வளைகுடா நாடுகளில் ஐக்கிய அமீரகம் மற்றும் துபாயில் வருகின்ற ஜனவரி 1 முதல் வாட் வரி அறிமுகம் செய்யப்படுகிறது. பல நிதி சேவைகள் அதிலும் குறிப்பாக வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளுக்கு வாட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மொபைல் பில் மற்றும் டெலிபோன் கட்டணங்களுக்கு வாட் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் என்ஆர்ஐகளுக்கு எந்தச் செலவுகள் எல்லாம் துபாயில் அதிகரிக்கும் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
யூஏஈ வாட் சட்டம்
யூஏஈ வாட் சட்டத்தின் படி வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை, வட்டி வருவாய் மற்றும் இஸ்லாமிய வங்கி சேவைகளுக்கு வாட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கடன், கிரெடிட் கார்டு போன்றவற்றுக்கும் வரி விலக்கு கிடைக்கும்.
நிதி சேவைகளில் எதற்கெல்லாம் வரி செலுத்த வேண்டும்?
பல நிதி சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும் சில வாடிக்கையாளர்கள் சேவைகளுக்கு மட்டும் 5 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையான கட்டணம், கமிஷன், தள்ளுபடி அல்லது தள்ளுபடியைப் பயன்படுத்தும் எந்தவொரு நிதி சேவைகளும் வாட் வரியின் அடங்கும்.
கிரெடிட் கார்டு
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களாக இருந்தால் வட்டி போன்றவற்றுக்கு வாட் வரி கிடையாது, ஆனால் ஆண்டுக் கட்டணம் போன்றவற்றுக்கு 5 சதவீத வாட் உண்டு.
வெளிநாட்டிற்குப் பணம் அனுப்புதல்
வெளிநாட்டிற்குப் பணம் அனுப்ப வாட் வரி இல்லை என்பதால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் 2018 ஜனவரி மாதம் முதல் இவர்கள் கடைகளில் வாங்க இருக்கும் பல பொருட்களுக்கு 5 சதவீத வாட் வரியினைச் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு 1,000 ரூபாய் மதிப்புக் கொண்ட ஒரு மொபைல் போன் வாங்கினால் 50 ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டும்.
மொபைல் பில்
மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்தும் போது 100 ரூபாய் இதுவரை செலுத்தி வந்தவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கூடுதலாக 5 ரூபாய் என 105 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 2018-ம் ஆணு முதல் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்குக் கூடுதல் செலவுகள் ஆகும் என்பதை மறந்துவிட வேண்டாம்.