மும்பை: தென் இந்தியாவில் தங்கம் என்றாலே அது பெண்களுக்கு மிகப் பிடித்த ஒரு உலோகமாக இருக்கிறது. இதனால் பெண்கள் தங்கத்தின் மீதான மோகம் இன்றளவிலும் குறைந்த பாடாக இல்லை.
இந்த நிலையில் ஆய்வாளர்கள் மத்தியில் 10 கிராம் தங்கத்தின் விலை 42,000 ரூபாயை தொடலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளனர்.
இதனால் ஆபரண தங்கத்தின் விலையும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உச்சாணிக் கொம்பை தொட்டுள்ள நிலையில் இன்னும் எவ்வளவு ரூபாய் அதிகரிக்குமோ. நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே ஆகிவிடுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.
என்ன காரணம்?
இதற்கு முக்கிய காரணம் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, மற்றும் அமெரிக்கா டாலரின் மதிப்பும் தங்கம் விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளதாகவும், இது தவிர மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம் போன்ற பல காரணங்களால் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து வருகிறது என்றும், இது இந்த வருட இறுதிக்குள் 42,000 ரூபாயை தொடலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம்
ஒரு புறம் மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையிலும் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் சர்வதேச சந்தையான காமெக்ஸில் அவுன்ஸூக்கு 1650 டாலர் வரை செல்ல வாய்ப்பிருப்பதாகவும், இந்திய எம்.சி.எக்ஸ் சந்தையில் 42,000 ரூபாயை தொட வாய்ப்புள்ளதாகவும் காம்டிரெண்ட்ஸ் ரிசர்ச் தலைமை செயல் அதிகாரி பிடிஐக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
விலை எதனால் அதிகரிக்கும்?
இந்த மஞ்சள் உலோகத்தின் விலையானது, நிலவி வரும் நிச்சயமற்ற அரசியல் தன்மை, ரூபாய் வலிமை இழப்பால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, ஆண்டின் இறுதி நிலைகள் மாறுபடுவதால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும், இந்த நிலையில் எம்.சி.எக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை 37905 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே காமெக்ஸ் சந்தையில் 1,494.35 டாலராகவும் வர்த்தமாகி வருகிறது.
ரூபாய் சரிவும் காரணம்
சர்வதேச சந்தையில் விலை ஒரு புறம் அதிகரித்தாலும், மறுபுறம் இந்தியாவைப் பெறுத்தவரையில் இந்திய ரூபாயின் சரிவு தங்கம் விலையேற்றத்துக்கு வழி வகுத்தது என்றே கூறலாம். இது குறித்து பிசினஸ் ஸ்டேண்டர்டுக்கு தனது கருத்தை தெரிவித்துள்ள மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின், கமாடிட்டி ஆய்வாளர், நடப்பு ஆண்டில் தங்கம் இது வரை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றும், இதனால் தங்கம் நல்ல வருவாயை கொடுத்துள்ளது என்றும், ஏனெனில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இன்னும் விலை அதிகரிக்கும்
மேலும் தங்கம் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், எனினும் வர்த்தகபோர் தொடர்பான நிச்சயமற்ற தன்மையை பொறுத்து, மத்திய வங்கிகள் நீண்ட காலத்திற்கு வட்டி குறைப்பை மேற்கொள்ள தூண்டுகின்றன, இது நீடிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு இது மேலும் தூண்டுதலாக இருக்கும் என்றும் மோதிலால் ஆஸ்வால் ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு
மேலும் நிலவி வரும் வர்த்தகபோர் விலையிறங்க வழி வகுக்கலாம். இருப்பினும் விலைகள் நேர்மறையாக இருக்கின்றன. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முந்தைய உயர்வான 39,500 இது தொடலாம் என்றும் கூறியுள்ளார். இதே கோடாக் நிறுவனம் காமெக்ஸ் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 1,460- 1,530 டாலராக இருக்கும் என்றும், இதே இந்திய சந்தையில் 36,800 - 39,400 ரூபாய் வரை வர்த்தகமாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான முதலீடு எனும் நிலையில் மூன்றாவது காலாண்டிலும் இது அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
உலகப் பொருளாதாரம் பாதிப்பு
மேலும் அமெரிக்கா சீனா வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் மற்றும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய நம்பிக்கையானது வர்த்தகர்களை சில இலாபங்களை பதிவு செய்ய தூண்டியுள்ளது என்றும், மேலும் தற்போதைய வர்த்தக கவலைகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதிய திட்டங்களில் இருந்து பார்க்கும் போது உலகப் பொருளாதாரத்தை பாதித்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
நிலவி வரும் அரசியல் பதற்றம்
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் உலகப் பொருளாதாரம் 2019ம் ஆண்டில் 3.5 சதவிகிதமாகவும், இதே 2020ம் நிதியாண்டில் 3.6 சதவிகிதம் தான் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீதான் தாக்குதலுக்கு பின்னர் மத்திய கிழக்கு பகுதிகளில் அரசியல் பதற்றங்களும் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் மீது குற்றச்சாட்டு
மேலும் கடந்த செப்டம்பர் 24ம் தேதியன்று அமெரிக்க சட்டம் இயற்றுபவர்கள் அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது முறையாக குற்றச்சாட்டு விசாரணையை ஆரம்பித்த பின்னர் தங்கம் விலையும் ஏற்றம் காண ஆதரவைக் கண்டது. இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் நிதிச் சந்தைகளிலும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது. இந்தியவைப் பொறுத்த வரையில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையால் ரூபாய் மேலும் பலவீனமடையும் என்றும், இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை உறுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதெல்லாம் விலை ஏற்றம் காண வழி வகுக்கும்
இந்தியாவில் நிலவி வரும் பொருளாதாரமந்த நிலையை போக்க அரசு பல்வேறு வரி சலுகையும் அளித்து வருகிறது. இதனால் பொருளாதாரம் சம்பந்தமான நடவடிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் இது போன்ற திட்டங்களினால் நிதிப் பற்றாக்குறையை உருவாக்கும், இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும் என்றும், இது தங்கம் விலையை ஏற்றம் காணவே வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது.