இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைச் சனிக்கிழமை வெளியிட்டது. அதில் 20.6 சதவீதம் என 5,005.7 கோடி ரூபாய் நிகர லாபம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு எச்டிஎப்சி வங்கியின் இரண்டாம் காலாண்டில் லாபம் 4,151 கோடி ரூபாயாக இருந்தது.
வட்டி வருவாய்
நிகர வட்டி வருவாய் உயர்ந்து 11,763.41 கோடி ரூபாயாக உள்ளது. கடன் வழங்கல் வளர்ச்சி சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் 24.1 சதவீதமாக வளர்ச்சி அடைந்து 7.50 லட்சம் கோடியாக உள்ளது. அதே நேரம் டெபாசிட் வளர்ச்சி 20.9 சதவீதம் அதிகரித்து 8.33 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
வட்டி இல்லா வருவாய்
வங்கியின் பிற சேவைகள் மூலம் வட்டி இல்லாமல் மட்டும் 2018 செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 4,015.6 கோடி ரூபாயினை வருவாயாக எச்டிஎப்சி வங்கி பெற்றுள்ளது.
வாரா கடன் குறைப்பு
ஜூன் காலாண்டில் எச்டிஎப்சி வங்கியின் வாரா கடன் 0.41 சதவீதமாக இருந்து வந்த நிலையில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 0.40 சதவீதமாக உள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
எச்டிஎபசி வங்கியில் 2017 செப்டம்பர் 30-ம் தேதி 86,457 ஊழியர்கள் இருந்தனர். தற்போது 2018 செப்டம்பர் 30 வரையில் 94,907 ஊழியர்கள் உள்ளனர்.
வங்கி கிளைகள்
2018 செப்டம்பர் 30-ம் தேதி வரையில் எச்டிஎப்சி வங்கிக்கு 4,825 வங்கி கிளைகளும், 13,018 ஏடிஎம் மையங்களும் உள்ளன.