உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் ஒன்றான ஜப்பான் கொரோனா பாதிப்பில் இருந்து ஏற்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தகச் சந்தை பாதிப்புகளில் இருந்து மீண்டு வர அரசு கருவூலத்தில் இருக்கும் சுமார் 80 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது.
ஜப்பான் தற்போது தனது ஜிடிபி அளவை விடவும் 2 மடங்கு அதிகக் கடனை வைத்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பின் மூலம் இந்நாட்டின் பொருளாதாரம் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, அரசுக்கு வரி வருமானமும் அதிகளவில் குறைந்துள்ளது.
இதன் வாயிலாக ஜப்பான் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அதிகளவிலான நிதி திரட்ட வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
ஜப்பான் மக்களின் சுகாதாரம்
ஜப்பான் மக்களின் சுகாதாரத்தைக் காக்க வேண்டும் என்பதில் அரசு முக்கிய இலக்காக வைத்துள்ள நிலையில் மருத்துவம் மற்றும் உடல்நல சேவைகளுக்காகவும் அதிகளவில் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஜப்பான் தள்ளப்பட்ட உள்ளது. இதனால் ஜப்பான் அரசுக்கு அதிகளவிலான நிதி தேவை உருவாகியுள்ளது.
ஜப்பான் அரசு
பொதுவாக ஜப்பான் அரசு இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் நிதி தேவைப்படும் போது பாங்க் ஆப் ஜப்பானின் சிறப்புக் கணக்கில் இருக்கும் பணம் மற்றும் லாபம், அரசின் பிற அமைப்புகள் தங்களது கணக்குகளை முடித்தபின் அரசு செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றில் இருந்து எடுத்துக்கொள்ளும்.
ஆனால் இந்த முதல் ஜப்பான் அரசு, மத்திய வங்கியுடன் ஒரு சிறப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.
தங்கம் விற்பனை
இந்தப் புதிய ஒப்பந்தம் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது டாலர் இருப்பைப் பாங்க் ஆப் ஜப்பானுக்கு விற்பனை செய்தது. இந்த விற்பனையில் இருந்து கிடைத்த யென் வடிவிலான தொகையைக் கடன் சீரமைப்புப் பிரிவிடம் இருந்து தங்கத்தை வாங்கியுள்ளது.
4.84 பில்லியன் டாலர்
இதன் மூலம் தற்போது கடன் சீரமைப்பு நிர்வாகத்திடம் 500 பில்லியன் யென் அதாவது 4.84 பில்லியன் டாலர் அளவிலான தொகை கிடைத்துள்ளது. இந்த 4.84 பில்லியன் டாலர் தொகையை ஜப்பான் அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்த உள்ளது.
ஜப்பான் நாணய மதிப்பு
இந்த ஒப்பந்த பரிமாற்றத்திற்கு ஜப்பான் சந்தையில் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும் இந்தக் கூடுதல் கடன் சுமை ஏற்படாது என ஜப்பான் அரசு நம்புகிறது. இதனால் ஜப்பான் நாணயத்தை வீழ்ச்சியில் இருந்தும் காக்க முடியும் எனப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.