பஞ்சாப் நேஷ்னல் வங்கி 11,400 கொடி ரூபாய் மொசடி ஏற்பட்டுள்ளதாகப் புதன்கிழமை அறிவித்ததை அடுத்து இரண்டு நாட்களில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை முதலீட்டினை இழந்துள்ளது.
இந்த மதிப்பானது பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ஒரு வருட லாபத்தில் 6 மடங்கை விட அதிகம் என்று தரவுகள் கூறுகின்றன.
பங்கு சந்தை
மும்பை பங்கு சந்தையில் புதன்கிழமை சந்தை நேர முடிவில் 10 சதவீதத்தினை இழந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் 11.97 சதவீதம் வரை பங்கின் மதிப்பினை இழந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் 1.77 பில்லியன் டாலர் மோசடி நடைபெற்று இருப்பதே ஆகும்.
சரிந்த முதலீடுகள்
பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவினால் 38,000 கோடி ரூபாயாக இருந்த மதிப்பானது 8,076.59 கோடி சரிந்து 31,132.41 கோடியாக உள்ளது. இது நிறுவனத்தின் 2016-2017 நிதி ஆண்டில் பெற்ற 1,324 கொடி ரூபாய் நிகர லாபத்தில் 6 மடங்குகளை விட அதிகமாகும்.
மோசடியின் மதிப்பு
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ஏற்பட்டுள்ள மோசடியின் மதிப்பு 2016-2017 நிதி ஆண்டில் பெற்ற 1,324 கொடி ரூபாய் நிகர லாபத்தில் 8 மடங்குகளை விட அதிகமாகும்.
எப்படி நடந்தது
பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி வைர நகை வியாபாரியான நீராவ் மோடிக்கு வெளிநாட்டு வணிகச் செய்ய மும்பை வங்கி கிளை ஒன்றில் இருந்து 1.77 பில்லியன் டாலர் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு LoUs எனப்படும் உத்தரவாத மோசடியின் கீழ் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தது.
வழக்குப் பதிவு
இதுகுறித்து நீராவ் மோடி, அவரது மனைவி, அண்ணன், மற்றும் தாய் மாமா மேல் சிபிஐ-ல் புகார் அளித்துள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி வங்கி அதிகாரியான கோகுல்நாத் ஷெட்டி மீதும் புகார் அளித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் 10 ஊழியர்களைப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கடன் அளித்துள்ள வங்கிகள்
பஞ்சாப் நேஷ்னல் வங்கி இந்தப் பரிவர்த்தனை மூலம் யாரிடம் இருந்து எல்லாம் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கவில்லை என்றாலும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உட்பட 30 வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து பணத்தை நீராவ் மோடிக்கு அளித்துள்ளது.
இன்று பங்கு சந்தையில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி என மூன்று நிறுவனப் பங்குகளும் சரிந்து தான் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
சத்யம் நிறுவனம் செய்த மோசடியை விட இது மிகப் பெரிய மோசடியாக உள்ள நிலையில் நீராவ் மோடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிஎன்பி ஹவுசிங் ஃபினாஸ்
பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை நிறுவனமான பிஎன்பி ஹவுசிங் ஃபினாஸ் நிறுவனத்தின் பங்குகளும் என்று 4.30 சதவீதம் சரிந்து 1199 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.