கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்த சீனா இதன் பாதிப்பில் இருந்து மீண்டது மட்டும் அல்லாமல் அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளையும் தாண்டி மார்ச் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்குப் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது உலக நாடுகளைத் திக்குமுக்காட வைத்துள்ளது.
2021ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் கொரோனா தொற்று உலக நாடுகளில் குறைந்த காரணத்தால் உற்பத்தி பணிகளை அதிகரிக்கத் துவங்கியது. இதனால் உலகம் முழுவதும் பொருட்களுக்கான தேவை அதிகரித்தது, இதேவேளையில் சீனாவில் கொரோனா தொற்று 90 சதவீதம் அளவிற்குக் குறைந்த காரணத்தால் உள்நாட்டிலும் தேவை அதிகரித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலும் தேவை அதிகமாக உருவாகிய காரணத்தால் சீனாவின் உற்பத்தி மற்றும் வர்த்தகச் சந்தைக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது.
சீனாவின் அதிரடி நடவடிக்கை
சீனாவில் கடுமையான நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் மக்களுக்குப் பல பாதிப்புகளை உருவாக்கினாலும் குறைந்த காலகட்டத்தில் கொரோனாவை வென்றுள்ளது. இதனால் முதல் காலாண்டில் சீனாவின் உற்பத்தி மற்றும் வர்த்தகச் சந்தை முழுமையாக இயங்க துவங்கியது, இதற்கு ஏற்றார் போல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகளவிலான வர்த்தகம் உருவாகிய காரணத்தால் அதிக வர்த்தகத்தைப் பெற்றது.
சிறுகுறு நிறுவனங்கள்
வெளிநாட்டு மற்றும் மொத்த சந்தைக்கான வர்த்தகத்தைச் சீனாவின் பெரு நிறுவனங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்த நிலையில், டிசம்பர் காலாண்டில் சீனாவின் சிறுகுறு நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டது. இதைச் சரிசெய்யும் வகையில் சீன அரசு சிறுகுறு நிறுவனங்களுக்கு அதிகளவிலான நிதியுதவி மற்றும் வர்த்தக்தை அளித்தது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி
இதன் வாயிலாகச் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள காரணத்தால் 2021ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் 18.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் சீனா டிசம்பர் உடன் முடிந்த காலாண்டில் 6.5 சதவீத வளர்ச்சி மட்டுமே பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி கணிப்புகள்
இக்காலாண்டில் சீனா 19 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி பதிவு செய்யும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் 18.3 சதவீத வளர்ச்சி என்பது சற்று குறைவாக இருந்தாலும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் சீனா இக்காலாண்டில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றால் மிகையில்லை.
சீனா மிகப்பெரிய வளர்ச்சி
1992ஆம் ஆண்டுக்குப் பின் சீனா மிகப்பெரிய வளர்ச்சியை 2021 மார்ச் காலாண்டில் பதிவு செய்துள்ளது எனச் சீன அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேகாலகட்டத்தில் சீனாவில் ஆட்டோமொபைல் துறையும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளது, குறிப்பாக அமெரிக்க எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாக அதிகளவிலான கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ரீடைல் சந்தை வர்த்தக வளர்ச்சி
இந்தியாவில் மிகவும் மோசமாக இருக்கும் ரீடைல் சந்தை வர்த்தகத்தில் சீனா அசத்தி வருகிறது. பொதுவாக ஏற்றுமதி வர்த்தகம் வெளிநாட்டில் உருவாகும் வர்த்தகத் தேவையைப் பொருத்து அமையும், ஆனால் ரீடைல் வர்த்தகம் என்பது உள்நாட்டு நிதிநிலை, வேலைவாய்ப்பு, பணப்புழக்கம், வர்த்தக வாய்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகவே அமைகிறது.
சீனா முக்கியமாகச் செய்யவேண்டியவை
2021 முதல் காலாண்டில் சீனாவின் ரீடைல் வர்த்தகச் சந்தை மிகவும் சிறப்பாக உள்ளது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியில் தற்போது நாட்டின் நிதிநிலையை எப்படி மேம்படுத்துவது, தற்போதைய வளர்ச்சியை எப்படித் தொடர்ந்து தக்கவைப்பது என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும் என ஷாங்காய்-ன் MUFG வங்கியின் தலைமை நிதியியல் சந்தை ஆய்வாளர் மேக்ரோ சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பணவீக்கம் மோசம்
இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் மார்ச் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 7.39 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு மார்ச் 2013ல் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 8.6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அதிகப்படியான எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலை காரணமாக மார்ச் மாதத்தில் மொத்த விலை விலை பணவீக்கம் 8 வருட உயர்வை அடைந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாகப் போக்குவரத்தை நம்பியிருக்கும் அனைத்து பொருட்களும், சேவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் 3.24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரீடைல் பணவீக்கம்
பிப்ரவரி மாதம் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான ரீடைல் பணவீக்கம் பிப்ரவரி மாதம் 5.03 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5.52 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழிற்துறை உற்பத்தி அளவீடு
பிப்ரவரி மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி அளவீடு பிப்ரவரி மாதம் 3.6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இக்காலகட்டத்தில் உற்பத்தித் துறை 3.7 சதவீதமும், சுரங்க துறை 5.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
கொரோனா 2வது அலை
இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள காரணத்தால் நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியது. இதன் பாதிப்பால் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் மார்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.