மதுரை: மதுரையில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரனைட் கற்களை ஏலம் விட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் முறைகேடாக கிரனைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மதுரை ஆட்சித் தலைவராக இருந்த சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேலூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆய்வில் கிரனைட் குவாரிகளில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த கிரானைட் கற்களை பறிமுதல் செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அன்சுல் மிஸ்ரா, 50 கிரனைட் குவாரிகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் 4ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை ஏலம் விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏலம் விடுவது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தார். முறைகேடாக கிரனைட் கற்களை வெட்டி எடுத்த குவாரிகளின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிப்பது பற்றி அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மதுரையில் 86 குவாரிகளில் முறைகேடாக கிரனைட் கற்கள் வெட்டி எடுத்ததில், 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியிருப்பதாகவும் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் அன்சுல்மிஸ்ரா தெரிவித்துள்ளார்.