அமெரிக்கா, சீனா, பிரிட்டன் என உலகின் பெரும்பாலான நாடுகளில் திடீரென கடன் இருப்பு அதிகமாகி, கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது உலகளாவிய பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மக்கள் கடன் வாங்குவது புரிந்துக்கொள்ள முடியும், ஆனால் உலக நாடுகள் எப்படி யாரிடம் கடன் வாங்கும்..? இந்த கடன் யாரிடம் தற்போது யாரிடம் உள்ளது..? அதை எப்படி திருப்பிச் செலுத்துவது? உலக பொருளாதாரத்தில் இதன் தாக்கம் என்ன? என பல கேள்விகள் எழுந்து வருகின்றன.
உலகளாவிய கடன் அளவு பெரிய அளவில் அதிகரிப்பதற்கான தொடக்கப்புள்ளி 1970களில் ஆரம்பமாகிறது. அமெரிக்கா தனது நாணய இருப்பை தங்க கையிருப்புடன் இணைத்திருக்கும் முறையை ரத்து செய்ததில் இருந்து துவங்கியது. அதாவது 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தங்க இருப்பு இருந்தால் அமெரிக்க அரசால் 1 டிரில்லியன் டாலர் அளவிலான பணத்தை அச்சிட முடியும். இந்த முறை ரத்து செய்ததன் விளைவாக அமெகிக்கா அளவுக்கு அதிகமான பணத்தை அச்சிட்டு பணத்தை செலவிட துவங்கின.

அதன் பின்னர் அதிக அளவில் பணத்தை அச்சிட்ட அமெரிக்கா, சாலை, பாலம், நெடுஞ்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு செலவிட்டது. இதன் மூலம் இத்திட்டத்தில் பணியாற்றிய மக்களுக்கு சம்பளமாகவும், நிறுவனங்களுக்கு கான்டிராக்ட் தொகையாகவும் பணம் சென்றது.
மக்கள் கைகளுக்கு வந்த இந்த பணத்தை வங்கிகளில் சேமித்தனர். பின்னர் வங்கிகள் அந்தப் பணத்தை கடன் தேவைப்படும் அனைவருக்கும் வழங்கின, இதில் அரசும் முக்கிய பிரிவாக இருந்துள்ளது. குறிப்பாக ரீடைல் வங்கிகள் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட நிரந்தர வருமானம் கொடுக்கும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் அரசுக்கு கடன் கொடுத்துள்ளது. அமெரிக்க அரசு மீண்டும் இந்த கடனை வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும், நல திட்டங்களுக்கும் செலவிடுவதை வழக்கமாக்கியுள்ளது.
இந்தக் கடன் சுழற்சி 50 ஆண்டுகளாக தொடர்ந்து வந்துள்ளதால் அரசுகள் கடன் பத்திரத்தின் மூலம் வாங்கிய கடன் சுமை தற்போது 40 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் மதிப்பு 32 டிரில்லியன் டாலராக மட்டுமே உள்ளது.
கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தும் இதேவேளையை தான் செய்தது, இதனால் தற்போது உலக நாடுகளின் மொத்தக் கடன் அளவு சுமார் 300 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, அதேபோல் உலக நாடுகளின் மொத்த GDP சுமார் 123 டிரில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. இதன் மூலம் ஜிடிபியை தாண்டி சுமார் 230 சதவீதம் அதிக கடனில் உலக நாடுகள் தவித்து வருகிறது.
இதனால், உலக நாடுகளின் மொத்தக் கடனை திருப்பிச் செலுத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தாண்டி, அதற்கான வட்டியை தொடர்ந்து செலுத்துவதும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலக நாடுகள் பத்திரம் மூலம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாவிட்டால் 3 விஷயங்களை செய்யும்..
1. அதிகப்படியான பணத்தை அச்சிட்டு வட்டியை செலுத்தலாம், இதோடு பத்திரத்தை Buyback செய்யலாம். ஆனால் இதை செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும்.
2. அரசுக்கு வருமானத்தை அதிகரித்து அதன் மூலம் கடனை குறைக்கவும், வட்டியை செலுத்தவும் வரியை உயர்த்தலாம்.
3. இறுதியாக திவால் ஆவதை தடுக்க கூடுதலாக கடன் வாங்கி வட்டியை செலுத்தலாம்.
முக்கிய பிரச்சனை
முன்பு பெரும்பாலான பணம் வங்கி நிதியமைப்பிலேயே இருந்த காரணத்தால் கடன் சுழற்சி எளிதாக இருந்தது, ஆனால் தற்போது பெரும்பகுதி பணம் பங்குச்சந்தைகளுக்கு செல்கிறது. இதனால் அரசுக்கு கடன் வழங்கும் அளவிற்கு வங்கிகளிடம் முன்பு போல போதுமான பணம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் கடன் மற்றும் வட்டி சுமையை சமாளிப்பதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.
போரால் அடுத்த முக்கிய பிரச்சனை
தற்போது மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் போர் அச்சம் அதிகமாக இருந்து வருவதாலும், இதில் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும தொடர்புடைய காரணத்தாலும் உலகம் முழுவதிலும் பொருளாதாரம், நிதி சந்தை மிகப்பெரிய சிக்கல் மாட்டிக்கொண்டு உள்ளது.
இதனால் முதலீட்டு நிறுவனங்களும், மக்களும் அரசு பத்திரம், பங்குச்சந்தையை காட்டிலும் தங்கம், வெள்ளி போன்ற பாதுக்காப்பான சொத்துக்களில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடன் சுமையால் அமெரிக்கா போன்ற ஒரு பெரிய பொருளாதார நாடு திவால் ஆனால் அடுத்தடுத்து பல நாடுகள் சீட்டுக்கட்டுப்போல் சரியும். இது உலக பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications


