இந்தியாவில், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு சாவரின் தங்க பத்திரம் (Sovereign Gold Bond) ஒரு சூப்பரான திட்டம்.
ஏன் சாவரின் தங்க பத்திரம் (Sovereign Gold Bond) திட்டத்தை ஒரு பிரமாதமான திட்டமாக நிதி ஆலோசகர்கள் தொடங்கி பலரும் சொல்கிறார்கள்?
இந்த திட்டத்தில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன? இந்த திட்டத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம். முதலில் தங்க பத்திர வெளியீட்டு தேதியில் இருந்து தொடங்குவோம்.
1. எப்போது வெளியிடுகிறார்கள்
சாவரின் தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bond) 12 அக்டோபர் 2020 முதல் 16 அக்டோபர் 2020 வரையான காலத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த ஐந்து நாட்களுக்குள் சாவரின் தங்க பத்திரங்களில் (Sovereign Gold Bond) முதலீடு செய்ய விரும்புபவர்கள் முதலீடு செய்யலாம்.
2. விலை குறைவு
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 2020-ல் 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது நினைவிருக்கல்லாம். அத்தனை உயரத்தில் இருந்து இன்று 53,310 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. சுமாராக 5,800 ரூபாய் விலை சரிந்து இருக்கும் இந்த நேரத்தில் 10 கிராம் தங்க பத்திரத்தின் விலை 50,510 ரூபாய்க்கு வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது ஒரு கிராமுக்கு 5,051 ரூபாய்.
3. ரூபாய் 50 தள்ளுபடி
சாவரின் தங்க பத்திரத்தில் (Sovereign Gold Bond)-ல் முதலீடு செய்ய விரும்புபவர்கள், ஆன்லைன் வழியாக முதலீடு செய்தால், ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது 5,051 ரூபாய்க்கு விற்பனை ஆகும் தங்க பத்திரம், ஆன்லைன் வழியாக வாங்குபவர்களுக்கு 5,001 ரூபாய்க்கு கிடைக்கும்.
4. அரசு சார்பாக ஆர்பிஐ வெளியிடுகிறது
இந்த தங்க பத்திரத்தை, மத்திய ரிசர்வ் வங்கி, இந்திய மத்திய அரசின் சார்பாக வெளியிடுகிறது. எனவே, நம்பகத்தன்மை மற்ற எந்த வகையான தங்க முதலீடுகளை விடவும் அதிகம் எனலாம். எனவே தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இதை விட நம்பகமான முதலீடுகள் கிடைப்பது சிரமம் தான்.
5. செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி எதுவும் கிடையாது
வழக்கமாக தங்கத்தை வாங்கும் போது சுமார் 3 % ஜிஎஸ்டி வசூலிப்பார்கள். அதோடு செய்கூலி, சேதாரம் என ஒரு 10 - 15 சதவிகிதம் வசூலிப்பார்கள். ஆனால் சாவரின் தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond) வாங்குபவர்கள், லட்டு போல தங்கத்துக்கு மட்டும் காசு கொடுத்தால் போதும். மேலே சொன்ன ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் என எதையும் செலுத்த வேண்டாம்.
6. யார் வாங்கலாம்
சாவரின் தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond) இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே வாங்க முடியும்.
1. தனி நபர்கள்,
2. இந்து கூட்டுக் குடும்பத்தினர்கள் (HUF),
3. ட்ரஸ்டுகள்,
4. பல்கலைக்கழகங்கள் & தான தர்மங்களைச் செய்யும் அமைப்புகள் (Charitable trust) இந்த தங்க பத்திரங்களை வாங்கலாம்.
தனி நபர்கள், தங்களின் குழந்தைகள் பெயரிலும் வாங்கிப் போடலாம். தனி நபர்கள் கணவன் மனைவியாகச் சேர்ந்தும் (Joint Holder) வாங்கலாம். குறிப்பாக மைனர்கள் பெயரில் கார்டியன்களும் வாங்கலாம்.
7. வாங்குவதில் வரம்பு இருக்கிறதா
1. சாவரின் தங்க பத்திரத்தில் (Sovereign gold Bond), தனி நபர்கள் 1 கிராம் முதல் அதிகபட்சமாக ஒரு நிதி ஆண்டில் 4 கிலோ (4,000 கிராம்) வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
2. இந்து கூட்டுக் குடும்பத்தினருக்கும் இந்த 4 கிலோ கிராம் தான் உச்ச வரம்பு.
3. மற்ற அமைப்புகள் 20 கிலோகிராம் வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
இந்த முதலீட்டு உச்ச வரம்பை அரசு அவ்வப்போது மாற்றும் என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
8. ஏகப்பட்ட நன்மைகள்
1. தங்க பத்திரங்களாக வாங்கப்படும் தங்கத்துக்கு தேய்மானம் கிடையாது.
2. ஒவ்வொரு ஆண்டுக்கும் 2.5 % வட்டி வேறு கொடுப்பார்கள்.
3. தங்கத்துக்கான வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை நம் வங்கிக் கணக்கில் போட்டு விடுவார்கள்.
4. எட்டு வருட முடிவில் மொத்தமாக (அசல் + கடைசி வட்டி) என சேர்த்து வங்கிக் கணக்கில் போட்டு விடுவார்கள்.
5. இவை எல்லாம் போக 8 வருடத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்தை நம் பாண்டுகள் கண்டு இருக்கும். எனவே 8 வருட தங்க விலை ஏற்றத்தை நாம் லாபமாகப் பார்க்கலாம்.
6. தேவைப்பட்டால் தங்க பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து கடன் பெறலாம்.
9. வருமான வரிச் சலுகை உண்டு
இந்த தங்க பத்திரங்களில் (Sovereign gold Bond) முதலீடு செய்து 8 ஆண்டுகள் கழித்து விற்றால் மூல தன ஆதாய வரி (Capital Gain Tax) கிடையாது. இந்த வரிச் சலுகை வேறு எந்த கோல்ட் இடிஎஃப், கோல்ட் ஃபண்ட்ஸ் அல்லது தங்க நகைகளுக்கும் இந்த வசதி கிடையாது எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தங்க பத்திரங்களுக்கு கொடுக்கப்படும் 2.5 சதவிகித வட்டிக்கு டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்யமாட்டார்கள்.
10. பணத் தேவைக்கு விற்கலாம்
சாவரின் தங்க பத்திரம் (Sovereign gold Bond) வாங்கி, ஐந்து ஆண்டுகள் கழித்து, தங்க பத்திரங்களை விற்கலாம். அப்படி விற்க வேண்டும் என்றால், வட்டி போடும் தேதிக்கு ஒரு மாதம் முன்பே நாம் தங்க பத்திரங்கள் வாங்கியவர்களிடம் சென்று முறையாக தெரியப்படுத்த வேண்டும். நம் மொபைல் எண், மின்னஞ்சல், வங்கிக் கணக்கு போன்றவைகளில் ஏதாவது மாற்றம் இருக்கிறது என்றால் கூட அதை இந்த ஒரு மாதம் முன்பே குறிப்பிட்டுச் சொல்லி மாற்றிக் கொள்வது நல்லது.