இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021ல் பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்றைய காலகட்டத்திலும் மக்களின் விருப்பமான முதலீடாக மட்டும் அல்லாமல், விருப்பமான விலையுயர்ந்த ஆபரணமாகவும் இருந்து வரும் தங்கத்திற்கும் வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியினை 12.5% ஆக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியினை 7.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய நுகர்வோர் நாடாக இருக்கும் இந்தியாவில், இறக்குமதி அதிகமாக இருந்த நிலையில், தங்க கடத்தலும் அதிகமாகியது. இதன் காரணமாக தற்போது மீண்டும் வரி குறைக்கப்பட்டுள்ளது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இன்று வெளியான பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், அது இந்திய சந்தையில் தங்கத்தின் விலையில் எதிரொலித்துள்ளது. முன்னதாக இன்று காலையில் 2000 ரூபாய்க்கு மேல் சரிந்துள்ள நிலையில், தற்போதும் பெரும் சரிவினைக் கண்டுள்ளது. தற்போது 10 கிராமுக்கு 806 ரூபாய் குறைந்து, 48,291 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
இந்திய சந்தையில் தங்கம் விலையானது குறைந்திருந்திருந்தாலும் வெள்ளியின் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் ஏற்றம் கண்டு காணப்படுகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது 10.52% அதிகரித்துள்ளது. இதே இந்திய சந்தையில் 5.45% அதிகரித்துள்ளது. தற்போது கிலோவுக்கு 3,844 ரூபாய் அதிகரித்து, 73,550 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
இதுவே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 4625 ரூபாயாகவும், இதுவே சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 37,000 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. கடந்த நான்கு தினங்களாகவே தொடர்ச்சியாக தங்கம் விலையானது அதிகரித்து வந்த நிலையில், அரசின் வரி குறைப்பு காரணமாக விலை சரிந்துள்ளது.
தூய தங்கத்தின் விலை
சென்னையில் தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து, 5,045 ரூபாயாகவும், இதுவே சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, 40,360 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. அரசின் வரி குறைப்பு காரணமாக விலை சரிந்துள்ள நிலையில், இனி வரும் காலத்திலும் விலையானது சற்று குறைய வாய்ப்பாக வரி குறைப்பானது அமையும்.
வெள்ளி விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 4.60 ரூபாய் அதிகரித்து, 79.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 792 ரூபாயாகவும், கிலோவுக்கு 4600 ரூபாய் அதிகரித்து, 79,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு பட்ஜெட்டில் விலை வரி குறைக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக விலை அதிகரித்துள்ளது.
நகைத் தொழிலை ஊக்குவிக்கும்
இது கடந்த சில ஆண்டுகளாகவே சரிவில் இருந்த நகைக் தொழிலை ஊக்குவிக்கும். ஏனெனில் அதிகளவிலான இறக்குமதி வரியினால், ஆபரணங்கள் ஏற்றுமதி வெகுவாக சரிவினைக் கண்டது. இதன் காரணமாக ஆபரணத் துறையானது பெரும் சரிவினைக் கண்டது. இத்துறை சார்ந்த தொழிலாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். ஆனால் இனி அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக மீண்டும் இந்த துறையானது துளிர்விட ஆரம்பிக்கும்.