அவென்தா குரூப் ஆப் கம்பெனி-யின் உரிமையாளரான கௌதம் தாபர்-ஆ பணச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை கௌதம் தாபர்-க்கு சொந்தமான வீடு அலுவலகங்கள் ஆகிய இடத்தில் சோதனை செய்த அமலாக்கத் துறை, அவரைக் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை காவலில் விசாரணை செய்ய அனுமதி கோரப்பட உள்ளது.
யெஸ் வங்கியில் பண மோசடி செய்த குற்றத்திற்காகக் கௌதம் தாபர் மற்றும் அவென்தா குரூப் ஆப் கம்பெனிக்கு தொடர்புடைய பலரின் பெயரில் சிபிஐ பணச் சலவை வழக்குத் தொடுத்தது. இதன் பெயரிலேயே தற்போது அமலாக்கத் துறை சோதனை மற்றும் கைது செய்துள்ளது.
கௌதம் தாபர்
டிசம்பர் 2017ஆம் ஆண்டுக் கௌதம் தாபர் தலைமை வகிக்கும் அவென்தா ரியலிட்டி நிறுவனத்திற்கு யெஸ் வங்கி சுமார் 515 கோடி ரூபாய் கடனை அளித்தது. இந்தக் கடன் அக்டோபர் 30, 2019ல் வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு நடந்தது தான் தற்போது பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.
யெஸ் வங்கி
அவென்தா ரியலிட்டி நிறுவனத்திற்கு யெஸ் வங்கி கொடுத்த 515 கோடி ரூபாய் கடனை வாராக் கடனாக அறிவித்த பின்பு, யெஸ் வங்கி ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞை அடிப்படையில் 'Red Flagged Account' என அறிவித்தது. இதன் அடிப்படையில் சிபிஐ இந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடனை ஆய்வு செய்தது.
சிபிஐ விசாரணை
இந்த ஆய்வில் அவென்தா ரியலிட்டி மற்றும் அதன் ஹோல்டிங் நிறுவனம், அதன் தலைவர்கள், ப்ரோமோட்டோர்கள் மற்றும் பலர் யெஸ் வங்கி கொடுத்த கடனை 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் நம்பிக்கையை உடைத்தல், ஏமாற்றுதல், மோசடி, கிரிமினல், போலி கணக்கிற்குப் பணப் பரிமாற்றம் ஆகிய குற்றங்களைச் செய்துள்ளது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடன் மோசடி
இதைத் தொடர்ந்து சிபிஐ கௌதம் தாபர் மற்றும் அவென்தா குரூப்-க்கு எதிரான FIR பதிவு மார்ச் மாதம் 2020ல் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ரானா கபூர் பெயரும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
யெஸ் வங்கி ரானா கபூர்
மேலும் இந்த மோசடியில் யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ரானா கபூர் முக்கிய நபராக இருப்பது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவென்தா ரியலிட்டி டெல்லியில் அமிர்தா ஷெர்கில் மார்க் பங்களாவை 378 கோடி ரூபாய்க்கு Bliss adobe நிறுவனத்தின் வாயிலாகக் கைப்பற்றியுள்ளது. இந்த Bliss Abode நிறுவனத்தில் ரானா கபூர்-ன் மனைவி தலைவராக உள்ளார்.
டெல்லி பங்களா மீது கடன்
டெல்லி பங்களா வாங்கிய கையோடு இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 685 கோடி ரூபாய்க்குக் கடனுக்கு அடமானம் வைக்கப்பட்டது. முதலில் இந்தப் பங்களா மிகவும் குறைவான விலைக்கு வாங்கப்பட்டு உள்ளது எனக் கேள்வி எழுந்த போது நிலையில் உள்ள பிற கடன்களைச் சேர்த்து இது வாங்கப்பட்டது எனக் கூறப்பட்டது.
அமலாக்கத் துறை
ஆனால் அவென்தா ரியலிட்டி செய்தது மிகப்பெரிய மோசடி என சிபிஐ கண்டுபிடித்துள்ள காரணத்தால் தற்போது அமலாக்கத் துறை அதிரடியாகச் சோதனை செய்து கௌதம் தாபர்-ஐ கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வங்கி மோசடியும் மிகப்பெரியதாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
466.51 கோடி ரூபாய் நஷ்டம்
அவென்தா ரியலிட்டி செய்த இந்த மோசடி மூலம் யெஸ் வங்கிக்கு சுமார் 466.51 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. சிபிஐ குற்றப்பத்திரிகையில் அவென்தா ரியலிட்டி, ஆய்ஸ்டர் பில்டுவெல் ஆகிய நிறுவனத்தையும், அதன் தலைவர்களான ரகுபீர் குமார் ஷர்மா, ராஜேந்திர குமார் மங்கள், டப்சி மகாஜன், கௌதம் தாபர் மற்றும் வங்கி/நிறுவனங்களின் பிற முக்கிய அதிகாரிகளைக் குற்றவாளியாகப் பதிவு செய்துள்ளது.