இந்திய வங்கிகள் தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் சலுகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சலுகையைப் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஆனால் நாட்டில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் இந்திய வங்கிகளில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள கடன் பெருமளவு வராக்கடனாக மாறும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் ராஜ்னிஷ் குமார் நாட்டின் இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் கடன் கொடுப்பது தான் சரியான நேரம் எனக் கூறியுள்ளார்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடன் மற்றும் வங்கி சேவையில் மிகப்பெரிய ஆதிக்கத்தையும் வர்த்தகத்தையும் கொண்டுள்ளது. இவ்வங்கியின் ஒவ்வொரு வட்டி மாற்றமும் வங்கி சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படக்கூடியது.
கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் சந்தித்துள்ள இந்த மோசமான வளர்ச்சி மற்றும் பாதிப்புக் காலத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளின் நிலைப்பாடும் முடிவும் பல முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ராஜ்னிஷ் குமார்
சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் ராஜ்னிஷ் குமார் கொடுத்த போட்டியில், இந்தியப் பொருளாதாரம் தற்போது இருக்கும் சூழ்நிலையில் கடன் கொடுப்பது மிகவும் எச்சரிக்கையாகச் செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தாலும், கடன் கொடுக்க இதுதான் சரியான நேரமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் இந்தக் காலகட்டத்தில் கொடுக்கப்பட்டும் கடன் கண்டிப்பாகத் தவறாகவோ அல்லது வராக்கடனாக மாற வாய்ப்புக் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மறு கடன்
ஜூன் 30 உடன் முடிந்த காலகட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஏற்கனவே கொடுத்த கடன் மீது மறு கடன் கொடுக்கப்பட்டதின் அளவு கடந்த வருடத்தை விடவும் 6.58 சதவீதம் அதிகரித்துத் தற்போது மொத்த மறுகடன் அளவு 23.85 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 1 லட்சம் ரூபாய் கடனை கொடுப்பதற்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தயாராகியுள்ளது.
16 சதவீத கடன்
மேலும் இந்தப் பேட்டியில் ராஜ்னிஷ் குமார் கடன் சலுகை மேலும் கொடுக்கத் தேவையில்லை என்றும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 16 லட்சம் குறுகிய காலக் கடன் திட்டத்தில் 9.5 சதவீத கடன்கள் ஜூன் மாதத்தில் கடன் சலுகை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
அதுவே ஏப்ரல் மாதத்தில் கடன் சலுகை பெற்ற அளவீடு 21 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ. 20 லட்சம் கோடி வராக்கடன்
இந்திய வங்கிகளில் தற்போது மொத்தம் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வராக் கடன் இருக்கும் நிலையில், சலுகை முடிந்த பின்பு 5ல் ஒரு 1 பங்கு கடனை செலுத்த முடியாமல் போனாலும் இந்திய வங்கிகளின் வராக் கடன் 20 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அளவை விடவும் கிட்டதட்ட 2 மடங்கு அதிகமாகும்.
மறு முதலீடு
இந்த வராக்கடன் பிரச்சனையைச் சமாளிக்க வங்கிகள் கையில் இருக்கும் ஓரே வழி, ஏற்கனவே கடன் கொடுத்தவர்களுக்கு மறு கடன் கொடுத்து அவர்களின் வர்த்தகத்தை மீட்டு எடுப்பதே ஆகும். ஆனால் இதுவும் கணிசமான அளவு வராக்கடனைக் குறைக்க மட்டுமே பயன்படும் என்பது வங்கித்துறை வல்லுனர்களின் கணிப்பு.
மறு சீரமைப்பு
மேலும் கடன் சலுகை வர்த்தகத்திற்காக அதிகளவிலான கடன் வாங்கியவர்கள், குறைந்த அளவிலான working capital கடன் பெற்று இருந்தால் அவர்களின் கடன்கள் ஒரு முறை மறு சீரமைப்புச் செய்யலாம் என ராஜ்னிஷ் குமார் யோசனை கூறியுள்ளார்.