கடந்த ஆகஸ்ட் 2018-ல் இருந்து உலகம் முழுவதும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 2018-ல் சுமார் 33,300 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த தங்கம் (24 கேரட், 10 கிராம்), இன்று சுமார் 34,100 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இது சென்னை விலை நிலவரம்
அதோடு கடந்த ஜனவரி 2019-ல் கூட இந்தியாவின் தங்க இறக்குமதி 46 டன்களாக அதிகரித்திருக்கிறது. ஜனவரி 2018-ல் இந்தியாவின் தங்க இறக்குமதி வெறும் 28 டன்களாக இருந்தது. இப்போது விலை உச்சியில் இருக்கின்ற போதும் இந்திய தங்க இறக்குமதி அதிகரித்திருப்பது கவனிக்க வேண்டியது. டிமாண்ட் இருந்தால் தானே வியாபாரிகள் வாங்கி வைப்பார்கள். அதுவும் இத்தனை விலை அதிகரித்திருக்கும் போது தங்கத்தை வாங்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? விலை ஏறப் போகிறது என்று அர்த்தம்
இந்தியா முழுமைக்கும் இது கல்யாண சீசன் வேறு தொடங்கி இருப்பதால் தங்க நகைகளின் வியாபாரம் நிச்சயம் நன்றாக இருக்கும் என நகைக் கடை வியாபாரிகள் சங்கம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. அதோடு தங்கத்தின் தேவை இனி வரும் காலங்களில் கூடி இந்தியாவில் தங்கம் விலையும் அதிகரிக்கும் என உலக தங்க கவுன்சில் (World Gold Association) கணித்திருக்கிறது. ஏன்..?
செண்டிமெண்ட்
அதோடு அக்ஷய திருதியை நன்னாள் வேறு வரும் மே மாதம் முதல் வாரக் கடையில் வர இருக்கிறது. கல்யாணம் மற்றும் அக்ஷய திருதியை என இரண்டு சீசன்களும் ஒன்றாக இருப்பதால் இனி நிச்சயமாக தங்கத்தின் விலை கீழே வராது எனவும் சந்தை வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.
தேர்தல்
உலக தங்க கவுன்சில் "இந்தியாவிl மக்களவைத் தேர்தல் நடக்க இருப்பதால், மக்கள் கையில் பணப் புழக்கம் பயங்கரமாக அதிகரிக்கும் எனவே, மக்கள் கையில் புழக்கத்துக்கு வரும் பணத்தில் பெரும்பகுதி தங்கத்தில் முதலீடு செய்வார்கள்" என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. அதோடு இந்தியாவின் கடந்த கால தங்க டிமாண்ட் மீண்டும் வரும் எனவும் எதிர்பார்க்கிறார்களாம்.
அரசு உதவி
பிரதமரின் ஓய்வூதியத் திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டம் போன்ற அரசுப் பணமும் ஒன்றாக, அதுவும் இந்த பண்டிகை காலங்களில் வெளி வருவதால் தங்கத்துக்கான டிமாண்ட் கூடத் தான் செய்யும் எனவும் கணித்திருக்கிறது உலக தங்க கவுன்சில்.
அதிகரிக்கும் பணப் புழக்கம்
மேலே சொன்ன விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்தால் மட்டும் விவசாயிகள் மூலம் இந்திய பொருளாதாரத்தில் 75,000 கோடி ரூபாய் வரும். அதோடு வருமன வரி வரம்பை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தியதால் வருமான வரியாக அரசின் கஜானாவின் அடைக்கப்பட வேண்டிய 18,500 கோடி ரூபாய் இந்திய பொருளாதாரத்தில் நுகர்வுக்காக பயன்படுத்தப்படும். எனவே இந்த மொத்த 93,500 கோடி ரூபாயில், இந்திய மக்கள் குறைந்தபட்சம் 15,000 கோடி ரூபாயாவது தங்கத்துக்கு ஒதுக்குவார்கள் எனவும் கணித்திருக்கிறது உலக தங்க கவுன்சில். குறிப்பாக விவசாயிகள் தங்கத்தின் முதலீடு செய்யக் காரணம் நகைகளை வைத்து வங்கியில் விவசாயக் கடன் வாங்குவதற்காகத் தான். வட்டியும் குறையும் அல்லவா..? அது மட்டும் இல்லாமல் உலக அளவில் பல்வேறு மத்திய வங்கிகளும் டன் கணக்கில் தங்கத்தை வாங்கிக் குவிப்பதால் மேலும் விலை உயர்வை உறுதி செய்திருக்கிறது உலக தங்க கவுன்சில். ஏன் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குகிறார்கள்..?
அதென்ன மத்திய வங்கிகள்
இந்திய வங்கிகளின் தலைவன் என்றால் அது ஆர்பிஐ தான். இப்படி ஒவ்வொரு நாட்டு வங்கிகளுக்கும் ஒரு தலைமை அமைப்பு இருக்கும். அந்தந்த நாடுகளில் பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ள அந்த வங்கிகளின் தலைமை அமைப்புகளுக்கும் பெரிய பொறுப்பு உண்டு. ஒரு நாட்டு வங்கிகளுக்குக்கான தலைமை அமைப்புகளை மத்திய வங்கிகள் எனச் சொல்வார்கள். இந்த மத்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தை பல்வேறு முதலீடுகளில் போட்டு வைப்பார்கள். அதில் தங்கத்துக்கும் எப்போதுமே தனி இடம் உண்டு.
1971-க்குப் பிறகு
1971-ம் ஆண்டுக்குப் பிறகு 2018-ல் தான் மத்திய வங்கிகள் மிக அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என உலக தங்க கவுன்சில் சொல்கிறது. 2018-ம் ஆண்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகளால் வாங்கப்பட்ட தங்கத்தின் அளவு 651.5 டன். உலகில் வளர்ந்து வரும் சந்தைகளான ரஷ்யா, துருக்கி, கசகஸ்தான் போலந்து, இந்தியா போன்ற நாடுகள் 2018-ல் அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.
பங்காளிப் பகை
அமெரிக்க பொருளாதார வலிமைச் சின்னமாக இருப்பது டாலர் தான். டாலர் ஏறினால் தங்கம் இறங்கும், தங்கம் ஏறினால் டாலர் இறங்கும். இந்த இரண்டுமே பகையுள்ள பங்காளிகள் போலத் தான். ஆங்கிலத்தில் Negative correlation எனச் சொல்வார்கள். பொதுவாக இது தான் தங்கத்துக்கும் டாலருக்கும் உள்ள விலை மாற்ற உறவு..? அதனால் தான் டாலருக்கு இணையாக தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள் ஆர்பிஐ போன்ற மத்திய வங்கிகள்.
உதாரணம்
ஆர்பிஐ இடம் 50 ரூபாய் அளவுக்கு டாலரும் 50 ரூபாய் மதிப்புக்கு தங்கமும் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அமெரிக்க சீன வர்த்தகப் போரால் டாலர் மதிப்பு 45 ரூபாய்க்கு சரிந்து விட்டது என்றால் தங்கத்தின் விலை 55 ரூபாயாக அதிகரித்திருக்கும். வர்த்தகப் போர் எல்லாம் சரியாகி டாலர் 60 ரூபாய்க்கு அதிகரித்தால் தங்கத்தின் விலை 40 ரூபாய்க்கு சரிந்திருக்கும். ஆக எப்படி பார்த்தாலும் ஆர்பிஐ-ன் 100 ரூபாய், அதே 100 ரூபாய் அளவுக்கு இருக்கும். இப்படி டாலரின் விலை மாற்றங்களை அனுசரித்து தன் சொத்துக்களை சரி செய்து கொள்ளத் தான் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.
டாலர் நிலவரம்
ஜனவரி 01, 2018-ல் ஆர்பிஐ வலைதளத்தில் சொல்லப்படிருக்கும் பரிமாற்ற விலைப்படி 1 அமெரிக்க டாலருக்கு 63.66 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஜனவரி 01, 2019-ல் 1 அமெரிக்க டாலருக்கு 69.43 ரூபாய் கொடுத்திருக்கிறோம். ஆக 9.06 சதவிகிதம் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது, டாலரின் விலை அதிகரித்திருக்கிறது.
தங்கம்
22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ஜனவரி 01, 2018-ன் படி விலை 2,821 ரூபாய், அதே 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ஜனவரி 01, 2019-ல் விலை 3,246 ரூபாய். ஆக லாபம் 15.06 சதவிகிதம். எனவே டாலரில் முதலீடு செய்து வைப்பதற்கு பதில் தங்கத்தில் முதலீடு செய்து வைத்து வரும் லாபத்தை வைத்தே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் ஏற்ற இறக்கத்தை சரி செய்து கொள்கிறது ஆர்பிஐ.
ஹெட்ஜிங்
அதனால் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் விலை 9.06 சதவிகிதம் அதிகரித்த போதும் தங்கத்தின் மூலம் கிடைத்த 15.06 சதவிகித லாபத்தை வைத்து சரி கட்டிக் கொண்டது. இப்படி ஒரு முதலீட்டில் இருந்து வரும் நஷ்டத்தை வேறு முதலீட்டை வைத்து சமாளிப்பதற்குப் பெயர் தான் Hedging என்பார்கள்.
அதே டெக்னிக்
இதே டெக்னிக்கைத் தான் ரஷ்யா, அர்ஜென்டினா, போலாந்து, துருக்கி என அனைவரும் செய்து வருகிறார்கள். அதனால் தான் தொடர்ந்து உலக சந்தைகளில் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது. உலக அளவில் தங்கத்தின் விலை அதிகரிப்பதால் தான் இந்தியாவிலும் தங்கத்தின் விலை கட்டாயம் அதிகரிக்கும் என கற்ப்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள்.
தங்க விலை உயரும்
2018-ம் ஆண்டில் சென்னையில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 30,340 ரூபாயாக இருந்தது. மேலே சொன்னது போல் உலகமே தங்கம் வாங்குவதைப் பார்த்த உடன் இந்த விலை இன்று 34,100 ரூபாய்க்கு அதிகரித்திருக்கிறது. இனி இந்த 2019 ஆண்டு முழுவதுமே இப்படி தங்கம் விலை உயர்ந்தே வர்த்தகமாகும், அதிகபட்சமாக தங்கத்தின் விலை (24 கேரட், 10 கிராம்) 2019 முடிவுக்குள் 38,500 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை தொட வாய்ப்பிருப்பதாகவும் கணித்திருக்கிறது உலக தங்க கவுன்சில் (World Gold Association).