அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளை தண்டிக்க டிரம்ப்க்கு முழு அதிகாரம் வழங்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது டிரம்பின் கையெழுத்தை பெற்றால் இனி அவர் வைப்பது தான் சட்டம் என்ற நிலைமையை உண்டாக்கும்.
உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்துவதற்கு அந்நாட்டிற்கு கிடைக்கும் வருமானத்தை முடக்க வேண்டும், இதற்காக அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் The Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026 என்ற மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மூலம், ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து அதன் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு எதிராக கடுமையான வர்த்தக வரிகளை விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்படும்.

ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 100 சதவீதம் வரை சுங்கவரி விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. ரஷ்யா தனது எண்ணெய் வர்த்தகம் மூலம் ஈட்டும் வருவாயை கொண்டு உக்ரைனுக்கு எதிரான போருக்கு பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க செனட் சபை இந்த மசோதாவை 86-11 என்ற பெரும்பான்மையில் நிறைவேற்றியது, அதில் குறிப்பிட்ட நாடுகளின் பெயர்கள் நேரடியாக இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் முதல் 5 நாடுகள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஸ்டெனி ஹோயர் கொண்டுவந்த திருத்தத்தின்படி, 100% வரிவிதிப்புக்கு உட்படக்கூடிய நாடுகளின் பட்டியல் வெளிப்படையாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, துருக்கி , ஐக்கிய அரபு அமீரகம் , அஜர்பைஜான், ஹங்கேரி, சுலோவாகியா, சிங்கப்பூர், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.அதாவது இந்த நாடுகளுக்கு தானாகவே 100% வரி விதிக்கப்படும் என அர்த்தமல்ல; மாறாக, அதிபர் டிரம்ப் விரும்பினால் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி இந்த நாடுகளின் மீது 100% வரியை அமல்படுத்த முடியும்.
இந்த மசோதாவால் அதிபர் டிரம்பிற்கு வர்த்தக வரிகளை விதிக்க எத்தகைய கட்டுப்பாடுகளுமற்ற வரம்பற்ற அதிகாரம் கிடைத்துவிடும். இது இறுதியில் அமெரிக்காவில் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என சிலர் கூறுகின்றனர். இருப்பினும், குடியரசு கட்சியினரின் ஆதரவுடனும், சில ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடனும் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது டிரம்பின் கையெழுத்துக்காக சென்றுள்ளது. எனவே டிரம்ப் ஒற்றை கையெழுத்து போட்டாலே போதும். ஆனால் டிரம்ப் இந்தியா மீது 100% வரி என்ற நிலைப்பாட்டை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இந்தியாவுடன் ஏற்கனவே வர்த்தக பேச்சுவார்த்தை நடக்கிறது, ஒரு புறம் ஈரான் போரால் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியா மீது டிரம்ப் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பது தெரியவில்லை.
உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை ஓரளவுக்கு குறைத்திருந்தாலும், சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி வாடிக்கையாளராக இந்தியா தான் இருக்கிறது.
ஒருவேளை 100% சுங்கவரியை அமல்படுத்தினால், அது அமெரிக்க சந்தைக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்களை நேரடியாக பாதிக்கும். கடந்த ஆண்டில் இப்படி தான் இந்தியாவுக்கு 50% வரி விதித்தது டிரம்ப் நிர்வாகம். இதனாலேயே லட்சக்கணக்கான ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் டிரம்பின் முடிவில் தான் எல்லாமே இருக்கிறது.


Click it and Unblock the Notifications


