கொரோனா தாக்கத்தின் காரணமாக அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வந்த மும்பை பங்குச்சந்தை, கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்திலும், நாளை பியூச்சர் நிறைவடையும் காரணத்தால் அதிகளவிலான முதலீட்டைப் பெற்றது. இதன் வாயிலாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஆட்டோமொபைல் துறைகளில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்துள்ளது. மறுபுறம் மெட்டல், பார்மா, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 789.70 புள்ளிகள் வரையில் உயர்ந்து 49,733.84 புள்ளிகளை அடைந்துள்ளது. திங்கட்கிழமை முதல் உயர்ந்து வரும் சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 49,801.48 புள்ளிகளை எட்டி 50,000 புள்ளிகள் இலக்கை அடையத் தவறியுள்ளது.
சென்செக்ஸ் டாப் 30 நிறுவனங்கள்
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் சுமார் 8.32 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது. இதைத் தொடர்ந்து இண்டஸ்இந்த வங்கி 5.08 சதவீதமும், பஜாஜ் பின்சர்வ் 4.06 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 3.72 சதவீதமும், கோட்டாக் மஹிந்திரா வங்கி 3.52 சதவீதமும், எஸ்பிஐ 2.95 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதேபோல் இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி, டாக்டர் ரெட்டி, டிசிஎஸ், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக், நெஸ்லே இந்தியா நிறுவனங்கள் கணிசமான சரிவை அடைந்துள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு புதன்கிழமை வர்த்தக முடிவில் 211.50 புள்ளிகள் உயர்ந்து 14,864.55 புள்ளிகளை அடைந்துள்ளது.
அமெரிக்காவின் கையில்
இந்நிலையில் அடுத்த வாரம் வர்த்தகம் அனைத்தும் அமெரிக்காவின் கையில் தான் உள்ளது. ஆமாங்க, அமெரிக்காவின் பெடரல் வங்கி தனது நாணய கொள்கையை இன்று வெளியிட உள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ள காரணத்தால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்
எனவே அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்தினால் இந்திய சந்தையில் இருக்கும் பெருமளவிலான முதலீடுகள் வெளியேற வாய்ப்பு உள்ளது. அதிகளவிலான முதலீடுகள் வெளியேறும் பட்சத்தில் பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சியைச் சந்திக்கும்
வருமான வரி
இதேபோல் அமெரிக்க அரசு வருடம் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் பணக்காரர்கள் மீதான வருமான வரியை உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதனால் முதலீட்டைச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.