மத்திய பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி கடைநிலை ஊழியருக்குச் சொந்தமான வீடுகளில் லோக் அயுக்தா காவல்துறையினர் நடத்திய சோதனையில், 22 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், தங்கம் , வெள்ளி உட்பட 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரூ.4 கோடி சொத்துகள் பறிமுதல்
அஸ்லாம்கான் என்ற அந்த ஊழியர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், லோக் அயுக்தா காவல் துறையினர் அவருக்குச் சொந்தமான 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் அதிகாரி பிரவீன் சிங் பாகெல் தெரிவித்தார்.
ரூ.500 சம்பளம்
இந்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அஸ்லாம்கானுக்கு 1988 ஆம் ஆண்டு மாதம் 500 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் 18000 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற்று வருவதாக மாவட்ட காவல் அதிகாரி திலீப் சோனி கூறினார்.
அடுக்குமாடி குடியிருப்புகள், ஆடம்பர மாளிகைகள்
அவரது வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 22 லட்சம் ரூபாய் பணம், தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், அடுக்கு மாடிக்குடியிருப்புகள், வீடுகள் உட்பட 20 அசையாச் சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுதவிர விலை உயர்ந்த இரண்டு 4 சக்கர வாகனங்கள் அவரிடம் உள்ளதாகச் சோனி கூறினார்.
தங்க பிஸ்கட்டுகள்
தலா 100 கிராம் மதிப்புள்ள 11 தங்க பிஸ்கட்டுகள் அஸ்லாம்கானின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதாகப் பாகெல் கூறினார். மேலும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் தொடங்கப்பட்ட 10 வங்கிக் கணக்குகளில் அதிக அளவில் பணம் செலுத்தியிருப்பதாகக் கூறிய அவர், அவற்றை முடக்க நடவடிக்கை தொடங்கிவிட்டதாகக் கூறினார்.


Click it and Unblock the Notifications