என்னதான் தங்கம் விலை அதிகரித்தாலும், தங்கத்தின் மீதான ஆர்வமும் குறைவதில்லை. தங்கம் வாங்குவதும் குறைவதில்லை. எனினும் தற்போதைய காலத்தில் பேப்பர் தங்கத்திலும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
எது எப்படியோ அது தங்கம் தானே. அதன் மதிப்பு ஒன்று தானே என்று யோசிக்கும் அளவுக்கு, தற்போது தங்கம் சார்ந்த முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் நகை பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி என்னவென்று கேட்கிறீர்களா? அது தங்கத்தின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது தான்.
ப்யூச்சர் வர்த்தகத்தில் விலை
கடந்த சில தினங்களாக ப்யூச்சர் வர்த்தகத்தில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் வியாழக்கிழமையன்று 40,283 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலையில் வர்த்தக தொடக்கத்திலேயே 40214 ஆக தொடங்கிய நிலையில், குறைந்தபட்சம் 39,970 ரூபாய் வரை சென்று, தற்போது 40,070 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் விலை
இதே சர்வதேச சந்தையிலும் கடந்த சில தினங்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், சிறிது சிறிதாக ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அவுன்ஸூக்கு 1560.35 டாலர்களாக தொடங்கிய நிலையில் தற்போது 1561..85 டாலராகவும், இதே இன்று குறைந்தபட்சமாக 1556.85 டாலர்களாகவும் வர்த்தகமாகியும், தற்போது சற்று ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் விலை பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், இந்தியாவில் ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த 10 தினங்களில், இரு நாட்களில் மட்டும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி 15 அன்று சவரன் தங்கம் விலை 30,120 ரூபாயாக இருந்த நிலையில், ஜனவரி 24 ஆன இன்று 30,522 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
என்ன காரணம்?
சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் பரவி வருவதை உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததையடுத்து, புதிய கொரோனா வைரஸின் மூலத்தை கண்டறியுமாறு சீனா அரசை வலியுறுத்திய உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸ் காய்ச்சலை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்கலாமா என்பதை தீர்மானிக்க ஒரு முக்கிய அவசர குழு கூட்டம் நடத்த உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது கவனிக்கதக்கது.
முதலீட்டாளர்கள் காத்திருப்பு
சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் ஜனவரி 28 மற்றும் 29 அன்று நடக்கவிருக்கும் அமெரிக்கா ஃபெடரல் வங்கி கூட்டத்தையடுத்து, வட்டி விகிதம் குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் தங்களது முதலீடுகளை குறைத்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் மீதான முதலீடும் குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையானது அதிகளவு ஏற்ற இறக்கம் இல்லாமல், தற்போது சற்று வீழ்ச்சி கண்டும் வருகிறது.
விலை எப்படி இருக்கும்
இது குறித்து அபான்ஸ் குழுமத்தின் தலைவர் அபிஷேக் பன்சால் கூறுகையில், தங்கத்தின் விலையானது சைடுவேஸ் ஆக வர்த்தகமாகவே வாய்ப்புள்ளதாகவும், எனினும் சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் பரவி வரும் நிலையில், பாதுகாப்பு காரணம் கருதி தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிக்க நிலையும் வரலாம். மேலும் டாலரின் வலுவான நிலை, மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையானது தங்கத்தின் விலையை அதிகளவில் ஏற்றம் காணாமல் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.