வாசிங்டன்: கடந்த ஜனவரி 2020 வாக்கில் உலகிலேயே கொரோனா அதிகமாக இருக்கும் நாடுகள் பட்டியலில் சீனா தனித்து இருந்தது.
ஆனால் இன்று அமெரிக்கா, தான் அந்த பட்டியலில், தற்போதைக்கு யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறது. உண்மையிலேயே மிகவும் வருத்தமான செய்தி தான்.
இந்த வருத்தத்தை எல்லாம் அமெரிக்கா பல விதங்களில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
ட்ரம்ப் மிரட்டல்
சமீபத்தில் தான், டிரேட் டீலில் சொல்லப்பட்டு இருப்பது போல, சீனா, அமெரிக்காவிடம் இருந்து 200 பில்லியன் டாலருக்கு பொருட்களை வாங்க வேண்டும். இல்லை என்றால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்துவிடுவேன் என வெளிப்படையாக மிரட்டி இருக்கிறார் ட்ரம்ப். "சீனாவை மிரட்டும் ட்ரம்ப்! கொரோனாவை காரணம் சொன்னால் நோ டீல்! மீண்டும் பங்கு சந்தைகள் சரியலாம்!" என்கிற தலைப்பில் இதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறோம்.
வழக்கு
ஏற்கனவே, சீனா தான், உலக அளவில் கொரோனா வைரஸ் பரவியதற்கு முக்கிய கரணம் என பல தரப்பில் இருந்து வழக்கு பதிவு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். உதாரணமாக: The International Council of Jurists (ICJ) and All India Bar Association (AIBA) போன்ற அமைப்புகள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலில், கொரோனா வைரஸ் பரவலுக்கு, சீனா மீது வழக்கு தொடுத்து இருக்கிறார்கள்.
20 பில்லியன் டாலர்
கொரோனா வைரஸ் பிரச்சனைக்காக, சீனாவிடம், 20 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு லாரி க்ளேமென் (Larry Klayman) என்கிற வழக்கறிஞர் சில குழுக்கள் சார்பாக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார். இப்படி சீனா மீதான கொரோனா வைரஸ் வழக்குகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது, இந்த பட்டியலில், மிஸ்ஸோரி (Missouri) என்கிற அமெரிக்க மாநிலமும் தற்போது இடம் பிடித்து இருக்கிறது.
எங்கே வழக்கு
இந்த சீனாவுக்கு எதிரான வழக்கு மிஸ்ஸோரி மாகாணத்தின் மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு இருக்கிறதாம். இந்த வழக்கை மிஸ்ஸோரி மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்மிட் (Eric Schmitt) தாக்கல் செய்து இருக்கிறார். இந்த வழக்கில் சீன அரசு, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி என பல சீன அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தாக்கல் செய்து இருக்கிறார்களாம்.
என்ன சொல்கிறார்கள்
1. சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய முதல் சில வாரங்களில், மக்களை சீன அரசு ஏமாற்றியது,
2. முக்கிய விவரங்களை வெளியிடாமல் இருந்தது,
3. விஷயத்தை வெளியே சொல்ல வந்தவர்களை கைது செய்தது,
4. கொரோனா மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்பதை மறுத்தது,
5. மிக முக்கியமான மருத்துவ ஆராய்ச்சிகளை அழித்தது.. என பல காரணங்களை, தன் வழக்கில் பட்டியல் இட்டு இருக்கிறார் எரிக்.
நஷ்டம்
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. மிஸ்ஸோரி மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. ஆயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏகப்பட்ட பேர் இறந்து இருக்கிறார்கள், தாம் நேசித்த ஒருவர் மரணப் படுக்கையில் இருக்கும் போது கூட, குடும்ப உறுப்பினர்கள் அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வியாபாரம்
சிறு வியாபாரங்கள் எல்லாம், வியாபாரம் செய்ய முடியாமல் கடையை இழுத்து மூடிக் கொண்டு இருக்கிறார்கள். மாதா மாதம் வரும் சம்பளத்தை வைத்து வாழும் மக்கள், உணவுக்கு வழி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் எனச் சொல்கிறார் வழக்கறிஞர் எரிக் ஸ்மிட்.
பொய் சொல்லிவிட்டார்கள்
சீன அரசு, கொரோனா வைரஸின் ஆபத்தைக் குறித்தும், நோய் தொற்றும் விதத்தைக் குறித்தும், உலகத்திடம் பொய் சொல்லிவிட்டார்கள். அதோடு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பெரிதாக நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எனவே அவர்களின் செயல்களுக்கும் அவர்களே பொறுப்பாக வேண்டும் என குற்றம்சாட்டி இருக்கிறார் மிஸ்ஸோரி மாநிலத்தின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்மிட்.
வழக்கு
மிஸ்ஸோரி மாநில ஆட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்மிட் தொடுத்து இருக்கும் வழக்கின் படிப் பார்த்தால், சீன சுகாதார அதிகாரிகளிடம், டிசம்பர் 2019 கால கட்டத்திலேயே, கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு
இந்த ஆதாரங்கள் சீனாவிடம் இருந்த போதிலும், டிசம்பர் 31, 2019 வரை உலக சுகாதார அமைப்பிடம் இந்த நோயைப் பற்றி தெரியப்படுத்தவில்லை. அதன் பின் கொரோனா பற்றிச் சொன்ன போதும் இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்பதையும் ஒப்புக் கொள்ளவில்லை எனச் சொல்கிறது எரிக் ஸ்மிட் தொடுத்த வழக்கு விவரங்கள்.
வரவேற்பு
மிஸ்ஸோரி மாநில அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்மிட் தொடுத்த வழக்கை, Senate Select Committee on Intelligence-ல் உறுபினராக இருக்கும், அமெரிக்க செனடர் பென் சசே (Ben Sasse) வரவேற்று இருக்கிறார். அதோடு சீனா சர்வாதிகார போக்கில் நடந்து கொண்டதாகவும் தன் கருத்தைச் சொல்லி இருக்கிறார்.