சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் (22 கேரட்) தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 30,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாட்டில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலரின் விலையில் ஏற்படும் மாற்றமும், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றமும், சர்வதேச காரணிகளும் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.
ஆக இது போன்ற பல காரணிகளை பொருத்து தான் இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தங்கம் விலை
இந்தியாவினை பொறுத்தவரையில் கடந்த ஜனவரி மாதம் தங்கம் விலையானது உச்சத்தினை தொட்ட நிலையில், நடப்பு மாதத்தில் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினங்களாகவே தங்கம் விலை சற்று இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
தங்கம் விலை வீழ்ச்சி
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 29 ரூபாய் குறைந்து 3,869 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே சவரனுக்கு 232 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 30,952 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலை இன்று சிறிதளவு குறைந்துள்ளது.
வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளியின் விலை 49 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 49,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நான்கு தினங்களாக வெள்ளியின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஐந்து நாட்கள் ஏற்றத்துக்கு பிறகு, தங்கத்தின் விலையானது 1571.25 டாலராக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய வர்த்தக முடிவில் இருந்து அவுன்ஸூக்கு 8.35 டாலர்கள் குறைந்து 1571.25 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 0.52% வீழ்ச்சியாகும்.
ப்யூச்சர் வர்த்தகத்தில் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாகவே இந்திய ப்யூச்சர் வர்த்தகத்தில் 231 ரூபாய் வீழ்ச்சி கண்டு, தற்போது 40,448 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையை போலவே இந்த ப்யூச்சர் வர்த்தகத்திலும் கடந்த நான்கு சந்தை தினங்களாகவே தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று சற்று குறைந்திருப்பது, தங்க ஆபரண விலையிலும் எதிரொலித்துள்ளது.
விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
சீனாவினை படுத்தி எடுத்து வரும் கொரோனா வைரஸால் இறப்பு எண்ணிக்கை 1000-த்தையும் தாண்டியுள்ளது. இந்த நிலையில் சீனாவில் இன்று 108 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதில் கொஞ்சம் சந்தோஷப்படக் கூடிய விஷயம் என்னவெனில் இன்று 2,478 பேர் இந்த கொடிய வைரஸின் தாக்கம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் நேற்று 3,062 பேர் இந்த கொடூரமான வைரஸ் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டது என்றும் சீனா சுகாதார துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
வீழ்ச்சியடையும் விலை
மேலும் அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி, நிலவி வரும் மிதமான வளர்ச்சி, வேலைவாய்ப்பு சந்தையை மேற்கோள் காட்டி வட்டி குறைப்பு செய்யாமல் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தங்கம் விலை இன்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
பாதுகாப்பான முதலீடு
அமெரிக்கா பொருளாதாரம் நன்றாக உள்ளது என்றும், இதனால் பெடரல் ரிசர்வ் வங்கி தற்போதைக்கு விகிதங்களை சீராக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வங்கியின் மூத்த அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பற்றிய கவலைகள், முதலீட்டாளர்களை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய தள்ளியதால், தங்கம் விலை அதிகரித்தது.