டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக நியூயார்க் நகரில் இருக்கும் மார்க்கியூ பிளாசா ஹோட்டல், இந்தியா முழுவதும் இருக்கும் இந்நிறுவன சொத்துக்கள் அனைத்தும் அரசின் கையில் செல்ல இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் மொத்த சொத்துக்களையும் அமெரிக்க நிறுவனத்தின் உதவியினால் அரசின் கையில் செல்லாமல் காப்பாற்றி உள்ளது சஹாரா. எப்படி..?
36,000 கோடி ரூபாய் ஊழல்
நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய், முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய 36,000 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளதாக, சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் செபி, ராய் மீது வழக்குத் தொடுத்தது.
ஜாமின்
இந்தக் குற்றம் உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுச் சில வருடங்களுக்குச் சிறைவாசம் அனுபவித்த சாஹார குழுமத்தின் தலைவர்களுக்கு ஜாமினில் சில மாதங்களுக்கு முன் சில முக்கிய நிபந்தனைகளுடன் வெளிவந்தனர்.
5000 கோடி ரூபாய்
இதில் முக்கியமான ஒன்று தற்போது நிலுவையில் இருக்கும் 14,000 கோடி ரூபாய் தொகையில் ஏப்ரல் 2017க்குள் 5,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டி கட்டாயத்தில் இருக்கிறது சாஹாரா குழுமம்.
இதுநாள் எவ்விதமான உதவியும் கிடைக்காமல் தவித்துவந்த நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்று இவர்களுக்குக் கைகொடுத்துள்ளது.
அச்சரியம்..
உள்நாட்டு வங்கிகளும், வெளிநாட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் உதவி அளிக்க மறுத்து வந்த நிலையில், இந்தியாவில் மிகவும் குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டுமே கொண்டு இருக்கும் எம்ஜி கேப்பிடல் எல்எல்சி நிறுவனம் சாஹார குழுமத்திற்குச் சொந்தமான ஹோட்டலை 4000 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போது நீதிபதிகள் ஆச்சரியத்தில் முழ்கினார்.
550 மில்லியன் டாலர்
நியூயார்க் நகரில் சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக இருக்கும் மார்க்கியூ பிளாசா ஹோட்டல்-ஐ எம்ஜி கேப்பிடல் எல்எல்சி நிறுவனம் 550 மில்லியன் டாலர் தொகைக்கு வாங்க ஒப்புக்கொண்டுள்ளது என்பதற்கான அறிக்கையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சந்தேகம்
இந்த ஒப்பந்தத்தில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த நிதிபதிகள், சஹாரா நிறுவனத்தை முன்பணமாக 2,000 கோடி ரூபாயைச் செலுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், சஹாரா 100 கோடியைச் செலுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் எம்ஜி கேப்பிடல் எல்எல்சி நிறுவனத்தின் டெக்சாஸ் தலைமையகத்திற்கு 750 கோடி ரூபாய் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பின்வாங்கினால் முன்தொகை திருப்பி அளிக்கப்படாது எனவும் உச்சநீதிமன்றம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
13 சொத்துக்கள்
ஹோட்டல் விற்பனை உடன் சஹாரா நிறுவனம் இந்தியாவில் சுமார் 13 முக்கியச் சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது, இதன் மூலம் 5,000 கோடி ரூபாயை ஏப்ரல் மாதத்திற்குள் செலுத்த முடிவு செய்துள்ளது.
25,000 கோடி ரூபாய்
ஆகஸ்ட் 2012ஆம் ஆண்டுத் தொடுக்கப்பட்ட இவ்வழக்கின் மூலம் சஹாரா குழுமம் செபி அமைப்பிற்குச் சுமார் 25,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் இதுவரை 11,000 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது.
22 மாதம் கூடுதல் அவகாசம்
மீதமுள்ள 14,000 கோடி ரூபாயைச் செலுத்தக் கூடுதலாக 22 மாதங்கள் கால அவகாசத்தைச் சஹாரா குழுமத்தின் சார்பாகக் கபில் சிபில் கேட்டார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதற்கு முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.
விற்பனை செய்ய மறுப்பு
அதேபோல் பிரிட்டன் நாட்டைத் தலைமையாகக் கொண்டு சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக இருக்கும் போர்ஸ் இந்தியா என்ற F1 அணியை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன் மதிப்பு 510 கோடி ரூபாய்.