பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று நடத்திய முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு அதிகம் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பு மருந்து பெறலாம் என அறிவித்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பை அதிகரிக்க அட்வான்ஸ் பேமெண்ட் ஆகச் சீரம் மற்றும் பார்த் பயோடெக் நிறுவனங்களுக்கு 4500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கும் உரிமையை மத்திய அரசு மாநில அரசு கைகளுக்குக் கொடுத்துள்ளது. இதனால் மாநில அரசு தனது விருப்பத்தின் படி எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்.
இதோடு வெளிநாட்டில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்வதை எளிதாக்கும் பொருட்டுக் கோவிட் வேக்சின் மீது இருந்த இறக்குமதி வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் தவித்து வரும் நிலையில் விரைவில் ஆக்சிஜன் அளவீட்டை 25 சதவீதம் அதிகரித்து அரசு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுகள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என அதிகளவிலான நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இதன் வாயிலாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட சென்செக்ஸ் குறியீடு செவ்வாய்க்கிழமை உயர்வுடன் துவங்கியுள்ளது.
500 புள்ளிகள் உயர்வு
இன்று காலை வர்த்தகம் துவங்கும்போதே 500 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு. ஆனால் தொடர் சரிவு பாதையில் இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீட்டை வெளியேற்றுவது தெரிகிறது. ஆனாலும் சென்செக்ஸ் நேற்றைய அளவீட்டை விட வளர்ச்சிப் பாதையில் இருப்பது பெரிய அளவிலான நம்பிக்கையை அளிக்கிறது.
டாப் 30 நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று ஹெச்டிஎப்சி வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், அல்ட்ரா டெக் ஆகிய நிறுவனங்கள் 0.03 சதவீதம் முதல் 1.50 சதவீதம் வரையிலான சரிவை எதிர்கொண்டு வருகிறது.
நிஃப்டி குறியீடு
மேலும் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டை போலவே 220 புள்ளிகள் வரையிலான உயர்வில் துவங்கிய நிலையில் தொடர் சரிவை பதிவு செய்து வருகிறது. இதனால் நிஃப்டி குறியீடு 10.20 மணியளவில் 96.75 புள்ளிகள் உயர்வில் 14,456.20 புள்ளிகளை அடைந்து உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்
இதேவேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த லாக்டவுன் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள்
மேலும் லாக்டவுன் அறிவிக்கப்படும் காரணத்தால் நாட்டின் பிற பகுதிகளில் வேலை செய்யும் ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்ல துவங்கியுள்ளனர். ஊழியர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் காரணத்தால் உற்பத்தித் துறை முதல் கட்டுமானம் வரையில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிமாநில ஊழியர்கள்
மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கும் போது இந்த லாக்டவுன் தளர்வுகளுடன் அடுத்த சில வாரங்கள் கண்டிப்பாக நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் வெளிமாநிலத்தில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.