற்பனை செய்த முழு தொகைக்கும் வரி கிடையாது அந்த பழைய நகையை வாங்கிய விலைக்கும், விற்ற விலைக்கும் இடையில் உள்ள லாபத்திற்கு மட்டுமே Capital Gains வரி கணக்கிடப்படும்.
வருமான வரி சட்டம் பிரிவு 2(14)-ன் கீழ், நகை என்பது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருட்கள் என்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் சொந்தமாக பயன்படுத்திய நகையாக இருந்தாலும், அதை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம் வரிக்கு உட்பட்டதே என்கின்றனர் நிபுணர்கள். பழைய நகையை விற்றுவிட்டு அதே பணத்தில் புதிய நகைகளை வாங்குவது வரி சுமையிலிருந்து காப்பாற்றாது. வரி சட்டத்தைப் பொறுத்தவரை, பழைய நகையை விற்பனை செய்ததும், புதிய நகையை வாங்குவதும் இரண்டு தனித்தனி பரிவர்த்தனைகளாகவே கருதப்படுகின்றன. எனவே, பழைய நகையை விற்பதால் ஏற்படும் லாபத்திற்கு வரி செலுத்தியே ஆக வேண்டுமாம்.
உதாரணமாக நீங்கள் 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய பழைய நகையை, 4 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, அதே 4 லட்சம் ரூபாய்க்கு புதிய நகை வாங்கினால், அந்த 2 லட்சம் ரூபாய் லாபத்திற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். தங்கத்தை நீங்கள் எவ்வளவு காலம் வைத்திருந்தீர்கள் என்பதை பொறுத்தே வரி விகிதங்கள் மாறுபடும்.
அதேபோல், அந்த நகைகள் உங்களுக்கு பரிசாகவோ அல்லது வாரிசுதாரர் உரிமையின் மூலமாகவோ கிடைத்திருந்தால், முந்தைய உரிமையாளர் வாங்கிய விலை மற்றும் அவர் வைத்திருந்த காலத்தையும் கணக்கில் கொண்டே லாபம் கணக்கிடப்படும்.
தங்கத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி விலக்கு பெற ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. இதன்படி வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 54F -இன் கீழ், தங்கத்தை விற்ற பணத்தை ஒரு குடியிருப்பு வீட்டை வாங்குவதற்காக முதலீடு செய்தால் மட்டுமே நீண்டகால மூலதன ஆதாய வரி விலக்கு கிடைக்கும். இந்த விலக்கை பெற, தங்கத்தை விற்ற நாளில் உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடு இருக்கக்கூடாது. முழு தொகையையும் முதலீடு செய்யாவிட்டால், முதலீடு செய்த அளவிற்கு மட்டுமே வரி விலக்கு விகிதாச்சார அடிப்படையில் கிடைக்கும்.
திருமணத்தின் போதோ அல்லது நெருங்கிய உறவினர்களிடம் இருந்தோ பெறப்படும் தங்க நகைகளுக்கு வரி கிடையாது. அதேபோல் வாரிசு உரிமையின் மூலம் கிடைக்கும் தங்கத்திற்கும் வரி கிடையாது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பழைய நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்கிறார்களே அவர்கள் அனைவரையும் வருமான வரித்துறை கண்காணித்து நோட்டீஸ் அனுப்புகிறதா என்றால் இல்லை.
ஆனால் நகை வாங்கும் போது நாம் செலுத்தும் பணம், பழைய நகையின் மதிப்பு ஆகிய அனைத்துமே பதிவு செய்யப்படுகிறது. திடீரென வருமான வரி சோதனை நடக்கிறது, ரேண்டமாக ஆய்வு செய்கிறார்கள் எனும் போது நீங்கள் கேள்விக்கு ஆளாக நேரிடலாம். அப்போது வருமான வரி துறை கேட்டால் நீங்கள் கணக்கு காட்ட வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications

