என்னதான் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், நம்மவர்களின் ஆசையும் குறையபோவதில்லை. தங்கத்தின் விலையும் குறைய போவதில்லை, என்பதை நீருபிக்கும் விதமாக, சவரன் தங்கத்தின் விலை மீண்டும் 29,000 ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த வாரத்தில் 3 நாட்களில் ஒரு சவரனுக்கு 376 ரூபாய் மட்டுமே குறைந்திருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் செப்டம்பர் 20 முதல் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 464 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது கவனிக்கதக்கது.
இந்திய அரசும் தங்கத்தின் இறக்குமதி வரியை உயர்த்தியது, இதனால் இறக்குமதி குறையும் என்றும் எதிர்ப்பார்த்து குறைத்தது. ஆனால் இதன் விளைவு தங்கத்தின் விலை இங்கு அதிகரித்தது தான் மிச்சம். ஏன் சொல்லப்போனால் விலை எவ்வளவு வந்தால் என்ன? நாங்கள் வாங்குவதை வாங்கித் தான் தீருவோம் என்பது போல, இன்றளவிலும் தங்க நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டு தான் இருக்கிறது.
ஏன் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாட்டில் நீண்ட கால அரசியல் நிச்சயமற்ற தன்மைக்காக வாய்ப்புகளை இது அதிகரித்ததுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற போக்கை உருவாக்கியதோடு, முதலீடு குறித்தான பயத்தையும் உருவாக்கியுள்ளது. ஆக முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போதைய பாதுகாப்பான முதலீடாக, தங்கத்தின் மீதே அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையானது மிக வலுவான நிலையிலேயே வர்த்தகமாகி வருகிறது. அதிலும் சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1515 - 1530 டாலர் என்ற நிலையிலேயே இருந்து வருகிறது.
இந்தியாவில் தேவை அதிகரிப்பு
இந்தியாவை பொறுத்த வரை தங்கத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துள்ள நிலையில் இது மேலும் விலை அதிகரிப்புக்கு, ஒரு காரணமாக அமைந்துள்ளது. அதிலும் வரவிருக்கும் நவராத்திரி, தீபாவளி பண்டிகை கால சீசன் ஆரம்பிப்பதால் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களும் சரி, தங்க நகையாக வாங்குபவர்களும் சரி தங்கத்தில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு
அதிலும் கிராமப்புறங்களில் தங்கத்தின் மீதான ஈடுபாட்டை எதை வைத்தும் தடுக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். குறிப்பாக நடப்பு பருவத்தில் பருவமழையும் பரவலாக அனைத்து பகுதிகளில் பெய்து வரும் நிலையில், உற்பத்தி மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் முதலீட்டில் முன்னுரிமை என்பது தங்கத்தின் மீதே. ஆக இது இன்னும் விலையேற்றத்துக்கு வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க நகை சீட்டுகள்
குறிப்பாக தங்கத்தின் விலை அதிகரித்து வரும் இந்த நிலையில், நடுத்தர மக்களின் பார்வையில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. ஆக மக்கள் மாத மாதம் குறைந்த அளவு முதலீடு செய்யும் திட்டத்தினை மிகச் சிறந்த திட்டமாக நினைக்கின்றனர். பெரிய பெரிய நகைகடைகள் கூட தற்போது நேரடி விற்பனையை நம்பாமல் இப்படி ஒரு வகையில் விற்பனையை ஊக்கப்படுத்தி வருகின்றன.
பற்பல சலுகைகள்
அதிலும் இவ்வாறு மாத மாதம் முதலீடு செய்பவர்களுக்கு செய்கூலி கிடையாது, சேதாரத்தில் சலுகை, மேலும் இது தவிர பல சிறப்பு சலுகைகள் என அசத்தி வருகின்றன. ஆக இதுபோன்ற திட்டங்கள் இன்றளவிலும் கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் களைகட்டி வருகின்றன என்றே கூறலாம். இதுபோன்ற திட்டங்கள் தீபாவளியை குறி வைத்தே நடத்தப்படுகின்றன. இதனால் இது தீபாவளி விற்பனையை இன்னும் ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை அதிகரிக்கும்
அடுத்து வரும் காலாண்டிலும் தொடர்ந்து முகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதால் தங்கத்திற்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் வரவிருக்கும் பண்டிகைகால சீசன், திருமண முகூர்த்தம் ஆரம்பிக்க விருப்பதால் தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றும், மேலும் சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலையானது தொடர்ந்து வலுவாக இருந்து வரும் நிலையிலும், நீண்ட காலபோக்கில் தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.