நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது தொடர்ச்சியான ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், ஒட்டுமொதத்தில் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
ஆக கடந்த சில மாதங்களாகவே அதிகம் லாபம் தரும் ஒரு முதலீடாக தங்கம் உள்ளது. அதுமட்டும் அல்ல நீண்டகால நோக்கில் தங்கத்தின் விலையானது அதிகரிக்கும் என்றே நிபுணர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
உலகின் பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் நிறுவனம் கூட, தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த பங்குகளில் முதலீடுகளை அதிகரித்திருப்பதாக செய்திகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியது. அந்தளவுக்கு தங்கம் முதலீடானது இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் பாதுகாப்பு புகலிடமாக விளங்குகிறது.
கோல்டு இடிஎஃப்பில் முதலீடு
இப்படி பாதுகாப்பு புகலிடத்தில் குவியும் முதலீடுகள், வெறும் தங்கமாக மட்டும் அல்ல, தங்கம் சார்ந்த முதலீடுகளிலும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பேப்பர் தங்கம் எனப்படும் கோல்டு இடிஎஃப், எம்சிஎக்ஸ் தங்கம், தங்க பத்திரம் உள்ளிட்டவற்றிலும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கோல்டு இடிஎஃப் எனப்படும் டிஜிட்டல் தங்கத்தில் கடந்த செப்டம்பர் காலாண்டில், கடந்த ஆண்டை காட்டிலும் 14 மடங்கு அதிகரித்து, 2,426 கோடி ருபாயாக அதிகரித்துள்ளது.
காரணம் என்ன?
கொரோனா தாக்கத்தின் மத்தியில், நிலையற்ற பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில், பாதுகாப்பற்ற முதலீடுகளை தவிர்த்து, பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றனர். இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்கா தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுகள் எப்படி வருமோ என்ற எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. இதனால் சிறந்த ஹெட்ஜிங் ஆக விளங்கும் தங்கத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இது தான் சிறந்த முதலீடு
நடப்பு ஆண்டில் தங்கமானது தொடர்ந்து லாபம் கொடுக்க கூடிய ஒரு அம்சமாகவே இருக்கும் என்று நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதற்கு காரணம் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலை, பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்றுகள், இதனால் பங்கு சந்தையில் எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும் என்பதை கணிக்க முடியாத நிலை, இப்படி பல காரணங்களால் தொடர்ந்து தங்கம் சிறந்த முதலீடாகவே பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் மொத்த முதலீடு
ஆக மொத்தத்தில் நடப்பு ஆண்டில் கோல்டு இடிஎஃப்-பில் நிகர வரத்து 5,957 கோடி ரூபாயாகும். இதே மாத வாரியாக பார்க்கும் போது 202 கோடி ரூபாயாகவும், இதே பிப்ரவரியில் 1,483 கோடி ரூபாயாகவும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதே மார்ச் மாதத்தில் 195 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.
இதே ஏப்ரல் மாதத்தில் 731 கோடி ரூபாயும், மே மாதத்தில் 815 கோடி ரூபாயும், ஜூன் மாதத்தில் 494 கோடி ரூபாயாகவும், ஜூலை மாதத்தில் 921 கோடி ரூபாயாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 597 கோடி ரூபாயும் வரவு தொடங்கியுள்ளது.
இதே நிர்வாகத்தின் கீழ் மொத்த சொத்துக்கள் செப்டம்பர் 2019ல் 5,613 கோடி ரூபாயில் இருந்து, செப்டம்பர் 2020ல் 13,590 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.