மும்பை: ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் மறுஆய்வு கொள்கையில் வட்டிக் குறைப்பிற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளதால் இன்று பங்குச்சந்தை துவக்கம் முதல் லாபகரமான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் சீன சந்தை அதிகளவிலான முதலீட்டைப் பெற்று 2.15 சதவீதம் வரை உயர்ந்தது. இதனுடன் ஐரோப்பிய சந்தையும் லாபகரமான நிலையில் வர்த்தகம் செய்யப்படுவதால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகளுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
அதேபோல் மத்திய அரசு நகை கடைகள் மீது விதித்திருந்த கலால் வரி மற்றும் பான் கார்டு கட்டாயம் போன்றவற்றை நீக்குவது குறித்து நகைக் கடை உரிமையாளர்களின் விருப்பத்தின் பெயரில் நிதியமைச்சகம் மூவர் குழுவை அமைத்துள்ளது.
இதனால் 18 நாட்கள் நீடித்த கடையடைப்புப் போராட்டம் சனிக்கிழமை முதல் முடிந்தது திங்கட்கிழமை முதல் இயல்பான வர்த்தக நிலைக்குத் திரும்பியுள்ளது. இதன் காரணமாகவும் இன்று அதிகளவிலான வர்த்தகம் கிடைத்துள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு | வங்கி IFSC குறியீடு
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 332.63 புள்ளிகள் உயர்ந்து 25,285.37 புள்ளிகளை எட்டியது. காலை வர்த்தகத்தில் 100 புள்ளிகள் உயர்வில் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்த சென்செக்ஸ் ஐரோப்பிய சந்தை துவங்கிய சில நிமிடங்களில் 300 புள்ளிகள் வரை உயர்ந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று 99.90 புள்ளிகள் வரை உயர்ந்து 7,704.25 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிந்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், எஸ்பிஐ, சன் பார்மா, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், எச்டிஎப்சி, விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ஐடிசி, எச்டிஎப்சி போன்ற நிறுவனங்கள் 1.50 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்தது.
ஏசியன் பெயின்ஸ், லுபின், பெல், ஹிரோ மோட்டோ கார்ப், கெயில், கோல் இந்தியா போன்ற முக்கிய நிறுவனங்கள் இன்று சரிவை தழுவியது.