டெல்லி: வரும்காலத்தில் இந்திய பொதுத் துறை வங்கிகள் சிறப்பாக வளர்வதற்கும் அதிகப்படியான லாபத்தை பெறவும் 9 அருமையான ஆலோசனைகளை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று வங்கிகளுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தினார்.
நாட்டில் பலவிதமான சலுகைகளையும் சேவைகளையும் தனியார் வங்கிகள் அளித்து வந்தாலும், அவற்றுக்கு ஈடான அனைத்து வசதிகளும் தேசியமயமாக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகளிலும் கிடைத்து வருகின்றன. ஆனால் அவற்றைச் சரியான வழியில் பயன்படுத்துவதால் மட்டுமே பொதுத் துறை வங்கிகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
மும்பையில் இந்திய வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு (FICCI) நடத்திய ஒரு வங்கி மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், இது தொடர்பாக 'நாயக் ரிப்போர்ட்' என்ற அறிக்கையை ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார். அந்த அறிக்கையின் படி பொதுத் துறை வங்கிகளின் எதிர்காலத்திற்கு 9 அருமையான ஆலோசனைகளை ராஜன் வழங்கியுள்ளார்.
சுதந்திரம்
சில முக்கியமான வணிக ரீதியிலான முடிவுகளை பொதுத் துறை வங்கிகள் சுதந்திரமாக எடுக்க முன்வர வேண்டும். நிதியைப் பெருக்குவதன் மூலம்தான் சமூகக் கட்டாயங்கள் உள்ளன என்றாலும், லாபமோ நஷ்டமோ அனைத்தும் கணக்கில் வைக்கப்பட வேண்டும்.
சிஇஓ வேறு, தலைவர் வேறு
ஒரு பொதுத் துறை வங்கியின் சிஇஓ-வும் சேர்மனும் ஒரே ஆளாக இருக்கக் கூடாது.
நீண்ட நாள் சிஇஓ
ஒரு சிஇஓ வழக்கத்தை விட நீண்ட நாட்களுக்குப் பதவியில் இருக்க வேண்டும். அப்போதுதான் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வசதியாக இருக்கும்.
வெளிப்படை
சிஇஓ அல்லது சேர்மனை நியமிப்பதில் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, மெரிட் அடிப்படையில் மட்டுமே அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதிக அதிகாரம்
ஒவ்வொரு வங்கியில் போர்டுக்கும் அதிக முக்கியத்துவமும் அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும். வங்கி நிர்வாகத்தை சிறப்பாகக் கொண்டு செல்ல இது உதவும்.
அன்றாட வேலைகள்
ஒவ்வொரு வங்கியும் தன்னுடைய அன்றாட வேலைகளையும் அதற்குண்டான தடைகளையும் குறைப்பதற்கு வழி காண வேண்டும். அதற்குப் பதில், வங்கியை மேம்படுத்துவதற்கான முக்கியப் பணிகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.
சிறந்த போர்டு
வங்கியின் போர்டுதான் அதன் முன்னேற்றத்திற்கு முக்கிய மூளையாக இருக்க வேண்டும். அதற்காக, சிறந்த நிர்வாகிகளையே போர்டு உறுப்பினர்களாகத் தேர்வு செய்வது அவசியம்.
மனித வள மேம்பாடு
பொதுத் துறை வங்கிகளில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு வங்கியின் இடைப்பட்ட நிர்வாகத்தில்தான் எப்போது ஒரு இடைவெளி காணப்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும். சரியான பணி நியமனங்களும், போதுமான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.
ஹைடெக்
பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொதுத் துறை வங்கிகளின் அனைத்துத் துறைகளிலும் உடனடியாகவும் விரைவாகவும் புகுத்துவது காலத்தின் கட்டாயம். இதனால், தனியார் வங்கிகளைப் போல் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடும் பல மடங்கு அதிகரிக்கும்.